நீராகாரம்

நீராகாரம் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 குவளை
தண்ணீர் – தேவைக்கும் அதிகமான அளவு
தண்ணீரில் ஊற வைத்த பழைய சாதம் & நீர் – 1 குவளை
உப்பு – சிறிதளவு
காயம் – சிறிதளவு

செய்முறை:

  1. அரிசியைக் களைந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஒரு பானையில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
  3. அதிகம் கொதிக்க விடாது( நீர்க்குமிழிகள் பானையின் அடியில் தெரியும் நேரத்தில்) களைந்த அரிசியைச் சேர்த்துக் கிளறி விடவும்.
  4. அரிசி வெந்தத என்று கிளறும் போது சாதத்தைப் பதம் பார்க்கவும்.
  5. பிறகு இன்னொரு பாத்திரத்தில் சாதம் வெந்த நீரை வடிக்கவும்.
  6. வடித்த நீரை 5 மணி நேரம் மூடி வைக்கவும்.
  7. பழைய சாதம் வடித்த நீர், ஒரு குவளை மசித்த பழைய சாதம் எடுத்துக்கொள்ளவும்.
  8. சாதம் வேக வைத்த நீருடன் பழைய சாதம் வடித்த நீர், மசித்த பழைய சாதம் சேர்த்து, உப்பு, பெருங்காயம் சேர்க்கவும்.
  9. வெறுமனே குடிக்கும் போது அமிழ்தமாக இருக்கும், தொட்டுக்கொள்ள மோர் மிளகாய், வறுத்த சுண்டைக்காய் வற்றல், கண்டங்கத்திரி வத்தல், நாத்தங்காய்(இது சேர்க்கும் போது நீராகாரத்தில் உப்பு சேர்க்கத் தேவை இல்லை) சேர்த்து உண்ணும் போது சுவை அள்ளும், வளரும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்ற உணவு. உணவே அருமருந்து.
  10. உடல் சூட்டைத் தணிக்கும், செரிமானப்பிரச்சினைகளைச் சரி செய்யும் உடலின் ஆரோக்கியத்தைச் சீராக வைக்கும் நீராகாரத்தைப் பருகி உடல் நலனைக் காப்போம்.

நீராகாரம் – நன்மைகள்

சாதாரண மக்களாலும் பின்பற்றத் தக்க வகையில் அமைந்த எளிய மருத்துவ முறையே சித்த மருத்துவ முறையாகும். சித்த மருத்துவம் நோய் உண்டாவதற்கான காரணங்களைத் தெளிவாக எடுத்துரைக்கிறது. அதாவது, மனித உடல் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று நிலைகளால் ஆனது என்றும், இவை சமநிலையில் இயங்கும் போது உடல் ஆரோக்கியமாக இருக்கும். சம நிலையை இழந்து இயங்கும் போது நோய்கள் ஏற்படுகின்றன என்பதும் சித்தர்களின் கருத்தாகும்.

இதனையே,

“மிகினும் குறையினும் நோய்செய்யும் மேலோர்வளிமுதலா எண்ணிய மூன்று” (குறள் : 941)என்கிறார் வள்ளுவர்.

மருத்துவ நூலோர் குறிப்பிடும் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் அளவில் குறைந்தாலும் மிகுந்தாலும் நோய் உண்டாகும் என்பதே வள்ளுவரின் கருத்துமாகும். மேலும் அவர் மருந்து என்னும் அதிகாரத்தில் (95) மருத்துவம் குறித்துச் சிறப்பாக விளக்கியுள்ளார்.

வாதம்:-சித்த மருத்துவம் கூறும் வாதம் என்பது உடல் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் வாயுவைக் குறிப்பதாகும். நம் உடலின் இயக்கத்தை, தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியாக மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக்கொள்ளும்.

பித்தம்:-பித்தம் என்பது உடலில் உயிர் தங்குவதற்கு ஆதரவு நிலையாக இருக்கும் உடல் வெப்பத்தைக் குறிப்பதாகும். இந்த வெப்பம் உணவு எரிக்கப்பட்டுச் சக்தியாக மாற்றப்படும் போது உண்டாவதாகும். வெப்பத்தால் உடலைக் காப்பது, ரத்த ஓட்டம், மன ஓட்டம், செரிமான சுரப்பிகள், நாளமில்லாச் சுரப்பிகள் போன்ற அனைத்தையும் இயக்கும் வேலையைப் பார்க்கும்.

கபம்:-கபம் என்பது உடலின் குளிர்ச்சியைக் குறிப்பிடுவதாகும். உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து, எல்லாப் பணிகளையும் தடையின்றிச் செய்ய உதவியாக இருக்கும்.வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியான கூட்டணியாகப் பணிபுரிந்தால்தான், உடல் இயக்கம் சீராக நடக்கும். இவை மூன்றும் தாம் இருக்க வேண்டிய அளவில் மிகுந்தாலும்,குறைந்தாலும் நோய் தோன்றக் காரணமாக அமையும்.இதன் அடிப்படையிலேயே 1482 வகையான நோய்கள் வாதத்தினால் ஏற்படுபவை என்றும், 1483 வகையான நோய்கள் பித்தத்தினால் வருபவை என்றும், 1483 வகையான நோய்கள் கபத்தால் தோன்றுபவை என்றும் சித்த மருத்துவர்களாலும் மருத்துவ நூல்களாலும் குறிப்பிடப்படுகின்றன.

நீராகாரம்-சோற்றுநீர்-பயன்கள்அறுபது வயதைக் கடந்த பிறகும், திடகாத்திரமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர் யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்… `உங்கள் ஆரோக்கியத்துக்குக் காரணம் என்ன?’ என்று. சட்டென்று `பழைய சோறு, கம்பங் களிதான்… வேற என்ன? என்று பதில் சொல்வார். பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டுவந்த பழக்கம், நம் பாரம்பர்யத்துக்கு உண்டு. சமீபத்தில், அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutirition Association,) பழைய சோற்றின் பெருமைகளையும் பலன்களையும் பட்டியலிட்டிருந்தது. அதன்பிறகு விழித்துக்கொண்ட இன்றைய தலைமுறை, கூகுளில் பழைய சாதத்தைத் தேட ஆரம்பித்திருக்கிறது. வாதம், பித்தம், கபம் இந்த மூன்றையும் சமநிலையில் வைத்திருக்க உதவும் ஒரு பழமையான உணவுத்தான் நீராகாரம்..

நீராகாரம், பழஞ்சோறு, பழைய சாதம், பழையது என்று பலவிதமாய் அழைக்கப்படும் பழைய சாதத்திற்கு இணையான எளிய உணவு ஒன்றை இவ்வுலகில் எவராலும் காட்ட இயலாது. அத்தகு பெருமை வாய்ந்தது இப்பழைய சாதம்!

பழைய உணவென்றாலே நலக்கேடுதானே தரும், அப்படியிருக்க இது மட்டும் எப்படி அருமருந்தாகிறது; அரிய உணவாகிறது? என்று நீங்கள் கேட்கலாம்.பழைய சாதத்தைக் குளிர்பதனப் பெட்டியில் வைத்து மறுநாள் சாப்பிடுவதுதான் கேடு பயக்கும். மாறாக, சாதத்தை தண்ணீரில் வேக வைத்து வடித்துக் கொட்டும் தண்ணீருடன், சிறிது உப்பு, மோர், காயம், பழைய சாதம் ஊற வைத்த கரைத்த நீர் சேர்த்து உண்டால் அதுதான் அற்புத உணவாகிறது. இன்றைக்கு மருத்துவர்கள் கூறும் எல்லா ஊட்டச் சத்துக்களும் இதில் உண்டு!அதற்கு என்ன காரணம்?

இரவு முழுக்க நீருடன் சாதம் ஊறும்போது, அதில் நுண் உயிரிகள் (லாக்டிக் ஆசிட் பாக்டீரியா) கோடிக்கணக்கில் பெருகுகிறது. அதனோடு வைட்டமின் பி6, பி12 போன்றவையும் இதில் அதிகம் உள்ளன. பழைய சாதம் புளித்து நொதிக்கும்போது இந்த விளைவுகள் உண்டாகின்றன.சாதாரண தானியங்கள், பருப்புகளைவிட முளைகட்டிய பின் அவை பலமடங்கு சக்தியும், சத்தும் மிக்கனவாய் மாறுவது போலவே, பழைய நீரில் நொதிக்கும்போது அதன் பயன் பன்மடங்கு உயருகிறது.

அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் பட்டியலிட்டிருக்கும் பழைய சோற்றின் நன்மைகள்:

* உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இதில் இருக்கின்றன.*

*காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.

* இந்த உணவு, நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், மலச்சிக்கலை நீக்கும்;

*உடல் சோர்வை விரட்டும்.

* ரத்த அழுத்தம் சீராகும்; உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியச்செய்யும்.

* முழு நாளைக்கும் நம்மை சோர்வின்றிப் புத்துணர்வுடன் உணரவைக்கும்.

* ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும்.

* எல்லாவிதமான வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு வரப்பிரசாதம்.

* புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும். *

*வனப்பைத் தரும்;

*இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க உதவும். பழைய சாதம் இருக்கும் இடம், ஆரோக்கியம் குடியிருக்கும் இடம். தமிழர் பாரம்பர்யம் ஆரோக்கியத்தைப் போற்றிப் பாதுகாத்துவந்தது என்பதை நிரூபிக்கும் மற்றுமோர் ஆதாரம், பழைய சாதம் பாரம்பர்யத்தைப் போற்றுவோம்!

நன்றி: இயற்கை மருத்துவம்

கின்வா பீட்ரூட் புலாவ்(Quinoa pulav)

image

தேவையானவை:

கின்வா(Quinoa)- ஒரு கப்
தண்ணீர்- ஒன்றரை கப்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் பொடி,இட்லி மிளகாய்ப்பொடி, கரம் மசாலாப்பொடி- தலா 1/2 தேக்கரண்டி 

தாளிக்க:

எண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- ஒரு தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாவற்றல்- 3
பச்சைமிளகாய்- 2
கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி
கொத்தமல்லி- அலங்கரிக்க
எலுமிச்சைச்சாறு- 2 தேக்கரண்டி

வேக வைத்து வதக்க:

துருவிய பீட்ரூட்- 2 கப்
காரட், பட்டாணி- 1 கப்

செய்முறை:

1. கின்வாவை நன்றாக இரண்டு, மூன்று முறை அலம்பி 30 நிமிடத்திற்கு ஊற வைக்கவும்
2. அடுப்பை ஏற்றி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாவற்றல், பச்சைமிளகாய் தாளிக்கவும்
3. பீட்ரூட்டைத் துருவித் தாளித்ததுடன் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும். ஐந்து நிமிடங்களில் வதங்கி விடும்.
4. தனியே ஒரு பாத்திரத்தில் காரட் பட்டாணியைச் சிறிதளவு நீர் விட்டு வேக வைக்கவும். வெந்ததும் பீட்ரூட்டுடன் கலக்கவும்.
5. கின்வாவை அலசி ஒரு கப்பிற்கு ஒன்றரை கப் தண்ணீர் விட்டு அடுப்பைக் குறைந்த தீயில் விட்டு வேக விடவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து உப்பு, எண்ணெய் சேர்த்துக் கிளறி விடவும்.
6. வேக வைத்தக் காய்கறிக்கலவையை வெந்த கின்வாவுடன் சேர்க்கவும்.
7. சிறிதளவு இட்லிமிளகாய்ப்பொடி, கரம் மசாலாப்பொடி சேர்த்துப் பதமாகக் கிளறவும்.
8. எலுமிச்சைச்சாறு பிழிந்து ஒன்றாகக் கலந்து எண்ணெய் விட்டு, கொத்தமல்லியைத் தூவவும்.

மிகவும் அருமையான எளிமையான ஆரோக்கியமான உணவு இது. புரதச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த குறைந்தக் கலோரிகள் கொண்ட உணவு கின்வா. 

 

வறுத்தரைத்த மோர்க்குழம்பு

morkulambu (2)

தேவையானவை:

குடமிளகாய்- 1
கத்திரிக்காய்- 2
வெண்டைக்காய்- 6
தயிர்- 1 டம்ளர்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி

வறுத்தரைக்க:

கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
துவரம்பருப்பு- 1 தேக்கரண்டி
தனியா- 2 தேக்கரண்டி
வெந்தயம்- 1 தேக்கரண்டி
இஞ்சி- 1 துண்டு
மிளகாய்வற்றல்- 4
தேங்காய்- கால் மூடி

தாளிக்க:
எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 2 தேக்கரண்டி

செய்முறை:

1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வறுக்க வேண்டிய பொருட்களை வதக்கி(தேங்காய் தவிர) ஆற விட்டு மின்னரைப்பானில் அரைக்கவும். தேங்காயைப் பச்சையாகப் போடாமல் வறுத்தும் போடாமல் வறுத்தப் பொருட்களை ஆற விடும் போது அந்த சூட்டிலேயே போட வேண்டும். ஆறியதும் அரைக்க வேண்டும். நன்றாக அரைத்ததும் தயிரையும் மின்னரைப்பானில் போட்டு ஒரு சுற்றுக்கு அரைக்க வேண்டும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு குடமிளகாய், கத்திரிக்காய், வெண்டைக்காயைப் போட்டு ஐந்து நிமிடங்களுக்கு வதக்க வேண்டும்.
3. பிறகு தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து காய்களை வேக விட வேண்டும்.
4. வறுத்து அரைக்க வேண்டியதை அரைத்து காய் வெந்ததும் அரைத்தக் கலவையைப் போட வேண்டும். அடுப்பைக் குறைந்த தீயில் வைக்கவும்.
5. தயிர் விட்டதால் அதிக நேரம் கொதிக்க விடக் கூடாது. ஒரு பத்து நிமிடங்கள் குழம்பு கொதித்ததும் தனியே ஒரு பாத்திரத்தில் எண்ணெயிட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்க வேண்டும். தாளித்ததைக் குழம்பில் கொட்டி இறக்க வேண்டும்.

மோர்க்குழம்பிற்கு பீன்ஸ் அல்லது அவரைக்காய் பருப்புசிலி அருமையான இணை.

புளியிட்ட கீரை

puliyitta keerai

தேவையானவை:

அரைக்கீரை அல்லது பசலைக்கீரை- ஒரு கட்டு
புளி- எலுமிச்சை அளவுக்கும் சிறிது மேலே
வெந்தயம்- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2

 

தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 மேசைக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி

செய்முறை:

1. புளியை நன்றாகக் கரைத்து வைக்கவும்.
2. மண் போகக் கீரையை அலசி வைக்கவும்.
3. மிதமான சூட்டில் ஒரு வாணலியில் வெந்தயத்தையும் மிளகாய்வற்றலையும் சிவக்க வறுத்துத் தனியே வைக்கவும்.
4. பிறகு ஒரு பாத்திரத்தில் கீரையைப் போட்டு 2 டம்ளர் அளவு கரைத்துள்ள புளிக்கரைசலை விடவும். சிறிதளவு உப்பு சேர்க்கவும்.
5. வறுத்து வைத்துள்ள வெந்தயம், மிளகாய்வற்றலைக் கீரை, புளிக்கலவையுடன் சேர்த்துக் கொதிக்க விடவும்.
6. கீரை வெந்ததும் காற்றாட ஆற விட்டு பிறகு மின்னரைப்பானில் அரைக்கவும்.
7. நல்லெண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளிக்க வேண்டும்.
8. அரைத்தப் புளியிட்ட கீரையுடன் கடுகு தாளிசத்தைச் சேர்க்கவும்.
9. செய்வதற்கு எளிதான புளிப்பான புளியிட்ட கீரையை பத்து நிமிடங்களில் தயாரித்து விடலாம்.
10. குழம்பு செய்வதற்குப் பதிலாகப் புளியிட்ட கீரையும் பொரியல், அப்பளம் செய்து உண்ணலாம்.

முருங்கைக்கீரை மகத்துவங்கள்

முருங்கைக்கீரையின் மருத்துவ குணம் பற்றிய தகவல் !!!

முருங்கை மரத்தைப் பொறுத்த வரை முருங்கைக்காய், முருங்கைப் பூ முருங்கைக்கீரை இவை அற்புதமான மருந்துப் பொருளாகும், முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் நிறைய…

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது.

இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும்,உறுதியும் கிடைக்கும். முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும்.

மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக்கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடவேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும். பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.

முருங்கைக் கீரை சாப்பிட்டால் பெறும் பயன்கள்:
முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்குப் பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு ‘விந்து கட்டி’ என்றபெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.

முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது.

முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம்.

முருங்கைப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான்என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும். முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்த சுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.

கர்ப்பப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்படுத்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது.

முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை, குடலில்ஏற்படும் திருகுவலு, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.
விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலிகளில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்துப பருகிவர காசநோய் ,கீழ்வாயு, முதுகுவலி குணப்படும்.

 

வைட்டமின்கள் : முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது.
ஈரபதம்-75.9%
புரதம்-6.7%
கொழுப்பு-1.7%
தாதுக்கள்-2.3%
இழைப்பண்டம்-0.9%
கார்போஹைட்ரேட்கள்-12.5%
தாதுக்கள்,வைட்டமின்கள்,
கால்சியம்-440 மி,கி
பாஸ்பரஸ்- 70மி.கி
அயன்- 7 மி.கி
வைட்டமின் சி 220 மி.கி

வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்…
இத்தனை பயன் உள்ள முருங்கைகீரையை சாப்பிட்டு உடல் நலத்தை பாதுகாக்கவும்…

http://sugavanam-tamil-readings.blogspot.com/2012/05/blog-post_9161.html

முருங்கைக்கீரை பற்றிய தகவல்களுக்கு நன்றி.

முருங்கைக்கீரை பொரியல்

IMG_5202

தேவையானவை:

முருங்கைக்கீரை- 4 டம்ளர்
பயத்தம்பருப்பு- 1 கப்
பெருங்காயம்- சிறிதளவு
தேங்காய்த்துருவல்- 4 தேக்கரண்டி

தாளிக்க:
எண்ணெய்- 1 மேசைக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1

செய்முறை:

1. முருங்கைக்கீரையை ஆய்ந்து மண் போக அலசி ஒரு நீர் உறிஞ்சும் காகிதத்தால் துடைத்து வைக்கவும்.
2. குக்கரில் பாசிப்பருப்பை விசில் வரும் முன்பே உதிரியாய் சுண்டலுக்கு வேக வைப்பது போல வேக வைத்து எடுத்து வைக்கவும்(பாசிப்பருப்பு விரைவில் குழைந்து வெந்தும் விடும், அளவாகத் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்களுக்குள் எடுத்து விட வேண்டும்)
3. மைக்ரோ வேவ் உள்ளவர்கள் பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் குறைவான நீர் விட்டு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கலாம்.
4. தாளிசப்பொருட்களைத் தாளிசம் செய்து கொண்டு முருங்கைக்கீரையைப் போட்டு உப்பு சேர்த்து(தண்ணீர் விடத் தேவையில்லை) நன்றாக வதக்கவும்.கீரை வகைகள் செய்யும் போது கணிசமாகத் தோன்றும் கீரை வெந்ததும் குறைவாக இருக்கும், எனவே உப்பு மிகவும் குறைவாகப் போட வேண்டும்.
5. தனியே ஒரு வாணலியில் பாசிப்பருப்பை வதக்கி உதிராக்கவும். உப்பு சேர்க்கவும்.
6. முருங்கைக்கீரை வெந்த பிறகு பாசிப்பருப்பு சுண்டலை அதனுடன் சேர்த்து வதக்கி தேங்காய்த்துருவலைப் போட்டு இறக்கவும்.
7. சாம்பார், வத்தக்குழம்பும், மோர்க்குழம்பு, ரசம், தயிர் சாதம் போன்றவற்றிற்கு அசத்தலான பொரியலாக முருங்கைக்கீரை பொரியல் அமையும்.  முருங்கைக்கீரையைப் பொரியலாக மட்டுமில்லாமல் சாம்பார், கூட்டு, தால், வடை, அடை போன்ற பலவகைகளில் சமைத்துப் பயன்படுத்திப் பலன் பெறலாம், பலம் பெறலாம்.

காராமணி மாங்காய்க்குழம்பு

IMG_4776

தேவையானவை:

 
வேக வைத்தக் காராமணி – 1 குவளை
மாங்காய்- சிறியது ஒன்று
வேக வைத்தத் துவரம்பருப்பு- 1 கப்
புளி- நெல்லிக்காய் அளவு
சாம்பார் தூள்- 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி- சிறிதளவு
காயம்- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- சிறிதளவு
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 1
மிளகாய்வற்றல்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

1. காராமணியை ஒரு மணி நேரம் ஊற வைத்து குக்கரில் தண்ணீர், உப்பு சேர்த்து காராமணியை 3 விசில் வருமாறு வேக விடவும். துவரம்பருப்பைக் குழைவாக வேக வைக்கவும்.
2. ஒரு வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு தோல் சீவிய மாங்காயை நன்றாக வதக்கவும்.
3. வேக வைத்தக் காராமணியைச் சேர்த்து புளிக்கரைசல்(3 டம்ளர்) விடவும்.
4. இதனுடன் உப்பு, சாம்பார் தூள், காயம்சேர்த்து வேக விடவும்.
5. காயும் பயறும் வெந்ததும் வேக வைத்தப் பருப்பைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.
6. நல்லெண்ணெய் சிறிது விட்டுக் கறிவேப்பிலை கிள்ளிப் போட்டுப் பரிமாறவும்.
7. சாதம், தோசை, இட்லி போன்றவற்றிற்கு அருமையான இணையுணவு. புளிப்பும் காரமும் சேர்ந்த மணமணக்கும் குழம்பு இது. வெங்காயம்  சேர்க்க விரும்புவர்கள் மாங்காயை வதக்கும் முன் வெங்காயத்தைப்  பச்சை வாசனை போக வதக்கிச் சேர்க்கலாம்.

அரிசி உப்புமா

Upma

தேவையானவை:

பச்சரிசி- ஒன்றரை கப்
உப்பு- தேவையான அளவு
தேங்காய்த்துருவல்- கால் மூடி
திரித்தத் துவரம்பருப்பு- ஒரு கைப்பிடி

தாளிக்க:

எண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 3 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2
பச்சைமிளகாய்- 1
முந்திரிப்பருப்பு- 10
இஞ்சி- 1 துண்டு
கறிவேப்பிலை- 2 இணுக்கு

செய்முறை:

1. அரிசியை 3 மணி நேரம் சுடுதண்ணீரில் ஊற விட வேண்டும்.
2. அரிசியை ஈரம் போக உலர்த்தி மின்னரைப்பானில் உப்பு சேர்த்து நற நற பதத்திற்கு(மையாக அரைக்காமல்) அரைத்து எடுக்கவும்.
3. துவரம்பருப்பைத் திரித்துக் கொள்ளவும்.
4. ஒன்னரை கப் அரிசிக்கு 4 கப் தண்ணீரைத் தனியே சுட வைக்கவும்.
5. ஒரு வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு அரைத்த அரிசிக்கலவையைச் சேர்த்து கை பொறுக்கும் சூட்டில் வதக்கவும்.
6. கொதிக்கும் சுடு நீரை அரிசிக்கலவையுடன் கொட்ட வேண்டும், பிறகு திரித்தத் துவரம்பருப்பு(இதுவும் நற நற பதம்), காயம், தேங்காய்த் தூள் சேர்த்துக் கிளற வேண்டும்.
7. 8 நிமிடங்களில் அரிசி உப்புமா வெந்து விடும்.
8. பிறகு கறிவேப்பிலை தூவி எண்ணெய் விட்டு இறக்கவும்.
9. அரிசி உப்புமாவிற்குக் காரச்சட்னி அருமையான இணையுணவு.
10. இதே உப்புமாவைக் கொழுக்கட்டையாகப் பிடித்து அரிசி உப்புமா கொழுக்கட்டையாக்கலாம்.

கோதுமை ரவா உப்புமா

wheat_rava_upma (1)

தேவையானவை:

கோதுமை ரவை- 1 கப்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் பொடி- சிறிதளவு
வெங்காயம்- 1
தக்காளி- 1
இஞ்சி- 1 துண்டு

தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1
பச்சை மிளகாய்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க

செய்முறை:

1. கோதுமை ரவையைச் சிவக்க வறுத்துத் தனியே தாம்பாளத்தில் ஆற விடவும்.
2. தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு அதிலேயே நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தைப் போட்டுச் சிவக்க வதக்கவும், அடுத்துத் தக்காளி போட்டு வதக்கவும்.
3. பிறகு 2 டம்ளர் தண்ணீர் விடு சுட வைக்கவும்.
4. தண்ணீர் கொதித்துக் காய்கறி வெந்து வரும் போது வறுத்து ஆற விட்ட கோதுமை ரவையை அடிப் பிடிக்காமல் கிளறி வரவும்.
5. தீயைக் குறைத்து வைத்து, 5 நிமிடங்கள் வேக விட சுவையான, சத்துள்ள கோதுமை ரவை தயார். கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவவும். சட்னியோடு பரிமாற ருசி அள்ளும்.

இட்லி உப்புமா

தேவையானவை:

DSC05623

இட்லிகள்- 10
இட்லி மிளகாய்ப்பொடி- 1 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகைவற்றல்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு
பெரிய வெங்காயம்- 1

செய்முறை:

1. காலையில் செய்து மீந்த இட்லிகளையோ புதிதாகத் தயாரித்த இட்லிகளையோப் பயன்படுத்தலாம்.
2. தாளிசப்பொருட்களை ஒரு வாணலியில் தாளித்துக் கொண்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும்.
3. இட்லிகளை உதிர்த்துக் கொள்ளவும்
4. தாளிசப்பொருட்களோடு இட்லியைக் கலந்து இட்லி மிளகாய்ப்பொடியையும் சேர்த்துக் கிளறிச் சூடாகப் பரிமாறவும்.
5. மீந்த இட்லிகள் கனமாக ஆகி விடும், வீணடிப்பதற்குப் பதிலாக இவ்வகையில் சுடச்சுட உப்புமா செய்தால் உனக்கு, எனக்கு எனப் போட்டிப் போட்டு கிடுகிடுவென வியாபாரம் ஆகி விடும்.