முருங்கைக்கீரை பொரியல்

IMG_5202

தேவையானவை:

முருங்கைக்கீரை- 4 டம்ளர்
பயத்தம்பருப்பு- 1 கப்
பெருங்காயம்- சிறிதளவு
தேங்காய்த்துருவல்- 4 தேக்கரண்டி

தாளிக்க:
எண்ணெய்- 1 மேசைக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1

செய்முறை:

1. முருங்கைக்கீரையை ஆய்ந்து மண் போக அலசி ஒரு நீர் உறிஞ்சும் காகிதத்தால் துடைத்து வைக்கவும்.
2. குக்கரில் பாசிப்பருப்பை விசில் வரும் முன்பே உதிரியாய் சுண்டலுக்கு வேக வைப்பது போல வேக வைத்து எடுத்து வைக்கவும்(பாசிப்பருப்பு விரைவில் குழைந்து வெந்தும் விடும், அளவாகத் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்களுக்குள் எடுத்து விட வேண்டும்)
3. மைக்ரோ வேவ் உள்ளவர்கள் பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் குறைவான நீர் விட்டு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கலாம்.
4. தாளிசப்பொருட்களைத் தாளிசம் செய்து கொண்டு முருங்கைக்கீரையைப் போட்டு உப்பு சேர்த்து(தண்ணீர் விடத் தேவையில்லை) நன்றாக வதக்கவும்.கீரை வகைகள் செய்யும் போது கணிசமாகத் தோன்றும் கீரை வெந்ததும் குறைவாக இருக்கும், எனவே உப்பு மிகவும் குறைவாகப் போட வேண்டும்.
5. தனியே ஒரு வாணலியில் பாசிப்பருப்பை வதக்கி உதிராக்கவும். உப்பு சேர்க்கவும்.
6. முருங்கைக்கீரை வெந்த பிறகு பாசிப்பருப்பு சுண்டலை அதனுடன் சேர்த்து வதக்கி தேங்காய்த்துருவலைப் போட்டு இறக்கவும்.
7. சாம்பார், வத்தக்குழம்பும், மோர்க்குழம்பு, ரசம், தயிர் சாதம் போன்றவற்றிற்கு அசத்தலான பொரியலாக முருங்கைக்கீரை பொரியல் அமையும்.  முருங்கைக்கீரையைப் பொரியலாக மட்டுமில்லாமல் சாம்பார், கூட்டு, தால், வடை, அடை போன்ற பலவகைகளில் சமைத்துப் பயன்படுத்திப் பலன் பெறலாம், பலம் பெறலாம்.

உருளைக்கிழங்கு பொரியல்

DSC02170

தேவையானவை:

உருளைக்கிழங்கு- 4
பெரிய வெங்காயம் – 1
சாம்பார் தூள்- 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி- 1/2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

1. உருளைக்கிழங்கை ஒரு பாத்திரம் அல்லது குக்கரில் தோலுடன் 4 சத்தத்திற்கு வேக வைக்கவும்.
2. எண்ணெயில் தாளிசப் பொருட்களைத் தாளிக்கவும்
3. பெரிய வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும்.
3. வெந்த உருளைக்கிழங்கைத் தோல் நீக்கிக் கொண்டு வதக்கின வெங்காயத்துடன் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துத் தீயைக் குறைத்து வைத்துக் கிளறவும்.
4. வெந்ததும் சாம்பார் தூள் சேர்த்து ஓரிரு முறை கிளறவும், பொடியின் பச்சை வாசனை போனதும் சிறிதளவு எண்ணெய் விட்டு இறக்கிப் பரிமாறவும் சுவையான வெங்காய உருளைக்கிழங்கு பொரியல் தயார். சாம்பார், வத்தக்குழம்பு, ரசம் போன்றவற்றிற்கு அருமையான இணை.

குறிப்புகள்:

1. தோலுடன் பொடியாக நறுக்கியும் பொரியல் செய்யலாம்.
2. சாம்பார் தூளிற்குப் பதில் பச்சை மிளகாய் சேர்த்தும் செய்யலாம், மசாலா தோசை அல்லது பூரி போன்றவற்றிற்கு இம்முறையில் செய்வது நன்றாக இருக்கும்.
3. உருளைக்கிழங்கை மசியும் படி வேக வைத்தும் மேற்கூறிய முறையில் செய்யலாம், குழந்தைகள் விரும்பி உண்ணுவர்.

உருளைக்கிழங்கின் நன்மைகள்:
மண்ணில் விளையும் கிழங்கு வகைகளில் உருளைக்கிழக்கு ஏராளமான சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
அதிக சத்துள்ளதும் எளிதில் சமைக்கக்கூடியதுமாகிய உருளைக்கிழங்கில் அதிக அளவு கலோரிகள் கிடைக்கின்றன. எளிதில் ஜீரணமாகக்கூடிய இந்த காய்கறியில் வைட்டமின்கள், தாது உப்புகள் அதிகம் காணப்படுகின்றன. இந்த காய் அதிக நார்ச்சத்தும் கொண்டுள்ளது.

வாழைப்பழத்தில் உள்ளதைப் போன்ற அதிக பொட்டாசியம் சத்து உருளைக்கிழங்கில் அதிகம் உள்ளது. நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு.

1. யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றி விடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்து விடுகிறது. பச்சை உருளைக்கிழங்கு வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு உருளைக்கிழங்கு சாறு வரப்பிரசாதமாகும்.

2. இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளை பச்சயைாக மிக்ஸிசியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்தினால் இரைப்பைக் கோளறுகள் குணமடையும்.

3. இரு பச்சையான உருளைக்கிழங்குகளைத் தோலுடன் மிக்ஸியில் அரைத்துச் சிறிது தண்ணீர்விட்டு இரு தேக்கரண்டி வீதம் உணவு சாப்பிடுவதற்கு முன்பு அருந்த வேண்டும். இப்படி அருந்திய சாறு உடலில் வாதநோயைத் தோற்றுவிக்கும் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும் குணமாகும்.

4. உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது. உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க நிவாரணம் கிடைக்கும்.

5. உருளைக்கிழங்கு சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும், வலியும் நீங்கும்.

6. அவித்த உருளைக்கிழங்குகளின் தோல்களைச் சேகரித்து சுத்தம் செய்து ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு இந்தக் கஷாயத்தை அருந்தினாலும் கீல் வாதம் குணமாகும்.

இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும். உருளைக்கிழங்கு வைத்தியம் தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக் கொள்வது தான் உருளைக் கிழங்கு வைத்தியம்.

7. சாதம், சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக் கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப்கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.

கெட்டுப்போன இரத்தம், குடல்பாதையின் நச்சுத்தன்மை உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலம் தொடர்பாக ஏற்படும் நோய்கள் உள்ளோர், நீண்ட நாள் மலச்சிக்ககால் அவதிப்படுவோர் ஆகியோர் உருளைக்கிழங்கு வைத்தியத்தை குறைந்தது ஆறுமாதங்கள் பின்பற்றினால் மேற்கண்ட நோய்களிலிருந்து பூரண நலம் பெறலாம்.

8. இரவு தூங்கப்போகும் முன்னர் பச்சை உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு உறங்கினால் அதிகாலை எழும் போது முகம் புத்துணர்வுடன் காணப்படும். அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர்.

தவிர்க்க வேண்டியவர்கள்:

கர்ப்பகால நீரிழிவு உள்ளவர்களும் சர்க்கரை உள்ளவர்களும் உருளைக்கிழங்கை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

 

கோவைக்காய் பொரியல்

Image

தேவையானவை:

கோவைக்காய் -2 கப்
உப்பு- தேவையான அளவு
கோவைக்காய் பொரியல்

வறுத்துத் திரிக்க:

கடலைப்பருப்பு- 1/2 தேக்கரண்டி
தனியா- 1/2 தேக்கரண்டி
வெந்தயம்- சிறிதளவு
மிளகாய்வற்றல்- 2 தேக்கரண்டி
தோல் நீக்கிய நிலக்கடலை- 1 தேக்கரண்டி

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1
சீரகம்- 1/2 தேக்கரண்டி
பெருங்காயம்- சிறிதளவு
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

Image

1. கோவைக்காயை அலம்பி நீளமாகவோ வட்டமாகவோ நறுக்கிக் கொள்ளவும்.

2. எண்ணெயில் தாளிசப்பொருட்களைத் தாளித்து விட்டுக் கோவைக்காயையும் சிறிது நீர் விட்டு உப்பைச் சேர்க்கவும்.

3. காய் வெந்ததும் திரித்தத் தூளைச் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

கோவைக்காயிலுள்ள சத்துக்கள்:

Image
1. வைட்டமின் ஏ 156 மைக்ரோ கிராம், போலிக் அமிலம், கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன.
2. கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். கோவைக்காய் உண்டவர்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பரிசோதித்ததில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து இருந்ததைக் கண்டுபிடித்தனர். தினமும் 50 கிராம் சமைத்த கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று அந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. எனவே சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
3.கோவக்காய் நார்ச்சத்து நிரம்பியது. அதைச் சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம்.
4. நாக்கில் உள்ள வெடிப்பு, நாக்குப் புண், வாய்ப்புண் நீங்கும்.
5. கண்குளிர்ச்சியை உண்டாக்கும்.
6. இலைச்சாற்றுடன் வெண்ணெய் சேர்த்து சிரங்குகளுக்குப் பூசலாம். இதன் இலைச்சாற்றைப் பருகி வந்தால் நீரழிவு நோய் கட்டுப்படும்.
7. பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

காலிபிளவர் பொரியல்

Image

தேவையானவை:

காலிபிளவர் – 1
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு

தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1
சீரகம்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

Image

1. காலிபிளவரைச் பத்து நிமிடங்கள் சுடு நீரில் ஊறவைக்கவும் (கண்ணுக்குத் தெரியாத பூச்சி, புழுக்கள் அழிந்து விடும்)

2. காலிபிளவரைச் சிறிது துடைத்து விட்டுப் பிடித்த வடிவங்களில் (பெரிதாகவோ, பொடிதாகவோ) நறுக்கவும்.

3. வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு நறுக்கின காலிபிளவரையும் உப்பு, மஞ்சள் தூளையும் சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி விட்டு வேக விடவும்.(அதிகத் தண்ணீர் விட்டால் கணிசம் குறையும், குழைந்தும் விடும்.)

4. காய் வெந்ததும் சாம்பார்த்தூளைக் காரத்திற்குச் சேர்த்து ஒரு தேக்கரண்டி எண்ணெயிட்டுக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

5. சப்பாத்தி, சாம்பார், வத்தக்குழம்பு, ரசம் போன்றவற்றிற்கு அருமையான பொரியல்.

6. மஞ்சள் தூள் சேர்ப்பது கண்ணுக்குத் தெரியாத புழுக்களை அழித்து உடலிற்கு நன்மை சேர்க்கும் என்பதாலாகும்.

7. பொரியலாக மட்டுமில்லாமல் சாம்பார், குருமா, தால், பரோத்தா வகைகளிலும் காலிபிளவரைப் பயன்படுத்தி உடலிற்குச் சத்துக்களைச் சேர்க்க வேண்டும்.

காலிபிளவர் சத்துக்கள்

காய்கறி இனத்தைச் சேர்ந்த காலிப்ளவர் ஒருவகையான பூ வகையைச் சேர்ந்தது. இதில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் மூலிகையாகவும் கருதலாம்.
முட்டைக்கோஸும், காலிப்ளவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. இது சாதாரணமாக வெள்ளையாகவோ, இளம் மஞ்சளாகவோ காணப்படும்.
காலிப்ளவர் ஒரு குளிர்பிரதேச காய்கறி. இது குளிர்காலங்களில் அதிக அளவில் கிடைக்கின்றது. இத்தாலியில் அதிக அளவில் விளைவிக்கப்பட்ட காலிப்ளவரானது முதன் முதலில் ஆசியாவில் தான் பயிரிடப்பட்டது.

காலிப்ளவரில் பொட்டாசியம், விட்டமின் B6 ஆகியவை உள்ளன. இதில் விட்டமின் சி மிக அதிகமாக உள்ளது. ஒரு கப் நறுக்கிய பூவில் கலோரி 24, புரதம் 2 கிராம், மாவுச்சத்து 5 கிராம், விட்டமின் சி 72 மில்லி கிராம், ஃபோலாசின் 66 மைக்ரோ கிராம், பொட்டாசியம் 355 மில்லி கிராம் அடங்கிய இந்தக் காய்கறியை அதிகமாக வேக வைக்க கூடாது. இல்லையெனில் சத்துக்கள் கரைந்துவிடும். இதில் ஒரு வித தாவர அமிலம் உள்ளது. வேகும் போது கந்தகக் கலவையாக மாறி வாசனை வருகிறது.

அதிக நேரம் வேக வைத்தால் வாசனை அதிகமாகும். சத்தும் வீணாகும். அலுமினியம், இரும்பு பாத்திரத்தில் வேக வைக்கக்கூடாது. இதிலுள்ள கந்தகக் கலவை அலுமினியத்துடன் சேர்ந்தால் பூ மஞ்சளாகிவிடும். இரும்பு இதை பிரவுன் கலராக்கிவிடும்.

இதைத் தண்ணீரில் வேகவைப்பதை விட நீராவியிலோ, மைக்ரோவேவ் அவனிலோ வேகவைக்கலாம். வைட்டமின் சி சத்து அதிகரிக்கும்.
மேலும் காலிப்ளவர் கொழுப்பு சத்து இல்லாத காய்கறி. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் இதயநோய்க்கு இதமான காய்கறி இது. காலிப்ளவருக்கு புற்று நோயை தடுக்கும் சக்தி உள்ளது.

பூ வேகும் போது Isothiocyantes என்னும் ரசாயனம் வெளிவருகிறது. இது உடலினுள் சென்று உடல் தானாக உற்பத்தி செய்யும் phase II என்ற புற்றுநோய் தடுக்கும் பொருளை அதிகமாக சுரக்கச் செய்கிறது.
இது இடுப்பில் ஏற்படும் கருப்பு தழும்புகளைப் போக்கவல்லது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இது நார்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறியாகும்.

http://jokavitha.blogspot.com/2012/09/blog-post_20.html தகவல்களுக்கு நன்றி.

 

அவரைக்காய் பொரியல்

தேவையானவை:

Image

அவரைக்காய்- 2 கப்
தேங்காய்த்துருவல்- 1 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு

தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

1. அவரைக்காயை நன்றாக அலம்பிக்கொண்டு நுனியைப் பிரித்து நாரைப் பிரிக்கவும். ஒவ்வொரு அவரைக்காயையும் இவ்விதம் செய்து கூறு பிரித்துப் பொடியாக நறுக்கவும்.

2. அடுப்பில் தீயேற்றி வாணலியில் எண்ணெயிட்டு தாளிசப்பொருட்களைத் தாளிக்கவும்.

3. பொடியாக நறுக்கின அவரைக்காயைத் தாளிசப்பொருட்களுடன் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வேக விடவும்.

4. அடிக்கடி கிளறி விடவும்.

5. அவரைக்காய் வெந்த பிறகு துருவிய தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் குழம்பு, ரசத்துடன் பரிமாறவும்.

6. தேங்காய்த்துருவல், மிளகாய்வற்றல் சேர்ப்பதற்குப் பதில் 1 தேக்கரண்டி சாம்பார் தூள்(காய் வெந்தவுடன்) சேர்த்து வதக்கிப் பொரியல் செய்யவும் ருசிக்கும்.

கூடுதல் குறிப்புகள்:

Image

1. அவரைக்காயில் உயர் நிலைப்புரதம், இரும்பு, சுண்ணாம்புச்சத்து போன்ற அதிக சத்துக்கள் நிரம்பியுள்ளன.

2. நீரிழிவு உள்ளவர்களுக்கும் செரிமானப்பிரச்சினை, மலச்சிக்கல் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ஏற்றது.

3. நார்ச்சத்து அதிகம் என்பதாலும் ஜீரணம் ஆவது கடினம் என்பதாலும் இரவில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

4. பொரியலாக மட்டுமில்லாமல் சாம்பார், கூட்டு வகைகளிலும் செய்து பலன் பெறலாம்.

இணையத்தில் தொகுத்தத் தகவல்கள்:

அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும். நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும், விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும். சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.

பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு, கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும். அவரைப்பிஞ்சினை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.

ரத்தத்தைச் சுத்தமாக்கும்

அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. காமச்சிந்தனை, அதீத சிந்தனை, கோபம், எரிச்சல், இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.

நீரிழிவைக் குணமாக்கும்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால், நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும்.

மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. சிறுநீரைப் பெருக்கும். சளி, இருமலைப் போக்கும்

சரும நோய்களை குணமாக்கும்

முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும். உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும். சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும். இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.

முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும். ஆண்மை சக்தி அதிகரிக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.

http://nerudal.com/nerudal.31431.html தகவல்களுக்கு நன்றி.

கீரை பொரியல்

Image

தேவையானவை:

கீரை- 1 கட்டு
பாசிப்பருப்பு- 1 கப்
தேங்காய்- 1 தேக்கரண்டி

தாளிக்க:
எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்- 2

செய்முறை:

1. கீரையை மண் போக அலசி ஆய்ந்து பொடியாக நறுக்கவும்.

2. பாசிப்பருப்பைச் சுண்டல் பதத்திற்கு(ஒரு கிண்ணத்திற்கு ஒரு குவளை தண்ணீர் விட்டு) 2 விசில் விட்டு உதிராக வேக விடவும்.

3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு கீரையைப் போட்டு வேக விடவும்.

4. பாதி வெந்த பிறகு உப்பு போடவும்(கணிசம் குறையும் முதலிலேயே உப்பு போட்டால் உப்பின் சுவை கூடி விடும்).

5. தனியொரு வாணலியில் வெந்த பாசிப்பருப்பை உதிர்க்கவும்

6. கீரை வெந்த பிறகு பாசிப்பருப்பையும் சேர்த்து ஒன்றாக வதக்கவும்.

7. தேங்காய்த்துருவலைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி அலங்கரிக்கவும்.

7. சுவையான கீரைப் பொரியல் தயார், பருப்பின் சத்தும் கிடைக்கும். வெந்தயக்கீரை தவிர்த்து எல்லா விதக் கீரையிலும் செய்யலாம், ருசி அதிகம், குறிப்பாக முருங்கைக்கீரையில் சத்துக்களும் ருசியும் அதிகம்.

 

கேரட் பொரியல்

Image

தேவையானவை:

கேரட்- 4
தேங்காய்த்துருவல்- 2 தேக்கரண்டி

தாளிக்க

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிள்காய்வற்றல் – 2
கறிவேப்பிலை- 1 இணுக்கு
உப்பு- தேவையான அளவு

செய்முறை:

1. கேரட்டை மேலோட்டமாகத் தோல் சீவி(தோலில் உள்ள உயிர்ச்சத்துக்கள் அழிந்து விடுமென்பதால்) பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மைக்ரோவேவ் இருப்பவர்கள் ஒரு நிமிடத்திற்கு கேரட்டை வைத்து நறுக்கினால் நறுக்க சுலபமாக இருக்கும்.

2. வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்து விட்டு கேரட்ட், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.

3. அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விடவும்.

4. கேரட் வெந்தவுடன் தேங்காய்த்துருவலைப் போட்டுப் பிரட்டிப் பரிமாறவும்.

5. கேரட்டைப் பொடியாக நறுக்காமல் துருவிப் போட்டும் செய்யலாம், இவ்வாறு செய்யும் போது கோஸையும் துருவிப் போட்டுப் பொரியல் செய்யலாம்.

6. காலிபிளவர், பீட்ரூட், கோஸ், கேரட் போன்ற காய்களைத் துருவிப் பொரியல் செய்ய மேற்கூறிய காய்களின் பலன் அத்தனையும் உடலிற்குக் கிடைக்கும்.

 

கேரட்டின் நன்மைகள்:
1. தாவரத்தங்கம் என்று அழைக்கப்படுகின்ற, பச்சையாகவே சாப்பிடக் கூடிய கேரட்டின் மருத்துவ குணங்கள் ஏராளம். இத்தனை சிறப்பு வாய்ந்த கேரட்டை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் உடலில் உள்ள பல நோய்கள் போய் விடும். கேரட்டில் வைட்டமின் சத்து நிறைய உள்ளது. கேரட்டில் உள்ள கரோட்டீன் சத்தை ஈரல் வைட்டமின் ஏ சத்தாக மாற்றி உடம்பினுள் சேமித்து வைக்கும்.

 
2. கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்குக் கண்பார்வை பிரச்சனைகளும், கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது.

 
3.கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகேரட்டின்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது. 

 
4. பீட்டாகேரட்டின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கூட அது கேரட்டைப் போல பலன் தருவதில்லை என்பதும் உண்மை.

 

5. பீட்டா கரோட்டீன் கொழுப்பைக் கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

 
6. உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் அவசியம் சேர்க்க வேண்டிய காயிது(46 கலோரிகள் மட்டுமே கொண்டது)

 
7.இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தைத் தடுக்கிறது.

 
8. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்தக் கோளாறுகள் நீங்கும்.

 
9.கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பகப் புற்று நோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர், கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 
10.இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் “ஏ” விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்று நோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும். கேரட் சருமத்திற்குப் பொலிவைத் தந்து சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

 
11.கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.

 
12.கேரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் அதிக நன்மை தருவதுடன் செரிமானத்தைத் தூண்டி நல்ல ஜீரண சக்தியையும் அளிக்கிறது.

 
13.வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டிற்கு உண்டு குடல்புண் (அல்சர்) நோய் உள்ளவர்கள் கேரட்டைத் தொடர்ந்து சாப்பிட்டு வர குடல்புண் படி படியாக குறையும்.

 
14.புற்றுநோய்,எலும்புருக்கி,சிறுநீர்ப்பாதையில் அடைப்பு உள்ளவர்கள் கேரட்சாறுடன் பாலும்தேனும் கலந்து குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.
15.கர்ப்பிணிகள் சாப்பிட்ட பின் ஒரு கேரட்டை மென்று தின்றால் கர்ப்பப்பையின் சுவர்களில் நச்சுத்தன்மையை விளைவிக்கக்குடிய கிருமிகள் அழிந்துவிடும்.இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் உமிழ்நீர்சுரப்பு அதிகரிக்கும்.சீரணத்தைத் துரிதப்படுத்தும்.

 

***********************************************************

 

 

 

புடலங்காய் பொரியல்

scrapeenet_cropper_20130506124946DCUClJ

தேவையானவை:

புடலங்காய்- 4
தேங்காய்த் துருவல்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 11/2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய் வற்றல்- 2

செய்முறை:

1. புடலங்காயை நன்றாக அலம்பிக்க் கொண்டு நடுவே இரண்டாகக் கீறி விதைகளை நீக்கவும்.

2. வட்டமாக(அரை வட்டமாக வரும்) நறுக்கிக் கொள்ளவும்.

3. எண்ணெயில் தாளிசப்பொருட்களைத் தாளித்து விட்டு நறுக்கிய புடலங்காயைச் சேர்த்து தண்ணீர் சிறிதளவு விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.

4. மூடியைத் திறந்து அவ்வப்போது கிளறி விடவும்.

5. காய் வெந்தவுடன் தேஙாய்த்துருவலைப் போட்டுப் பரிமாறவும்.

இன்னொரு முறை:

photo (16)

தேங்காய்த் துருவலிற்குப் பதில் 1 தேக்கரண்டி சாம்பார் தூள் சேர்த்தும் காரசாரமாகப் புடலங்காய் பொரியலைச் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது மிளகாய்வற்றல் தேவையில்லை.

கூடுதல் செய்திகள்:

புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லதல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சியுள்ள காயையே பயன்படுத்த வேண்டும்.

புடலையின் உட்பகுதியில் நீண்ட குழாய் போன்று காணப்படும். அதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

எளிதில் செய்து விடக் கூடிய இந்தப் பொரியல் வத்தக்குழம்பு, சாம்பார், மோர்க்குழம்பு, பொரிச்சகரை போன்ற எதனுடனும் உண்ண நன்றாக இருக்கும்.

புடலங்காயின் பயன்கள்:

pudalangai

* புடலங்காயில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து ம்ற்றும் நிறைய புரதம் உள்ளது

* உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.

* அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும். நன்கு பசியைத் தூண்டும்.

* வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.

* இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும்.

* மூலநோய்க்காரர்களுக்குப் புடலங்காய் சிறந்த மருந்தாகும்.

* நரம்புகளுக்குப் புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

* சருமத்திற்குப் பளபளப்பைக் கொடுக்கும்.

* விந்துவைக் கெட்டிப்படுத்தும். ஆண்மைக் கோளாறுகளைப் போக்கும். உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும்.

* பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளைப் போக்கும்.

* கண் பார்வையைத் தூண்டும்.

* இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்..

* குடல் புண்ணை ஆற்றும்.

* வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோயின் பாதிப்புகள் குறையும்.

* புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும். தலை வலி, சளி மற்றும் ஆஸ்த்துமா நோய் உள்ளவர் புடலங்காயைத் தவிர்ப்பது நல்லது.

* புடலங்காய் எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.

அதிகம் பயனளிக்கவல்ல, சிறப்புத்தன்மைகள் கொண்ட புடலங்காயை அடிக்கடிப் பயன்படுத்தி குடும்ப ஆரோக்கியத்தைப் பேணலாம்.

 

செளசெள பொரியல்

Image

தேவையானவை:

செளசெள(பெங்களூர் கத்திரிக்காய்)- 2
துருவின தேங்காய்த்தூள்- 2 தேக்கரண்டி

தாளிக்க:

நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 மேசைக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 மேசைக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2
சீரகம்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1/2 இணுக்கு
உப்பு, மஞ்சள்தூள்- தேவையான அளவு

செய்முறை:

1. செளசெளக்களைத் தோலகற்றி சதுரமாக நறுக்கவும்.
2. தாளிசப்பொருட்களைத் தாளித்து விட்டு செளசெள, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் சிறிது விட்டு மூடி வைத்து அவ்வப்போது கிளறவும்.
3. தயாரானதும் தேங்காய்த்துருவலைப் போட்டுப் பிரட்டிப் பரிமாறவும்.
4. மிளகாய்வற்றலிற்குப் பதில் பச்சிமிளகாயைப் பயன்படுத்தினாலும் ருசி அதிகம்.
5.குளிர்ச்சிக்காய் என்பதால் கோடை காலத்தில் பயன்படுத்த ஏற்றது

 

 

 

 

 

கலவை பொரியல்

Image

தேவையானவை:

பீன்ஸ் – 10
கேரட்- 2
பச்சைப்பட்டாணி- 1 கிண்ணம்
பாசிப்பருப்பு- 1 கிண்ணம்

 

தாளிக்க:

எண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 மேசைக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 மேசைக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2
கறிவேப்பிலை- 1/2 இணுக்கு
உப்பு, மஞ்சள்தூள்- தேவையான அளவு

செய்முறை:

1. காய்கறிகளை அலம்பி நறுக்கிக் கொள்ளவும்.
2. எண்ணெயில் தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு பீன்ஸ், கேரட், பட்டாணியை உப்பு, மஞ்சள் தூளிட்டு நீர் சிறிதளவு விட்டு மூடி விடவும், அவ்வப்போது வதக்கவும்.
3. பாசிப்பருப்பைச் சுண்டலிற்கு வேக வைப்பது போல உதிராக வெந்து வைக்கவும்.
4. தனியே வாணலியில் சுண்டல் பதத்திற்கு உதிர் உதிராகப் பருப்பை வதக்கவும்.
5. வெந்த காயைச் சேர்த்துக் கலக்கவும்.

கூடுதல் செய்திகள்:

1. காய்கறிகள் குறைவாக இருக்கும் வேளையில் கணிசத்தைக் கூட்ட இந்த முறையில் செய்யலாம்.
2. இதே முறையில் பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்களிலும் பொரியல் செய்யலாம்.
3. மிளகாய்வற்றலிற்குப் பதில் பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்தும் செய்யக் கூடுதல் சுவை கிடைக்கும்.
4. ஒரே காயில் பொரியலாக இல்லாமல் 3, 4 காய்களின் சத்துக்களும் உடலிற்குக் கிடைக்கும்.
5. பார்க்கவும் வண்ணமயமாக இருக்கும் பொரியல் இது.