லட்டு – பூந்திலட்டு

Image

தேவையானவை:

கடலைமாவு- 2 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 3 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – சிறிதளவு
உடைத்த முந்திரி – சிறிதளவு
உலர்திராட்சை – சிறிதளவு
எண்ணை – பூந்தி செய்ய
ஜல்லி கரண்டி/பூந்தி கரண்டி

செய்முறை:

1.கடலைமாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்குக் கரைக்கவும்.
2. வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
3.எண்ணெய் நன்கு காய்ந்ததும் பூந்தி கரண்டியை எண்ணெய் மேலாகப் பிடித்து சிறிதளவு கடலைமாவு கலவையை அதில் ஊற்றி பூந்திகளைப் பொரித்தெடுக்கவும்.
4.மற்றொரு பாத்திரத்தில் 2 கப் சர்க்கரை, 3/4 கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். ( ஆள்காட்டி விரலில் எடுத்துப் பார்த்தால் கம்பி போல் வரவேண்டும்)
5.நெய்யில் முந்திரி, உலர்திராட்சை யைப்பொரித்து நெய்யுடன் ஏலக்காய் சேர்த்து பாகில் கலக்கவும்.
6.பூந்தியைப் பாகுடன்(சூடாக இருக்கும் போதே) ஒன்று சேர்க்கவும்.
7.கையில் நெய்யைத் தடவிக் கொண்டு கை பொறுக்கும் சூட்டிலேயே லட்டுகளாக உருண்டைகள் பிடித்துப் பரிமாறவும்.

பின்குறிப்புகள்:

1. புதிதாக இனிப்பு வகைகள் முயற்சிப்பவர்கள் சிறிதளவு செய்து பார்த்து பதம், பக்குவம் புரிந்து கொண்டு அடுத்த முறை அதிக அளவில் செய்து பார்க்கலாம்.
2. பூந்திக் கரண்டி கண்ணளவு சிறிதாக இருத்தல் நல்லது.
3. சில நேரங்களில் இவ்வகை இனிப்புகள் செய்யும் போது தோல்வியைச் சந்தித்தால் துவளக் கூடாது, மனம் தளராமல் மீண்டும் முயற்சிக்கவும்.
4. லட்டுகள் நன்றாக அமைந்து விட்டால் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ என்று குடும்பத்தினரைக் கூவி அழைத்து லட்டுகளை விளம்பரப்படுத்தலாம், லட்டு பிடிக்க வரவில்லையா? பூந்தி செய்தேன் என்று மழுப்பி விடலாம்.

 ——————————————————————–

பிஸ்தா பர்ஃபி

Image

தேவையானவை:

பிஸ்தா பருப்பு(உப்பில்லாதது)- 1 டம்ளர்
சர்க்கரை- 2 1/2 டம்ளர்
நெய்- 1/4 டம்ளர்
நீர்- 3/4 டம்ளர்
ஏலக்காய்த்தூள்- 1/2 தேக்கரண்டி

செய்முறை:

1. ஒரு வாணலியில் நெய்யை விட்டுப் பிஸ்தா பருப்புகளை ஓரிரு நிமிடங்களுக்கு வதக்கவும்.
2. ஆற வைத்துப் பிஸ்தாவை மின்னரைப்பானில் தண்ணீர் விட்டு அரைக்கவும்.
3. சர்க்கரையைக் கொடுக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவைப் பயன்படுத்திப் பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
4. பாகில் அரைத்தப் பிஸ்தாக் கலவையைக் கொட்டிக் கிளறவும்.
5. ஒட்டாமல் கெட்டியான பதம் வந்ததும் ஏலக்காய்த்தூளைக் கலந்து நெய்யை விட்டுக் கிளறி வேறு நெய் தடவிய தாம்பாளத்திற்கு மாற்றி ஆற விட்டு வில்லைகள் போடவும்.
6. சுவையான பிஸ்தா பர்பி தயார்.

பின்குறிப்பு:

சர்க்கரைப்பாகு வைக்க விரும்பாதவர்கள் பிஸ்தாப்பருப்பு, சர்க்கரை ஒன்றாகக் கலந்து குறைந்த தீயில் அடுப்பை ஏற்றிக் கூடுதல் நேரமெடுத்தாலும் கெட்டியாகும் வரைப் பொறுமையாகச் செய்து வில்லைகள் செய்து கொள்ளலாம்.
—————————————————————————————-

 

முந்திரிப்பருப்பு பர்பி

முந்திரிப்பருப்பு பர்பி அல்லது கேக் என்றழைக்கப்படும் இதுவும் பாதாம்பருப்பிற்குச் சொன்ன செய்முறையே தான்.

Image

தேவையானவை:

முந்திரிப்பருப்பு- 1 டம்ளர்
சர்க்கரை- 2 டம்ளர்
நெய்- 3/4 டம்ளர்

செய்முறை:

Image

1. முந்திரிப்பருப்புகளைச் சுடு தண்ணீரில் அரை மணி நேரத்திற்கு ஊற விடவும்.
2. மின்னரைப்பானில் முந்திரிப்பருப்புகளை விழுதாக அரைக்கவும்.
3. மிதமானல் தீயில் வாயகன்ற கனமான வாணலியில் நெய்யை விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.
4. இதனுடன் சர்க்கரையைச் சேர்க்கவும்.
5. மிதமான தீயில் கலவையைக் கிளறிக் கொண்டே வரவும்
6. கெட்டியான பதத்தின் போது நெய்யை விட்டுக் கிளறி நெய் தடவின தாம்பாளத்தில் மாற்றிக் கொட்டவும்,சமப்படுத்தி வில்லைகள் போடவும்.

Image
7. சுவையான முந்திரிப்பருப்பு கேக் தயார்.
8. தோல் நீக்கி ஊற வைத்தப் பாதாம்பருப்பு அரை கப், ஊற வைத்த முந்திரிப்பருப்பு அரை கப் சேர்த்துப் பாதாம்-முந்திரி பர்பி செய்யலாம். 

 

 

பாதாம் பர்பி

Image

தேவையானவை:

பாதாம்பருப்பு- 1 டம்ளர்
சர்க்கரை- 2 டம்ளர்
நெய்- 3/4 டம்ளர்

செய்முறை:

1. பாதாம்பருப்புகளைச் சுடு நீரில் ஊற வைத்துத் தோல் நீக்கிக் கொள்ளவும்.
2. மின்னரைப்பானில் பாதம்பருப்புகளை விழுதாக அரைக்கவும்.
3. மிதமானல் தீயில் வாயகன்ற கனமான வாணலியில் நெய்யை விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.
4. இதனுடன் சர்க்கரையைச் சேர்க்கவும்.
5. மிதமான தீயில் கலவையைக் கிளறிக் கொண்டே வரவும்
6. கெட்டியான பதத்தின் போது நெய்யை விட்டுக் கிளறி நெய் தடவின தாம்பாளத்தில் மாற்றிக் கொட்டவும்,சமப்படுத்தி வில்லைகள் போடவும்.
7. பாதாம் பர்பி அல்லது கேக் என்றழைக்கப்படும் ருசியான இனிப்பை மிகவும் எளிதாகச் செய்து விட முடியும்.
—————————————————————————-

 

ரவா லாடு

இதுவும் ஏற்கனவே நாம் சுவைத்த ‘மாலாடு’ போலத்தான். பொரிகடலைக்குப் பதில் ரவை சேர்க்க வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் தகவல்களையும் கவனத்தில் கொள்ளவும்.

Image

தேவையான பொருட்கள்:

ரவை – 1 டம்ளர்
சர்க்கரை – 2 1/4 டம்ளர்
நெய் – அரை டம்ளர்
முந்திரிப்பருப்பு – 10
ஏலக்காய் – 4 (பொடித்தது)

செய்முறை

1. ரவையைச் சிவக்க வறுக்கவும்.
2. வறுத்த ரவையை ஆற விட்டு, பின் மின்னரைப்பானில் மையாகத் திரித்துக் கொள்ளவும்.
3. ரவையுடன் சர்க்கரையையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.
4. நெய்யில் முந்திரிப்பருப்பைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
5. திரித்த ரவையுடன் பொடித்த ஏலக்காய், நெய்யில் வதக்கிய முந்திரிப் பருப்பைச் சேர்க்கவும்.
6. இந்த மாவை சிறிது சிறிதாக நெய் விட்டுப் பிசைந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
7. உருண்டைப் பிடிக்க வரவில்லையென்றால் சிறிது சூடான பாலைத் தெளித்தும் உருண்டைகள் செய்யலாம்.

கூடுதல் தகவல்கள்:

1. பாலைச் சிறிது சிறிதாகத் தெளித்தே மாவை உருண்டை பிடிக்க வேண்டும். அதிகம் பால் விட்டால் கொழகொழத்து உருண்டை பிடிக்க வராது.
2. ரவையை நன்கு சிவக்க வறுக்க வேண்டும். இல்லையென்றால் பச்சை வாடை அடித்து சுவையைக் கெடுத்து விடும்.
3. ரவையைச் சிவக்க வறுத்து வைத்துக் கொண்டால், தேவைப்பட்ட போது உடனடியாக ரவாலாடைத் தயார் செய்து கொள்ள முடியும்.

மாலாடு

Image

தேவையானவை:

பொட்டுக்கடலை- 1 டம்ளர்
சர்க்கரை(சீனி)- 2 டம்ளர்
நெய்- 3/4 டம்ளர்
ஏலக்காய்த் தூள்- 1/2 தேக்கரண்டி
உடைத்து வறுத்த முந்திரிப்பருப்பு- 2 தேக்கரண்டி

செய்முறை:

1. பொட்டுக்கடலையையும் சீனியையும் மையாகத் திரித்துக் கொள்ளவும்.
2. நெய்யில் வறுத்த உடைத்த முந்திரிப்பருப்பையும் ஏலக்காய்த்தூளையும் மாவில் சேர்க்கவும்.
3. நெய்யைச் சூடாக்கி மாவுடன் கலந்து உருண்டைகள் பிடிக்க சுவையான சத்தான மாலாடு தயார்.
4.பொடியைத் திரித்துத் தயாராக வைத்திருந்தால் விரைவில் மாலாடுகளைச் செய்ய முடியும்.

மைசூர் பாகு

Image

தேவையானவை:

கடலைமாவு- 1 கப்
சர்க்கரை(சீனி)- 2 1/2 கப்
நெய்- 2 கப்
பால் – 1/2 கப்

செய்முறை:

1. கனமான உருளியில் கடலைமாவைப் பச்சை வாசனை போகுமளவிற்குக் குறைந்த தீயில் வதக்கவும்(அதிகம் வதக்க வேண்டாம்).

2. மாவுடன், மிதமாகச் சூடாக்கிய பால், சர்க்கரையைக் கலந்து வதக்கவும்.

3. குறைந்த தீயில் இருக்குமாறு பார்க்கவும்.

4. இருபது நிமிடங்களில் ஓரங்கள் பூத்து வரும், அப்போது நெய்யை லேசாகச் சூடாக்கிக் கொட்டிக் கிளறி வரவும்.

5. கெட்டியாகும் பதத்தில் பூத்து வரும் வேளையில் நெய் தடவிய தட்டில் கொட்டி பரத்தி கரண்டியால் சமமாக்கவும்.

6. சிறிது ஆறின பிறகு வில்லைகளாக்கவும். அதனை உடனே எடுக்க முயற்சிக்க வேண்டாம், ஆறிய பிறகு பிரித்த வில்லைகளை எடுக்க அழகாக வரும்.

7. சீனிப்பாகு மூலம் செய்வது விரைவில் முடியும் என்றாலும் மேற்கூறிய முறை பாகுப் பதத்தில் செய்யத் தெரியாதவர்களுக்கு உதவும். இம்முறையில் மிருதுவான, கரையக் கூடிய அளவில் சுவையான மைசூர்பாகுகளைத் தயார் செய்யலாம்.

பாகு வைத்துச் செய்யும் முறை:

1. கடலைமாவை நெய்யில் தனியாக வறுத்து வைக்கவும்.

2. ஒரு வாணலியில் சர்க்கரையைப் போட்டு ஒரு கப் நீர் சேர்க்கவும். நன்கு கொதித்து ஒரு கம்பிப் பதம் வர வேண்டும். (இரண்டு விரல்களுக்கிடையில் பாகைத் தொட்டுப் பார்த்தால் கம்பி போல் நீளமாக வர வேண்டும்)

3.பாகு கம்பி பதம் வந்ததும், நெய்யில் கலந்து வைத்துள்ள கடலை மாவைக் கொட்டிக் கிளறவும்.

4. மற்றொரு அடுப்பில் நெய்யைக் குறைந்த தீயில் வைக்கவும். நெய் சூடு குறையாமல் இருக்க வேண்டும். கடலைமாவும், பாகும் சேர்ந்து சுருண்டு வரும் சமயம் நெய்யை சிறிது சிறிதாகக் கரண்டியால் விட்டுக் கொண்டே கை விடாமல் கிளற வேண்டும்.

5. கலவை கெட்டியாகிப் பூத்து வரும் போது நெய் தடவின தாம்பாளத்திற்கு மாற்றி ஆறினதும் சதுரமாக வில்லைகள் போட்டு காற்றுப் புகாப் பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.

தேங்காய்ச்சாதம்

Image

தேவையானவை:

உதிராக வடித்த பச்சரிசி சாதம்- 2 கப்
துருவின தேங்காய்- அரை கப்
உப்பு- தேவையான அளவு

தாளிக்க:

தேங்காய் எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 1/2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2
பச்சைமிளகாய்- 1
பெருங்காயம்- 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு
நிலக்கடலை அல்லது முந்திரிப்பருப்பு- கைப்பிடி அளவு

செய்முறை:

Image

1. சாதத்தை விறைப்பாக வடித்து ஆற விடவும்.

2. துருவின தேங்காயை வறுத்து ஆற விடவும்.

3. தேங்காய் எண்ணெயில் தாளிசப் பொருட்களைத் தாளித்து வறுத்தத் தேங்காய்த்துருவலையும் உப்பையும் சேர்த்து நிலக்கடலை அல்லது முந்திரிப்பருப்பையும் கலந்து ஒரு புரட்டு புரட்டி ஆற விடவும்.

4. ஆறிய சாதத்துடன் வறுத்தத் தாளிசக் கலவையைக் கலக்க ருசியான தேங்காய்ச்சாதம் தயார்.

5. பூஜை நேரங்களில் இறைவனுக்கு நைவேத்தியம் செய்ய அம்சமான சித்ரான்னம் இந்தத் தேங்காய்ச்சாதம்.

கேரட் சாதம்

Image

தேவையானவை:

கேரட்- 6
வறுத்த, தோல் நீக்கிய நிலக்கடலை- 3 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
உதிர் உதிராக வேக வைத்த பாசுமதி அரிசி- 4 கப்

வறுத்துத் திரிக்க:

வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1/2 தேக்கரண்டி
மிளகு- 6
சீரகம்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 10 இலைகள்
மிளகாய்வற்றல்- 5

தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
பெருங்காயம்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1/2 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க

செய்முறை:

1. பாசுமதி அரிசியை உதிர் உதிராக வேக வைத்து வாயகன்ற பாத்திரத்தில் ஆற வைத்துக் கொள்ளவும்.

2.கேரட்டை அலம்பிக் கொண்டு தோலைச் சிறிதளவு நீக்கி(தோலிற்கு நெருக்கமான பகுதியில் தான் உயிர்ச்சத்து உள்ளதால் அதிகம் நீக்கத் தேவையில்லை) துருவி வைத்துக் கொள்ளவும்.

3. வாணலியில் எண்ணெயிட்டு தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு துருவிய கேரட்டை உப்பு சேர்த்து வதக்கவும்.

4. இன்னொரு வாணலியில் வறுக்கக் கொடுத்தப் பொருட்களை(சீரகத்தை மட்டும் கடைசியில் சேர்க்கவும்) வறுத்து நற நறவென்று திரித்து வைக்கவும்.

5. கேரட் வெந்ததும் இந்தப் பொடியைச் சேர்த்து, தனியே வறுத்து வைத்திருக்கும் நிலக்கடலையையும் சேர்த்துக் கிளறவும்.

6. கேரட் கலவையைச் சிறிது ஆற விடவும், பின் ஆற வைத்திருக்கும் சாதத்துடன் சேர்த்துக் கிளறி கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். சுவையான, எளிதான, ஆரோக்கியமான கேரட் சாதம் தயார்.

7.தொட்டுக் கொள்ள ரெய்தா, வடகம், அப்பளம், வறுவல் வகைகள் சிறந்தவை. வித்தியாசமான சித்ரான்னம்.

Image

இன்னொரு முறை:

மேற்கூறிய முறையில் கேரட்டைத் துருவவும், தாளிசப்பொருட்களைத் தாளித்து அதில் கேரட்டை வேக விடவும், வெந்த பிறகு தேங்காய்த்துருவலைப் போட்டுக் கிளறி இறக்கி இதனைச் சாதத்துடன் பிசறவும். மிளகாய்வற்றலிற்குப் பதிலாக பச்சைமிளகாய் சேர்க்கலாம், வெங்காயத்தையும் வதக்கிச் செய்யலாம்.

கூடுதல் குறிப்புகள்:

1. கேரட் சாதத்திற்கு வேண்டிய பொடியை நேரம் கிடைக்கும் போது செய்து வைத்துக் கொண்டால் நிமிடங்களில் இவ்வகை சாதத்தைச் செய்ய முடியும்.

2. கேரட் பிடிக்காதவர்கள் கூட இதன் ருசியில் கேரட்டி உணவில் சேர்க்கும் வாய்ப்புகள் அதிகம்.

3. வேலைக்குச் செல்பவர்களுக்கும் பள்ளி, கல்லூரி செல்பவர்களுக்கும் அவசர நேரங்களில் கை கொடுக்கும் அருமையான உணவு.

4.பலவகைச் சத்துக்கள் நிரம்பிய கேரட்டைப் பல வகைகளில் தயாரித்து உண்டு உடல் ஆரோக்கியத்தைப் பேணல் அவசியம்.

 

சாம்பார்

Image
சாம்பார் பொடியைப் பலவகைகளில் செய்யலாம், அதனைப் பொடி வகைகள் பகுதி ஒன்றைத் தொடங்கி அதில் எழுதலாமென எண்ணுகிறேன். இப்போது எளிய விதத்தில் சாம்பார் செய்யும் முறையைப் பதிகிறேன். ஒரே வீட்டில் வாழும் அம்மா, அக்கா, தங்கை வைக்கும் சாம்பார் ருசி வேறுபடுவதன் காரணம் ஊருக்கு ஊர் தண்ணீர் மாறுபடும், தீயின் அளவு, பாத்திரத்தின் அமைப்பு ஆகியவையே. செய்யும் விதம், காய்களின் கூட்டணி போன்றவை ஒவ்வொருவரின் கைப்பக்குவத்தையும் ஒவ்வொரு ருசியாக்குகிறது.இனி சாம்பார் செய்முறையைக் காண்போம்.

தேவையானவை:

குழைய வேக வைத்தத் துவரம்பருப்பு- 1 குவளை(கப்)
புளி- எலுமிச்சை அளவு
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு

காய்கள்:

சின்ன வெங்காயம், தக்காளி & முருங்கைக்காய்
அல்லது
குடமிளகாய், கேரட், தக்காளி
அல்லது
முள்ளங்கி, கேரட், பீன்ஸ், தக்காளி
அல்லது
பெரிய வெங்காயம், பூசணிக்காய், தக்காளி
வெண்டைக்காய், தக்காளி

சாம்பார் பொடி வறுத்து அரைக்க:

கடலைப்பருப்பு- 1/2 தேக்கரண்டி
தனியா- 1/2 தேக்கரண்டி
வெந்தயம்- சிறிதளவு
துவரம்பருப்பு- 1/4 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு
பெருங்காயம்- சிறிதளவு

தாளிக்க:

நல்லெண்ணெய் அல்லது நெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 11/2 தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க

செய்முறை:

Image
1. குக்கரில் பருப்பைக் குழைய வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2. காய்களை அலம்பி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.(எந்தெந்த காய்கள் கூட்டணி நன்றாக இருக்குமென்பதைத் தேவையானவை பகுதியில் எழுதியிருக்கிறேன்)
3. புளியைக் கரைத்துக் கொள்ளவும்.
4. வறுத்துத் திரிக்க வேண்டியவற்றைத் திரிக்கவும்(ஒன்றாகவே எண்ணெய் விட்டு வதக்க வேண்டும், மிளகாய்வற்றலைத் தனியாக வதக்கி, மற்றவற்றைத் திரித்தப் பின் கடைசியில் மிளகாய்வற்றலைச் சேர்க்கத் திரிபட்டு சிவப்பு நிறத்தில் அழகாக இருக்கும்)
5. வாணலியில் எண்ணெயிட்டு சின்னவெங்காயத்தைச் சிவப்பாக வறுக்கவும்.
6. பிறகு தக்காளி, முருங்கைக்காயும் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விட்டுக் கரைத்து வைத்தப் புளிக்கரைசலை(3 டம்ளர்) விடவும், உப்பு, மஞ்சள் தூள் போடவும்.
7. வறுத்துத் திரித்தப் பொடியைக் குழம்பில் சேர்க்கவும்.
8. காய் வெந்து ஒரு கொதி வந்ததும் வேக வைத்துள்ள துவரம்பருப்பைப் போடவும்.
9. தனியே சிறு வாணலியில் எண்ணெய் அல்லது நெய்யிட்டு கடுகு, வெள்ளை உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலையைத் தாளிசம் செய்து குழம்பில் சேர்க்கவும்.
10. கொத்தமல்லி தூவி அலங்கரிக்க ருசியான சாம்பார் தயார். சாதம், இட்லி, தோசை, பொங்கல் போன்ற அனைத்திற்கும் பயன்படுத்தலாம், பீன்ஸ், கோஸ், அவரைக்காய், காலிபிளவர், கேரட் போன்ற எவ்வகை பொரியலும் அவியல், கூட்டு வகைகளும் சாம்பாருக்கு இணையாகும்.

கூடுதல் தகவல்கள்:

1. வறுத்துத் திரிக்க நேரமில்லாதவர்கள் சாம்பார் பொடியைப் பயன்படுத்தலாம், புதிதாக வறுத்துத் திரிக்கும் போது தனியாவின் வாசம் சாம்பாரின் மணத்தைக் கூட்டும்.
2. வறுத்துத் திரிக்கக் கொடுத்தத் தேக்கரண்டி அளவை கப் அளவாக மாற்றிச் சிவக்க வறுத்துத் திரித்துக் காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் சாம்பார் செய்வது சுலபம்.
3. ஒரே காய் போட்டு சாம்பார் செய்யாமல் பலவிதக் காய்கள் போட்டு செய்வதால் உடலிற்குச் சத்துக்கள் கிட்டும்.
4. உப்பு போட்டு ஊற வைத்து, காய வைத்த மாங்காய்த்துண்டுகளைச் சாம்பாரில் போட அதுவும் தனிச் சுவையைக் கொடுக்கும்.
5. காரம் அவரவருக்குத் தக்கக் கூட்டியும் குறைத்தும் செய்யலாம்.
6. புளித்தண்ணீரில் காய் வேக நேரமெடுக்கும் என்பதால் அதிகமாகக் காய்கள் போட்டு சாம்பார் செய்யும் போது உப்பு, மஞ்சள் பொடியிட்டு காய்கள் வெந்த பிறகு புளித்தண்ணீரை விடலாம்.
7. முதலிலேயே தாளித்துக் கொண்டு அதிலே காய்களை வதக்கிச் சாம்பார் செய்யலாம், இவ்வகையில் சாம்பாருக்கென்று தனியே தாளிக்கும் வேலையும் பாத்திரமும் மிச்சமாகும்.
8. மேற்கூறிய வகையில் பாசிப்பருப்பு சாம்பாரையும் செய்து பார்க்கலாம், அல்லது பாசிப்பருப்பு 1/2 கப், துவரம்பருப்பு 1/2 கப் என்ற விகிதத்தில் செய்து பார்க்கலாம்.
9. வறுத்துத் திரிக்கும் போது 1 தேக்கரண்டி அரிசியையும் வறுத்துத் திரித்தால் சாம்பார் கெட்டியாக வரும்(துவரம்பருப்பு குறைவாக இருக்கும் போது தண்ணியாகக் குழம்பு வைப்பதற்குப் பதிலாக பொடி செய்யும் போது அரிசியையும் வறுத்துத் திரித்துச் செய்ய கெட்டியாக வரும்.