கொத்தமல்லித் துவையல்

Image

தேவையானவை:

கொத்தமல்லி- 3 கட்டு
புளி- சிறிதளவு
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 6
உப்பு- தேவையான அளவு

செய்முறை:

1. கொத்தமல்லிக் காம்பு நீக்கி இலைகளை மட்டும் தனியே ஆய்ந்து வைக்க வேண்டும்.
2. மண் போக நீரில் அலசி ஒரு காகிதத்தால் ஒற்றித் தண்ணீரை நீக்கவும்.
3. அடுப்பை ஏற்றி வாணலியில் எண்ணெய் இட்டு வெள்ளை உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றலைச் சிவக்க வறுக்கவும். பிறகு அடுப்பை அணைக்கவும்.
4. அதனுடன் கொத்தமல்லியையும் சேர்த்து ஒரு பிரட்டுப் பிரட்டி உப்பு(சிறிதளவு) சேர்க்க வேண்டும்.
5. மின்னரைப்பானில் மையாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் விடக் கூடாது.
6. தாளிக்க விரும்புபவர்கள் தாளிக்கலாம். இல்லையென்றால் தேவையில்லை.
7. புளி சிறிதளவு போட்டால் பச்சை நிறமாக வரும், இல்லையென்றால் மருதாணிப்பச்சை நிறமாக துவையல் ஜொலிஜொலிக்கும்.

1.2.kotha

கூடுதல் தகவல்கள்:

1. கொத்தமல்லி- கறிவேப்பிலை துவையலையும் மேற்கூறிய முறையில் செய்யலாம், அது தனி சுவையுடன் இருக்கும்.
2. கொத்தமல்லியில் அகற்றிய காம்புகளை ஒரு பாத்திரத்தில் போட்டு ரசத்திற்குப் போடலாம். காம்பு போட்டு துவையல் செய்யக் கூடாது, நீர்த்து விடும், விரைவில் கெட்டு விடும், ஆனால் இந்தத் துவையல் ஒரு வாரத்திற்குக் கெடாது.
3. தயிர்சாதம், இட்லி, பொங்கலிற்கு ஏற்ற இணையுணவு.

 

கோவக்காய்-பீர்க்கங்காய் துவையல்

Image
தேவையானவை:

கோவக்காய்- 2 கிண்ணம்
பீர்க்கங்காய்- 2
பச்சைமிளகாய்- 5
மிளகாய்வற்றல்- 2
கொத்தமல்லி- ஒரு கைப்பிடி
புளி- எலுமிச்சை அளவு
உப்பு- தேவையான அளவு
கடலைப்பருப்பு- 2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி

தாளிக்க:

நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி

செய்முறை:

1. கோவக்காயை அலம்பித் துடைத்துக் கொள்ளவும்.
2. பீர்க்கங்கங்காயைத் தோலகற்றி நறுக்கிக் கொள்ளவும்.
3. வாணலியில் மிதமான தீயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பைச் சிவக்க வறுக்கவும், ஓரளவு சிவந்ததும் வெள்ளை உளுத்தம்பருப்பி வறுக்கவும். இதனுடன் பச்சைமிளகாய், மிளகாய்வற்றல், புளியையும் சேர்த்து வதக்கித் தனியே ஆற விடவும்.
4. அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டுப் பொரியலுக்குச் செய்வதற்கு ஏற்ற வண்ணம் கோவைக்காயைப் போட்டு வதக்க வேண்டும்.  உப்பு சேர்த்து, ஓரளவு வெந்ததும் பீர்க்கங்காயைச் சேர்த்து வதக்க வேண்டும், பிறகு அடுப்பை அணைக்கவும்.
5. கொத்தமல்லி(மண் போக அலசி, நீர் இன்றி துடைத்தது) சேர்க்கவும்.
6. எல்லாம் ஆறியதும் வறுத்த பருப்பு, மிளகாய்க் கலவையுடன் கோவக்காய், பீர்க்கங்காயையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
7. பிறகு நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளிசம் செய்து துவையலுடன் சேர்க்கவும்.

கூடுதல் தகவல்கள்:

1. நீர் படாததாலும் கைப்படாமல் செய்திருப்பதாலும் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை இந்தத் துவையல் கெடுவதில்லை.
2. இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், தயிர்சாதம், பொங்கல், உப்புமா என்று அனைத்து உணவு வகைகளுக்கும் சிறந்த இணையுணவு இந்தத் துவையல்.
3. மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களும் அதிகமாகக் காரம் சேர்க்க விரும்பாதவர்களும் அடிக்கடி செய்யத் தேவையில்லை. பச்சைமிளகாய் காரத்திற்குப் பதில் மிளகாய்வற்றலைச் சேர்த்தும் செய்யலாம்.