நீராகாரம்

நீராகாரம் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 1 குவளை
தண்ணீர் – தேவைக்கும் அதிகமான அளவு
தண்ணீரில் ஊற வைத்த பழைய சாதம் & நீர் – 1 குவளை
உப்பு – சிறிதளவு
காயம் – சிறிதளவு

செய்முறை:

  1. அரிசியைக் களைந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. ஒரு பானையில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
  3. அதிகம் கொதிக்க விடாது( நீர்க்குமிழிகள் பானையின் அடியில் தெரியும் நேரத்தில்) களைந்த அரிசியைச் சேர்த்துக் கிளறி விடவும்.
  4. அரிசி வெந்தத என்று கிளறும் போது சாதத்தைப் பதம் பார்க்கவும்.
  5. பிறகு இன்னொரு பாத்திரத்தில் சாதம் வெந்த நீரை வடிக்கவும்.
  6. வடித்த நீரை 5 மணி நேரம் மூடி வைக்கவும்.
  7. பழைய சாதம் வடித்த நீர், ஒரு குவளை மசித்த பழைய சாதம் எடுத்துக்கொள்ளவும்.
  8. சாதம் வேக வைத்த நீருடன் பழைய சாதம் வடித்த நீர், மசித்த பழைய சாதம் சேர்த்து, உப்பு, பெருங்காயம் சேர்க்கவும்.
  9. வெறுமனே குடிக்கும் போது அமிழ்தமாக இருக்கும், தொட்டுக்கொள்ள மோர் மிளகாய், வறுத்த சுண்டைக்காய் வற்றல், கண்டங்கத்திரி வத்தல், நாத்தங்காய்(இது சேர்க்கும் போது நீராகாரத்தில் உப்பு சேர்க்கத் தேவை இல்லை) சேர்த்து உண்ணும் போது சுவை அள்ளும், வளரும் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்ற உணவு. உணவே அருமருந்து.
  10. உடல் சூட்டைத் தணிக்கும், செரிமானப்பிரச்சினைகளைச் சரி செய்யும் உடலின் ஆரோக்கியத்தைச் சீராக வைக்கும் நீராகாரத்தைப் பருகி உடல் நலனைக் காப்போம்.

நீராகாரம் – நன்மைகள்

சாதாரண மக்களாலும் பின்பற்றத் தக்க வகையில் அமைந்த எளிய மருத்துவ முறையே சித்த மருத்துவ முறையாகும். சித்த மருத்துவம் நோய் உண்டாவதற்கான காரணங்களைத் தெளிவாக எடுத்துரைக்கிறது. அதாவது, மனித உடல் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று நிலைகளால் ஆனது என்றும், இவை சமநிலையில் இயங்கும் போது உடல் ஆரோக்கியமாக இருக்கும். சம நிலையை இழந்து இயங்கும் போது நோய்கள் ஏற்படுகின்றன என்பதும் சித்தர்களின் கருத்தாகும்.

இதனையே,

“மிகினும் குறையினும் நோய்செய்யும் மேலோர்வளிமுதலா எண்ணிய மூன்று” (குறள் : 941)என்கிறார் வள்ளுவர்.

மருத்துவ நூலோர் குறிப்பிடும் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் அளவில் குறைந்தாலும் மிகுந்தாலும் நோய் உண்டாகும் என்பதே வள்ளுவரின் கருத்துமாகும். மேலும் அவர் மருந்து என்னும் அதிகாரத்தில் (95) மருத்துவம் குறித்துச் சிறப்பாக விளக்கியுள்ளார்.

வாதம்:-சித்த மருத்துவம் கூறும் வாதம் என்பது உடல் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் வாயுவைக் குறிப்பதாகும். நம் உடலின் இயக்கத்தை, தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியாக மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக்கொள்ளும்.

பித்தம்:-பித்தம் என்பது உடலில் உயிர் தங்குவதற்கு ஆதரவு நிலையாக இருக்கும் உடல் வெப்பத்தைக் குறிப்பதாகும். இந்த வெப்பம் உணவு எரிக்கப்பட்டுச் சக்தியாக மாற்றப்படும் போது உண்டாவதாகும். வெப்பத்தால் உடலைக் காப்பது, ரத்த ஓட்டம், மன ஓட்டம், செரிமான சுரப்பிகள், நாளமில்லாச் சுரப்பிகள் போன்ற அனைத்தையும் இயக்கும் வேலையைப் பார்க்கும்.

கபம்:-கபம் என்பது உடலின் குளிர்ச்சியைக் குறிப்பிடுவதாகும். உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து, எல்லாப் பணிகளையும் தடையின்றிச் செய்ய உதவியாக இருக்கும்.வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியான கூட்டணியாகப் பணிபுரிந்தால்தான், உடல் இயக்கம் சீராக நடக்கும். இவை மூன்றும் தாம் இருக்க வேண்டிய அளவில் மிகுந்தாலும்,குறைந்தாலும் நோய் தோன்றக் காரணமாக அமையும்.இதன் அடிப்படையிலேயே 1482 வகையான நோய்கள் வாதத்தினால் ஏற்படுபவை என்றும், 1483 வகையான நோய்கள் பித்தத்தினால் வருபவை என்றும், 1483 வகையான நோய்கள் கபத்தால் தோன்றுபவை என்றும் சித்த மருத்துவர்களாலும் மருத்துவ நூல்களாலும் குறிப்பிடப்படுகின்றன.

நீராகாரம்-சோற்றுநீர்-பயன்கள்அறுபது வயதைக் கடந்த பிறகும், திடகாத்திரமாக இருக்கும் கிராமத்துப் பெரியவர் யாரிடமாவது கேட்டுப்பாருங்கள்… `உங்கள் ஆரோக்கியத்துக்குக் காரணம் என்ன?’ என்று. சட்டென்று `பழைய சோறு, கம்பங் களிதான்… வேற என்ன? என்று பதில் சொல்வார். பழைய சாதம் நம் முன்னோர்களின் உடல்நலத்துக்குப் பக்கபலமாக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. பல நூறு ஆண்டுகளாக பழைய சோறு சாப்பிட்டுவந்த பழக்கம், நம் பாரம்பர்யத்துக்கு உண்டு. சமீபத்தில், அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (American Nutirition Association,) பழைய சோற்றின் பெருமைகளையும் பலன்களையும் பட்டியலிட்டிருந்தது. அதன்பிறகு விழித்துக்கொண்ட இன்றைய தலைமுறை, கூகுளில் பழைய சாதத்தைத் தேட ஆரம்பித்திருக்கிறது. வாதம், பித்தம், கபம் இந்த மூன்றையும் சமநிலையில் வைத்திருக்க உதவும் ஒரு பழமையான உணவுத்தான் நீராகாரம்..

நீராகாரம், பழஞ்சோறு, பழைய சாதம், பழையது என்று பலவிதமாய் அழைக்கப்படும் பழைய சாதத்திற்கு இணையான எளிய உணவு ஒன்றை இவ்வுலகில் எவராலும் காட்ட இயலாது. அத்தகு பெருமை வாய்ந்தது இப்பழைய சாதம்!

பழைய உணவென்றாலே நலக்கேடுதானே தரும், அப்படியிருக்க இது மட்டும் எப்படி அருமருந்தாகிறது; அரிய உணவாகிறது? என்று நீங்கள் கேட்கலாம்.பழைய சாதத்தைக் குளிர்பதனப் பெட்டியில் வைத்து மறுநாள் சாப்பிடுவதுதான் கேடு பயக்கும். மாறாக, சாதத்தை தண்ணீரில் வேக வைத்து வடித்துக் கொட்டும் தண்ணீருடன், சிறிது உப்பு, மோர், காயம், பழைய சாதம் ஊற வைத்த கரைத்த நீர் சேர்த்து உண்டால் அதுதான் அற்புத உணவாகிறது. இன்றைக்கு மருத்துவர்கள் கூறும் எல்லா ஊட்டச் சத்துக்களும் இதில் உண்டு!அதற்கு என்ன காரணம்?

இரவு முழுக்க நீருடன் சாதம் ஊறும்போது, அதில் நுண் உயிரிகள் (லாக்டிக் ஆசிட் பாக்டீரியா) கோடிக்கணக்கில் பெருகுகிறது. அதனோடு வைட்டமின் பி6, பி12 போன்றவையும் இதில் அதிகம் உள்ளன. பழைய சாதம் புளித்து நொதிக்கும்போது இந்த விளைவுகள் உண்டாகின்றன.சாதாரண தானியங்கள், பருப்புகளைவிட முளைகட்டிய பின் அவை பலமடங்கு சக்தியும், சத்தும் மிக்கனவாய் மாறுவது போலவே, பழைய நீரில் நொதிக்கும்போது அதன் பயன் பன்மடங்கு உயருகிறது.

அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் பட்டியலிட்டிருக்கும் பழைய சோற்றின் நன்மைகள்:

* உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இதில் இருக்கின்றன.*

*காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.

* இந்த உணவு, நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், மலச்சிக்கலை நீக்கும்;

*உடல் சோர்வை விரட்டும்.

* ரத்த அழுத்தம் சீராகும்; உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியச்செய்யும்.

* முழு நாளைக்கும் நம்மை சோர்வின்றிப் புத்துணர்வுடன் உணரவைக்கும்.

* ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும்.

* எல்லாவிதமான வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு வரப்பிரசாதம்.

* புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும். *

*வனப்பைத் தரும்;

*இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க உதவும். பழைய சாதம் இருக்கும் இடம், ஆரோக்கியம் குடியிருக்கும் இடம். தமிழர் பாரம்பர்யம் ஆரோக்கியத்தைப் போற்றிப் பாதுகாத்துவந்தது என்பதை நிரூபிக்கும் மற்றுமோர் ஆதாரம், பழைய சாதம் பாரம்பர்யத்தைப் போற்றுவோம்!

நன்றி: இயற்கை மருத்துவம்

கின்வா பீட்ரூட் புலாவ்(Quinoa pulav)

image

தேவையானவை:

கின்வா(Quinoa)- ஒரு கப்
தண்ணீர்- ஒன்றரை கப்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் பொடி,இட்லி மிளகாய்ப்பொடி, கரம் மசாலாப்பொடி- தலா 1/2 தேக்கரண்டி 

தாளிக்க:

எண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- ஒரு தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாவற்றல்- 3
பச்சைமிளகாய்- 2
கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி
கொத்தமல்லி- அலங்கரிக்க
எலுமிச்சைச்சாறு- 2 தேக்கரண்டி

வேக வைத்து வதக்க:

துருவிய பீட்ரூட்- 2 கப்
காரட், பட்டாணி- 1 கப்

செய்முறை:

1. கின்வாவை நன்றாக இரண்டு, மூன்று முறை அலம்பி 30 நிமிடத்திற்கு ஊற வைக்கவும்
2. அடுப்பை ஏற்றி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாவற்றல், பச்சைமிளகாய் தாளிக்கவும்
3. பீட்ரூட்டைத் துருவித் தாளித்ததுடன் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும். ஐந்து நிமிடங்களில் வதங்கி விடும்.
4. தனியே ஒரு பாத்திரத்தில் காரட் பட்டாணியைச் சிறிதளவு நீர் விட்டு வேக வைக்கவும். வெந்ததும் பீட்ரூட்டுடன் கலக்கவும்.
5. கின்வாவை அலசி ஒரு கப்பிற்கு ஒன்றரை கப் தண்ணீர் விட்டு அடுப்பைக் குறைந்த தீயில் விட்டு வேக விடவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து உப்பு, எண்ணெய் சேர்த்துக் கிளறி விடவும்.
6. வேக வைத்தக் காய்கறிக்கலவையை வெந்த கின்வாவுடன் சேர்க்கவும்.
7. சிறிதளவு இட்லிமிளகாய்ப்பொடி, கரம் மசாலாப்பொடி சேர்த்துப் பதமாகக் கிளறவும்.
8. எலுமிச்சைச்சாறு பிழிந்து ஒன்றாகக் கலந்து எண்ணெய் விட்டு, கொத்தமல்லியைத் தூவவும்.

மிகவும் அருமையான எளிமையான ஆரோக்கியமான உணவு இது. புரதச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த குறைந்தக் கலோரிகள் கொண்ட உணவு கின்வா. 

 

கெட்டி வத்தக்குழம்பு

Image

வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும் வாயூறச் செய்யும் உணவு. அப்பளம் தவிர வத்தக்குழம்பிற்குப் பருப்புசிலியும் அருமையான இணை. கெட்டியான முறையில் செய்து வைக்கும் வத்தக்குழம்பு பல நாட்களுக்குக் கெடாது. புளிக்காய்ச்சலுக்குச் செய்வது போலச் சிறிது மெனக்கெட வேண்டும். வேலைக்குப் போகிறவர்கள் வார இறுதி நாட்களில் இதைச் செய்து வைத்துக் கொண்டால் இட்லி, தோசை, பொங்கலிற்குத் தொட்டுக் கொள்ள மட்டுமில்லாமல் சாதத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். தயிர்சாதத்திற்கு மணமணக்கும் வத்தக்குழம்பைத் தொட்டுச் சாப்பிட்டு விட்டுக் கையலம்பி விட்டு கைகளை முகர்ந்து பார்ப்பதில் உள்ள சுகமே அலாதி. மருதாணி வைத்து எடுத்து விட்டு கைகளை அலம்பி விட்டுத் தயிர்சாதமும் வத்தக்குழம்பும் சாப்பிட்டால் அதன் சுவை தனி…! அட ஒரு வத்தக்குழம்பிற்கு இத்தனை பொழிப்புரையா….இனி செய்முறையைக் காண்போமா?

தேவையானவை:

புளி- இரண்டு எலுமிச்சையளவு
பூண்டு- 12 பல்லு
உப்பு- தேவையான அளவு

திரிக்க:

மிளகு- 1 தேக்கரண்டி
தனியா- 2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 6

வறுத்தரைக்க:

பெரிய வெங்காயம்- 2
தக்காளி- 1

தாளிக்க:

நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

Image

1. புளியைக் கரைத்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெயிட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிசம் செய்து கொள்ள வேண்டும். அதனுடன் 12 பல்லு பூண்டு(பாதிப் பாதியாக நறுக்கிக் கொள்ளலாம்) சேர்த்து ஓரளவு சிவக்க வதக்கவும்.
3. கெட்டியாகக் கரைத்து வைத்துள்ளப் புளியைத் தாளிசத்தில் சேர்க்கவும். உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
4. தனியே ஒரு வாணலியில் தனியா, மிளகு, மிளகாய்வற்றலை வாசனை வரும் வரையும் ஓரளவிற்குச் சிவக்கும் வரையும் வறுத்து ஆற விட்டு மின்னரைப்பானில் திரித்து எடுத்துக் குழம்பில் கொட்டவும்.
5. அந்த வாணலியின் சூட்டிலேயே நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சிவக்க வறுக்கவும், வெங்காயம் ஓரளவிற்கு வெந்ததும் தக்காளியைச் சேர்த்து வதக்கி ஆற விட்டு அரைக்கவும்.
6. அரைத்த வெங்காயத் தக்காளி விழுதைக் குழம்புடன் சேர்க்கவும், மிதமான தீயில் குழம்பைக் கொதிக்க விடவும்.
7. கொதித்து வற்றும் போது இறக்கி மீண்டும் நல்லெண்ணெய் சேர்க்கவும்(இன்னொரு முறை நல்லெண்ணெயில் கடுகு தாளிசம் செய்தால் மணமாக இருக்கும்)

கூடுதல் குறிப்புகள்:

1. கால நிலை குளிராக இருந்தால் வெளியில் வைத்திருந்தாலே இரண்டு மூன்று நாட்களுக்குக் கெடாது. குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்தால் 10 நாட்கள் வரை கெடாதிருக்கும்.
2. குழம்பு பண்ணி உடனே சாப்பிடுவதை விட மறு நாள் சாப்பிடும் போது புளிப்பின் சுவை இறங்கிக் காரம் சிறிது மட்டுப்பட்டு ருசி அதிகமாக இருக்கும்.
3. சாதத்தைச் சுடச் சுடப் பரிமாறி வத்தக்குழம்பு விட்டுப் பரிமாற வேண்டும்.
4. வத்தக்குழம்பு செய்யும் போது பருப்பு சேர்க்காததால் பொரியலில் பருப்பு இருப்பது போல் பார்த்துக் கொள்ளலாம். மோர்க்குழம்பு, வத்தக்குழம்பு செய்யும் போது பருப்புசிலி செய்வதன் சூட்சமமும் அதுவே.
5. வத்தக்குழம்பு சூடு என்பதால் வத்தக்குழம்பு, மோர் ரசம், உசிலி செய்வது வழக்கம். ரசம் பகுதியில் மோர் ரசம் பதிவை எழுதுகிறேன்.

செய்யக் கூடாதன:

காயம், கொத்தமல்லி சேர்க்கத் தேவையில்லை(சேர்த்தால் வேறு சுவை வந்து விடும்)
பூண்டும் மேற்கூறிய அளவே செய்ய வேண்டும், அதிகம் சேர்த்தால் ருசி மாறிப் பூண்டுக்குழம்பு போலாகி விடும்.
வத்தக்குழம்பு செய்யும் போது மிளகாய்வற்றலின் காரத்தின் வீரியத்திற்கேற்ப சேர்க்க வேண்டும், காரம் கூடச் சேர்த்தால் மறு நாளைக்கு நன்றாக இருக்கும். வெங்காயம்,பூண்டு சேர்க்காதவர்கள் மேற்கூறிய முறையில் அவையில்லாமலும் செய்து கொள்ளலாம்(தக்காளி புளித்தொக்கு போல சுவை அமையும்)

சாதத்துடன் சேர்க்கும் போது ஒரு தேக்கரண்டி வத்தக்குழம்பு விழுதினைச் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு உண்ணலாம். குழம்பினைப் போலத் தாராளமாக விட வேண்டும் என்றில்லை.

 

ரவா பொங்கல்

Image

தேவையானவை:

அரிசி ரவை- 1 டம்ளர்
வேகவைத்தப் பாசிப்பருப்பு- 1 டம்ளர்
மிளகு, சீரகம்- தலா 1 தேக்கரண்டி
இஞ்சி- 1 துண்டு
காயம்- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
நெய்- 3 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

1. ஒரு வாணலியில் ரவையைச் சிவக்க வறுக்கவும்.
2. வறுத்ததை ஒரு தட்டில் கொட்டி விட்டு அதே வாணலியில் நெய்யிட்டு மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரிப்பருப்பு போன்றவற்றைச் சிவக்க வறுக்கவும்.
3. பிறகு அதில் மூன்று கோப்பை நீரைச் சேர்த்து உப்பு,காயம் சேர்த்துக் கொதிக்க விடவும்.
4. பின்பு அதில் ரவையைக் கொட்டி கெட்டிப்பிடிக்காமல் கிளறவும்.
5. பிறகு வேக வைத்தப் பாசிப்பருப்பைச் சேர்த்துக் கிளறவும்.
6. பொங்கலை இறக்கி வைக்கும் முன்பு நெய்யை விட்டுக் கிளறி வேறு பாத்திரத்திற்கு மாற்றிப் பரிமாறவும்.
7. ரைஸ் குக்கரிலும் செய்யலாம். அடிப்பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளற வேண்டும்.
8. வித்தியாசமான ருசியான ரவா பொங்கலிற்குச் சாம்பார், தேங்காஇச் சட்னி அசத்தல் இணைகள்.

 

 

 

 

 

கம்பு, தானியங்கள் மகத்துவங்கள்

Image

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் கம்பு!

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

நம் முன்னோர்கள் தங்களுடைய உணவில் அதிகளவு தானிய வகைகளைச் சேர்த்து வந்தனர். காலையில் கம்பைக் கஞ்சியாக்கி அருந்தினர். சிலர் அரிசி உபயோகப்படுத்துவது போல் வேகவைத்து வடித்து சாப்பிட்டனர். ஆனால் இடைப்பட்ட காலத்தில் இந்த தானிய வகைகளை மறந்து சத்தற்ற உணவுகளை சாப்பிட்டு வந்தனர். நாவின் சுவையை அதிகம் விரும்பியதால் நோய்களின் வாழ்விடமாக நம் உடல் மாறிவிட்டது.

கம்பு பயிர் உணவுக்காகவும், கால்நடைத் தீவனத்திற்காகவும் ஆப்பிரிக்கா, இந்தியாவில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வரும் ஒரு சத்துமிக்கத் தானியப் பயிராகும். கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், வைட்டமின்கள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதன்மை பெற்று விளங்குகின்றது. போதிய அளவு மாவுச்சத்தும், தேவையான அமிலங்களான கரோட்டின், லைசின் ஆகியவற்றைப் பெற்ற புரதமும், வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்த தானியம் கம்பு, தங்க தானியம் என்று அழைக்கப்படுகிறது.

உடலில் ஏற்படும் பல நோய்களுக்குக் காரணம் வைட்டமின் சத்துக் குறைவேயாகும். வைட்டமின் அளவில் கம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் சிறந்தே விளங்குகிறது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணி பீட்டா கரோட்டீன். இது கம்பு பயிரில் இயற்கையிலேயே அதிக அளவில் உள்ளது.

இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும். இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சிக் காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும்.

சோர்வு நீங்க…

மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உன்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

அஜீரணக் கோளாறு நீங்க…

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங்கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும்.

வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய….

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.

* இதயத்தை வலுவாக்கும்.

* சிறுநீரைப் பெருக்கும்.

* நரம்புகளுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும்.

* இரத்தத்தைச் சுத்தமாக்கும்.

* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.

* நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

* தாதுவை விருத்தி செய்யும்.

* இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.கம்பு மட்டுமல்லாமல் நமது உணவில் சேர்க்க மறந்து போன. சோளம், கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்ற தானியங்கள் இன்னும் பல தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் இல்லாமல் ஆரோக்கியமாக நமது முன்னோர்கள் போல வாழலாம்.

இணையத்தில் சேகரித்தது. நன்றி.

கொத்தமல்லி இட்லி

 

தேவையானவை:

கொத்தமல்லி- 1 கட்டு
இட்லிகள்- 10
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 மேசைக்கரண்டி
இஞ்சி- 1 துண்டு
பூண்டு- 1 பல்லு
பச்சைமிளகாய்- 2
சீரகம்- 1/2 தேக்கரண்டி
உடைத்த கடலை அல்லது முந்திரிப்பருப்பு- 2 தேக்கரண்டி

தாளிக்க:

நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 4 இலைகள்

செய்முறை:

1. இட்லிகளை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெள்ளை உளுத்தம்பருப்பை ஓரளவுக்குச் சிவக்க வறுத்து விட்டு பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டை வதக்கவும்.
3. பிறகு தனியே ஆறவிட்டு மண் போக அலசி ஆய்ந்தகொத்தமல்லியை வாணலியின் சூட்டிலேயே லேசாக வதக்கி எடுக்கவும்.  கறிவேப்பிலை சேர்க்க விரும்புபவர்கள் ஒரு இணுக்குக் கறிவேப்பிலையையும் அரைக்கும் போது சேர்த்துக் கொள்ளப் புதிய சுவை கிட்டும்.
4. மேற்கூறிய கலவையை அரைப்பானில் அரைத்து எடுக்கவும்.
5. வாணலியில் எண்ணெயிட்டு கடுகு, கறிவேப்பிலை தாளிசம் செய்து விட்டு அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும்.
6. லேசாகக் கெட்டியானவுடன் துண்டுகளாக நறுக்கி வைத்த இட்லிகளை அந்த மசாலவில் போட்டுப் பிரட்டி எடுங்கள்.
7. பார்த்ததும் கவரக் கூடிய பச்சை நிறத்தில் சுவையான, ஆரோக்கியமான கொத்தமல்லி இட்லி தயார்.

டோக்ளா

Image

தேவையானவை:

ரவை- 1 டம்ளர்
தயிர்- 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 2
சீரகம்- 1/2 தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு- 1 தேக்கரண்டி
ஈனோ(ப்ரூட் சால்ட்)- 1 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் பொடி- சிறிதளவு
கறிவேப்பிலை- காம்பு நீக்கி பொடியாக நறுக்கியது

தாளிக்க:

எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 4 இலைகள்

Image

செய்முறை:

1. ரவையை லேசாக வறுக்கவும்(சிவக்கத் தேவையில்லை, பச்சை வாசனை போகும் அளவிற்கு வறுத்தால் போதும்)
2. பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. ரவை, பச்சைமிளகாய், தயிர், சீரகம், எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, ஈனோ சால்ட் அனைத்தையும் ஒன்றாக இட்லி மாவு பதத்திற்குக் கரைக்கவும்.
4. வாயகன்ற பாத்திரத்தில் 1 டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும்.
5. வட்ட வடிவத் தட்டோ, பாத்திரமோ அதில் எண்ணெயைத் தடவி இந்த மாவைக் கொட்டி அடுப்பில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
6. வாணலியில் எண்ணெயிட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வைத்துக் கொள்ளவும்.
7. ரவை வெந்து விட்டதா என்பதைப் பார்க்க ஒரு குச்சியை உள்ளே விட்டுக் கண்டறியலாம்(குச்சியில் மாவு ஒட்டி இருந்தால் கூட 2 நிமிடங்கள் வேக வைக்கலாம்)
8. வெந்ததை வெளியில் எடுத்து ஒரு அகலமான தட்டில் திருப்பிப் போடவும். வட்ட வடிவத்தில் இருக்கும் டோக்ளாவைச் சிறு சிறு சதுரங்களாக்கி தாளித்த கடுகினைத் தெளிக்கவும். அல்லது துண்டுகளாக்கிய டோக்ளாவை கடுகு தாளிசத்தில் லேசாகப் பிரட்டி எடுக்க சுவையான டோக்ளா தயார்.
9.இது குஜராத்தியர்களின் சிற்றுண்டி வகை.

Image

கூடுதல் குறிப்புகள்:

1. உப்புமா என்பதே சீக்கிரத்தில் செய்து விடக் கூடிய சிற்றுண்டி. அதை விடச் சீக்கிரமாக இந்த டோக்ளாவைச் செய்து முடிக்கலாம். உப்புமாவா? என்று அலறுபவர்கள் கூட நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு டோக்ளாவை உண்பர்.
2. புளிப்புச் சட்னி அல்லது தக்காளி சட்னி இதற்கு இணை.
3. குஜராத்தியர்களின் விருப்ப உணவான இது சத்தான உணவும் கூட.
4. மேற்கூறிய முறையில் உப்புமாவிற்குச் செய்யும் காய்களை வேக வைத்து சேர்த்துக் கூட வெஜிடேபிள் டோக்ளாவாகச் செய்து அசத்தலாம்.
5. மூன்றே நிமிடங்களில் மைக்ரோவேவிலோ ஓவனிலோ டோக்ளாவைச் செய்யலாம்.
6. மேற்கூறிய முறையில் ரவைக்குப் பதிலாக கடலைமாவைச் சேர்த்தும் செய்யலாம். ஈனோ சால்ட் டோக்ளாவை மொறுமொறுப்பாக்கும், அந்த உப்பு இல்லாமலும் செய்யலாம்.
7. இந்த முறையில் இட்லிமாவை வேக விட்டு சதுரங்களாக வெட்டி சில்லி இட்லிக்கள் செய்யலாம்.