காய்கறி பரோத்தா (சில்லி பரோட்டா)

Image

தேவையான பொருட்கள்:

பரோட்டாக்கள் – 10
வெங்காயம்- 2
நாட்டுத் தக்காளி(பெரியது) – 1
குடமிளகாய்(பெரியது)௧
காரட்- 1
பட்டாணி- 1 டம்ளர்
கொண்டைக்கடலை சுண்டல்- 1 டம்ளர்
பூண்டு- 2 பல்லு
எலுமிச்சை சாறு- 2 டீஸ்பூன்
கொத்தமல்லி- அலங்கரிக்க
காரப்பொடி- 2 டீஸ்பூன்
கேஸரி கலர்(சிவப்பு நிற)- 1/2 டீஸ்பூன்
பட்டை – 8
சோம்பு- 2 டீஸ்பூன்
ஏலக்காய்- 2
கிராம்பு- 6
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

1.பரோட்டாக்களைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2.கொண்டைக்கடலையை முந்தின நாள் இரவே ஊற வைத்து கொத்து பரோட்டா செய்யும் வேளையிலே குக்கரில் சுண்டல் செய்யும் பதத்திற்கு ஏற்ப வேக வைத்துத் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
3.காய்களை மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
4.அடுப்பை மிதமான தீயில் வைத்து,வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கின பூண்டையும் சேர்த்து வதக்கவும்.
5.வெங்காயம் வதங்கினதும் தக்காளி,குடமிளகாய் போட்டு சற்று வதக்கவும். தண்ணீர் விடத் தேவையில்லை.
6.காரட்,பச்சைப் பட்டாணியையும் சேர்த்து உப்பு, காரப்பொடி சேர்த்து மூடி வைத்து வேக விடவும். அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விடவும்.
7.மசாலாக்குத் தேவையான பொருட்களைப் பச்சையாகவே திரித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
8.காய்கறிகள் வெந்தவுடன் மசாலாப்பொடி, சிவப்பு நிறமூட்டி சேர்த்து நன்றாகக் கிளறவும்.
9.இதனுடன் வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து காய்களுடன் ஒன்று சேர்க்கவும்.
10.காரம் பார்த்து விட்டு எலுமிச்சைச்சாற்றைச் சேர்க்கவும்.
11.பரோட்டா துண்டுகளைக் காய்கறிக்கலவையுடன் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
12.அலங்காரத்திற்கு கொத்தமல்லித்தழைகளைச் சேர்த்துப் பரிமாறவும்.

கூடுதல் குறிப்புகள்:

1.எண்ணெய் அல்லது நெய் சேர்த்து வெஜிடபிள் பரோட்டாக்களைச் செய்யலாம்.
2.காரப்பொடிக்குப் பதிலாக கடலைப்பருப்பு(1 டீஸ்பூன்),தனியா(1 டீஸ்பூன்),வெந்தயம்(5),மிளகாய்வற்றல்(4 டீஸ்பூன்) ஆகியனவற்றை வாசனை வரும் வரை வறுத்து ஆற விட்டுப் பொடித்து காய்களில் சேர்த்தும் செய்யலாம். இவ்வகை முறையில் காரப்பொடியால் காரம் கூடி விட்டது போன்ற பதட்டங்களைத் தவிர்க்கலாம்.
3.காரப்பொடிக்குப் பதில் வீட்டில் தயாரித்த சாம்பார் பொடியையும் பயன்படுத்தலாம்.
4.எலுமிச்சைச்சாற்றைக் காய்கறிகள் வதங்கினதும் பரோட்டாக்களைச் சேர்க்கும் முன்பு தான் போட வேண்டும்.
5.கடைகளில் மசாலாப்பொருட்களுக்கு என்றே கறிமசலாப்பொடி என்று தனியே ஒரு பேக் கிடைக்கும்,அதை வாங்கித் திரித்தும் பயன்படுத்தலாம்.
6.இவ்வகை பரோட்டாக்களுக்கு ஆனியன் ரெய்த்தா,வெஜிடபிள் ரெய்த்தா,வெள்ளரிப் பச்சடி போன்றன சிறந்த இணைகள்.

ஆனியன் ரெய்த்தா

Image

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம்- 2
பச்சைமிளகாய் – 2
தயிர்- 6 டீஸ்பூன்
கொத்தமல்லி- தேவையான அளவு

செய்முறை:

1.வெங்காயம்,பச்சைமிளகாய்,கொத்தமல்லி ஆகியனவற்றைத் தனித்தனியே மிகவும் பொடிதாக நறுக்கிக் கொள்ளவும்.
2.வெங்காயம்,பச்சைமிளகாயுடன் தயிரைச் சேர்த்து சிறிது உப்பையும் போட்டு கொத்தமல்லியை அலங்கரிக்க நிமிடங்களில் ரெய்த்தா தயார்.

 

மூங் தால் மசாலா பரோத்தா

Image

தேவையானவை:

கோதுமை மாவு- 2 கிண்ணம்
பாசிப்பருப்பு- 1/2 கிண்ணம்
தனியாப்பொடி- 1/2 தேக்கரண்டி
காரப்பொடி- 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா- 1/4 டீஸ்பூன்
சீரகம்- 1/2 தேக்கரண்டி
துருவின இஞ்சி- 1 தேக்கரண்டி
பெருங்காயம்- சிறிதளவு
நறுக்கின கொத்தமல்லி- 3 தேக்கரண்டி

செய்முறை:

1. பாசிப்பருப்பை இரண்டு மணி நேரங்கள் ஊற விடவும், தண்ணீரை நீக்கி அலசி மின்னரைப்பானில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன் அரைத்த கலவை, உப்பு, சீரகம், தனியாத்தூள், மிளகாய்த்தூள்,கரம் மசாலாத்தூள், இஞ்சித்துருவல், பெருங்காயம், கொத்தமல்லி ஆகியனவற்றைக் கலந்து தண்ணீர் சிறிதளவு விட்டு மாவாகப் பிசையவும்.

3. இருபது நிமிடங்கள் மாவை ஊற விடவும்.

4. இப்போது மாவை உருண்டைகளாக உருட்டி மசாலாவை உள்ளே வைத்துப் பரோத்தாக்களாக இடவும், இதையே எண்ணெய் தடவி மடக்கி முக்கோண வடிவிலோ சதுர வடிவிலோ செய்து கொள்ளலாம்.

5. சப்பாத்திக்கல்லில் இட்டதைப் போட்டு இரு பக்கமும் சிவக்க எடுத்து நெய் அல்லது எண்ணெயைத் தடவிப் பரிமாறவும்.

சன்னா தால் பரோத்தா

Image

தேவையானவை:

மைதா மாவு- 1 கிண்ணம்
கோதுமை மாவு- 1 கிண்ணம்
பால்- கால் கிண்ணம்
உப்பு- சிறிதளவு
வெண்ணெய் அல்லது உருக்கிய நெய்- 1 தேக்கரண்டி

பூரணம் செய்ய:

கடலைப்பருப்பு- 3/4 கிண்ணம்
துருவின வெங்காயம்
பச்சைமிளகாய்- 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி- 2 தேக்கரண்டி
துருவின இஞ்சி- 1 தேக்கரண்டி
உப்பு- சிறிதளவு
எண்ணெய்- 2 தேக்கரண்டி

Image

செய்முறை:

1. மைதா மாவு, கோதுமைமாவு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் ஒன்று கலந்து உப்பு, வெண்ணெய் அல்லது நெய் போட்டுப் பிசையவும்.

2. 15 நிமிடங்கள் மாவை ஊற விடவும்.

3. பூரணம் செய்ய, ஒரு மணி நேரம் கடலைப்பருப்பை ஊற வைக்கவும். அதிக நீரில் பருப்பை வேக விட்டுக் குழைவாக வெந்து எடுக்கவும்.

4. வாணலியில் எண்ணெயிட்டு தால் விட்டுக் கெட்டியாகும் வரை குறைந்த தீயில் வதக்கவும். துருவின வெங்காயம், துருவின இஞ்சி, பச்சைமிளகாய், சீரகம், கொத்தமல்லியைச் சன்னா தாலுடன் கலக்கவும்.ஆற விடவும்.

5. மாவை உருண்டைகளாக்கி பூரணத்தை உள்ளே வைத்து மடிக்கவும். இடவும். போளிக்குச் செய்வது போல் தான்.

6. அடுப்பை ஏற்றிச் சப்பாத்திக்கல்லில் இரு பக்கமும் திருப்பிச் சிவக்க எடுக்கவும்.

7. எண்ணெய் தடவிப் பரிமாறவும்.

 

 

 

கோஸ் பரோத்தா

Image

தேவையானவை;

கோதுமை மாவு- 1 1/2 கிண்ணம்
துருவின முட்டைக்கோஸ்- 1 கிண்ணம்
பச்சைமிளகாய்- 1
சீரகம்- 1 தேக்கரண்டி
காரப்பொடி- 1/2 தேக்கரண்டி
எண்ணெய்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
கொத்தமல்லி- சிறிதளவு
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி

செய்முறை:

1. கோதுமை மாவைச் சப்பாத்திக்குப் பிசைவது போல் பிசைந்து வைக்கவும்.

2. வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் துருவின கோஸூடன் சீரகம், பொடியாக நறுக்கின பச்சைமிளகாய், காரப்பொடி, உப்பு, மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைச் சேர்த்து ஈரம் ஓரளவிற்குப் போக வதக்க வேண்டும்.

3. பிறகு பூரணத்தைச்(ஈரம் போகப் பிழிந்து) சப்பாத்தி மாவு உருண்டைக்குள் வைத்துப் பரோத்தாக்களாக இடவும்.

4. சப்பாத்திக்கல்லில் போட்டு இரு பக்கமும் திருப்பி வெந்தவுடன் எண்ணெய் தடவிப் பரிமாறவும்.

5. தால், குருமா, கொத்ஸூ வகைகள் இணை உணவுகள்.

கூடுதல் குறிப்புகள்:

1. கோஸில் பொரியல், கூட்டு என்று செய்திருப்போம், இது வித்தியாசமான ருசியான சிற்றுண்டி.

2. மேற்கூறிய முறையிலேயே பூரணமாகச் செய்யாமல் கோதுமை மாவுடன் மேலே குறிப்பிட்டவற்றை ஒன்றாகக் கலந்தும் சப்பாத்தி போலச் செய்யலாம்.

3. வித்தியாச விரும்பிகளுக்கும் ஒரே மாதிரி சிற்றுண்டி செய்து அலுத்தவர்களுக்கும் இது மாறுபட்ட வகை.

 

கார்ன் பரோத்தா

Image

தேவையானவை:

சோளம்(கார்ன்)- 1/4 கிண்ணம்
கோதுமை மாவு- 1/2 கிண்ணம்
பச்சைமிளகாய்- 2
சீரகம்- 1/2 தேக்கரண்டி
காரப்பொடி- 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி- சிறிதளவு

Image

செய்முறை:

1. சோளம், பச்சமிளகாய், சீரகத்தை நீர் அதிகம் விடாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
2. கோதுமை மாவுடன், அரைத்த கலவையைப் போட்டு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, காரப்பொடி, எண்ணெயைச் சேர்த்துப் பிசைந்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
3. பிறகு சப்பாத்திக்கல்லில் இட்டு கார்ன் சப்பாத்திகளாகச் செய்தெடுக்கவும்.

 

இன்னொரு முறை:

1. இம்முறையில் அரைத்த சோளக்கலவையை எண்ணெய் விட்டு வதக்கி, அதனுடன் பொடியாக நறுக்கிய கீரையையும் சேர்த்துக் கெட்டியாக்கவும்.
2. கோதுமை மாவு தனியே பிசைந்து கொள்ளவும்.
3. சோளம் பூரணத்தை உள்ளே வைத்து பரோத்தாக்களாகச் செய்யவும்.

பீஸ் பரோத்தா(மட்டர் பரோத்தா)

Image

தேவையானவை:

கோதுமை மாவு- 2 கிண்ணம்
பச்சைப்பட்டாணி- 1 கிண்ணம்
எண்ணெய்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு

பூரணத்திற்கு:

வெங்காயம்- 1
பச்சைமிளகாய்- 2
சீரகப்பொடி- 1 தேக்கரண்டி
காரப்பொடி- 1/2 தேக்கரண்டி
கரம் மசாலாப் பொடி- 1/2 தேக்கரண்டி
பூண்டு- 2 பல்லு
எண்ணெய்(பூரணத்திற்கு)- 3 தேக்கரண்டி
பரோட்டா செய்ய வேண்டிய அளவு- நெய் அல்லது எண்ணெய்

Image

செய்முறை:

1.கோதுமை மாவைச் சப்பாத்தி செய்யும் பதத்திற்கேற்பப் பிசைந்து கொள்ளவும்.

2. ஊற வைத்த பச்சைப்பட்டாணியை(ஃபீரீஸரில் உள்ளதையும் பயன்படுத்தலாம்) வெங்காயம், பூண்டு,பச்சைமிளாய், சீரகத்துடன் சேர்த்துத் தண்ணீர் விடாமல் மையாக மின்னரைப்பானில் அரைத்து எடுக்கவும்.

3. அடிகனமான வாணலியில் நெய்யை விட்டு மிதமான தீயில் அரைத்தக் கலவையைக் கொட்டிக் கிளறவும்.

4. சிறிதளவு உப்பு, காரப்பொடி, கரம் மசாலாப் பொடியைச் சேர்க்கவும்.

5. கெட்டியாக வரும் பதத்தில் பூரணத்தை இறக்கவும். ஆற விடவும்.

6. மாவைச் சிறு வட்டமாக குழவியினால் இட்டு ,சிறிது எண்ணெயைத் தடவி, அதன் மேல் பூரணத்தைச் சிறியவில்லையாகத் தட்டி வைத்து வட்டத்தின் விளிம்பினால் பூரணத்தை மூடவும்.

7.சப்பாத்தி மாவை உருண்டைகளாக உருட்டிச் சமனாக உருட்டிய பூரணத்தை உள்ளே வைத்துப் பரோத்தாக்கள் தயாரிக்கவும்.ஆலுபரோட்டா, போளி செய்வது போல இதுவும் அதே முறைதான்,மேல் மாவில் உருண்டைகளைப் பிரட்டி, குழவியின் உதவியால் பரோட்டாக்களாகச் செய்யவும்.

8.காயும், கல்லில் பரோட்டாவைப் போட்டு ,மேலே ஈரப்பதம் குறையும் போதே திருப்பிப் போடவும். விளிம்பில் சற்று அழுத்தம் கொடுத்து,நெய்யோ, எண்ணெயோ மேலே தடவித் திருப்பவும்..நன்றாக உப்பிக் கொண்டு மேலெழும்பும்.இப்பாகத்திலும் நெய் தடவி, திருப்பியினால் சற்று அழுத்தம் கொடுத்து சிவக்கப் பரோட்டாக்களைச் செய்து எடுக்கவும்.

pudina-paratha-recipe

கூடுதல் குறிப்புகள்:

1. ஃபிரீஸரில் உள்ள பச்சைப்பட்டாணியைப் பயன்படுத்த விரும்புவோர் அதனைச் சுடு நீரில் இட்டுக் குளிர்ந்த தன்மை போன பிறகே அரைக்க வேண்டும். பட்டாணியை மசித்தும் மேற்கூறிய முறையில் செய்யலாம். மசித்துச் செய்யும் புகைப்படம் மேலுள்ளது, அரைத்துச் செய்யும் படமிது.

2. இவ்வகை பூரணங்களையும் சப்பாத்தி மாவையும் முந்தின நாள் தாயரித்துக் கொண்டால் காலை வேளை பரபரப்புகளுக்கு உதவியாக இருக்கும், அவ்வாறு செய்யும் போது பூரணத்தில் காற்று புகாமல் நீர் விடாமல் மூடி வைக்க வேண்டும்.

3. அரைத்து சப்பாத்தி மாவு பிசையும் போதே பீஸ் சப்பாத்திகளாகவும் செய்யலாம்.இதற்குத் தால், கூட்டு, குருமா அசத்தல் இணைகள்.

4. என்னம்மா எப்பவுமே சப்பாத்தியா, இட்லியா என்று அலுப்பவர்களுக்கும் வித்தியாச விரும்பிகளுக்கும் ஏற்ற சிற்றுண்டியிது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த மாதிரி வித்தியாசமான செய்முறைகளை விரும்பி உண்ணுவார்கள். இதனுடன் பனீர் சேர்த்தும் செய்யலாம், அதைப் பனீர் பீஸ் பரோத்தா என்பர்.

 

ஆலூ பரோத்தா

Image

தேவையானவை:

கோதுமை மாவு- 2 கிண்ணம்
உருளைக்கிழங்கு- 2
சிறிய பச்சைமிளகாய்- 4
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் பொடி- 1/2 தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு- கால் மூடி
கொத்தமல்லி- ஒரு கைப்பிடி

செய்முறை:

1. கோதுமை மாவைச் சலித்துச் சுடு தண்ணீரில் சப்பாத்தி மாவிற்குப் பிசைவது போலப் பிசைந்து கொள்ளவும்.

2. உருளைக்கிழங்கைக் குழைவாகக் குக்கரில் வேக விட்டு மசிக்கவும்.

3. வெந்த உருளைக்கிழங்குடன் உப்பு,மஞ்சள் தூள், சீரகம், பச்சைமிளகாய், எலுமிச்சைச்சாறு, அலம்பி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஆகியனவற்றைச் சேர்த்து மசிக்கவும். குழந்தை உண்பது போல மென்மையாகப் பிசிறின்றி ஆலூ அமைய வேண்டும்.

4. மசித்த கிழங்கை உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி மாவை இட்டு நடுவில் பூரணமாக வைத்து வட்டமாக இடவும்.(உருளைக்கிழங்கும் மாவும் சமமான அளவில் இருக்க வேண்டும்)

5. அடுப்பை ஏற்றிச் சப்பாத்திக்கல்லில் இந்தப் பரோத்தாக்களைப் போட்டு, திருப்பிப் போட்டு, வெந்த பிறகு எண்ணெயைத் தடவி சிவப்பாகச் செய்து எடுத்துப் பரிமாறவும்.

6. தால், குருமா, கொண்டைக்கடலை மசாலா என்று சப்பாத்திக்குச் செய்யும் இணை உணவுகளையே இதற்கும் செய்யலாம்.

7.குழந்தைகளுக்கு விருப்பமான இந்தப் பரோத்தாக்களின் காரத்தைக் கூட்டியும் குறைத்தும் அவரவர் விருப்பத்திற்கேற்பச் செய்து கொள்ளலாம்.

முள்ளங்கி பரோத்தா

Image

தேவையானவை:

கோதுமை மாவு- 2 கிண்ண அளவு
வெள்ளை முள்ளங்கி- 2
கொத்தமல்லி- சிறிதளவு
பச்சைமிளகாய்- 2
பூண்டு- 2 பல்லு
சீரகம்- 1 தேக்கரண்டி
காரப்பொடி- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- 1 தேக்கரண்டி

செய்முறை:

1. முள்ளங்கியை அலம்பித் தோல் நீக்கி அரிப்பானில் துருவிக் கொள்ளவும்.
2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, பொடியாக நறுக்கின் பச்சைமிளகாய், துருவின முள்ளங்கி, துருவிய பூண்டு, சீரகம்,காரப்பொடி, உப்பு, மஞ்சள் தூள் அனைத்தையும் கலந்து சுடு நீர் விட்டு சப்பாத்தி மாவுக்குப் பிசைவது போல் பிசையவும். அரை மணி நேரம் ஊற விடவும்.
3. சப்பாத்திக்குச் செய்வது போல் பந்துகளாக உருட்டி, வட்டமாக சப்பாத்தி போல் இட்டு, அடுப்பை ஏற்றிக் கல்லில் போட்டுத் திருப்பி எடுக்கவும். எடுக்கும் வேளையில் எண்ணெயைத் தடவவும்.

mooli-paratha

இன்னொரு முறை (மூளி பரோத்தா):

1. இம்முறையில் செய்வதை மூளிப்பரோத்தா என்றழைப்பர்.
2. இதே முறையில் முள்ளங்கி, பச்சைமிளகாய், பூண்டு, கொத்தமல்லி அனைத்தையும் வதக்கி நீர் போகப் பிழிந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
3. சப்பாத்திக்குப் பிசைவது போல் பிசைந்து உருண்டைகளாக உருட்டி, இந்த முள்ளங்கி மசாலாவை உள்ளே பூரணமாக வைத்துப் பரோத்தா போல் இட்டு கல்லில் போட்டு எடுக்கலாம்.
4. இம்முறையில் முள்ளங்கி ஈரமில்லாமல் இருந்தால் தான் இட வரும், அதனால் கவனமாகச் செய்ய வேண்டும்.
5. இதற்குத் தால், பனீர் பட்டர் மசாலா, குருமா, கொத்ஸூ போன்றவை அருமையான இணை உணவுகள்.

கூடுதல் குறிப்பு:

மாவைச் சுவைத்துப் பார்க்கும் போது காரம் கூடி விட்டது போல் தோன்றினால் தயிரோ எலுமிச்சைச்சாறோ சிறிதளவு சேர்க்கலாம், சப்பாத்தி போல் செய்யும் வேளைகளின் எண்ணெய்க்குப் பதில் வெண்ணெய் தடவினாலும் ருசி அதிகம்.

 

 

 

 

வெந்தயக்கீரைச்சப்பாத்தி (மேதி பரோத்தா)

Image

தேவையான பொருட்கள்:

வெந்தயக்கீரை- ஒரு கட்டு
கோதுமை மாவு- 2 டம்ளர்
பச்சைமிளகாய்- 6
காரப்பொடி- 1 டீஸ்பூன்
கரம்மசாலாப்பொடி- 1 டீஸ்பூன்
சீரகம்- 1 டீஸ்பூன்
ஓமம்- 1/4 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

1.வெந்தயக்கீரையை மண் போக அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2.சுடு தண்ணீர் விட்டு கோதுமை மாவையும் வெந்தயக்கீரையையும் சேர்த்துப் பிசைந்து அந்த மாவுடன் உப்பு,சீரகம்,பச்சைமிளகாய்,கரம்மசாலப்பொடி, காரப்பொடி, ஓமம் ஆகியனவற்றைச் சேர்க்கவும்.

3.அரை மணி நேரம் பிசைந்த மாவைத் தனியே வைக்கவும்.

4.உருண்டைகளாக இட்டு வட்டமாகத் தேய்த்து சப்பாத்திக்கல்லில் வெந்தயக்கீரைச் சப்பாத்தியைப் போட்டு எடுக்கவும். சப்பாத்தி சிவந்தவுடன் இரு புறமும் மாற்றி மாற்றிப் போட்டு சிவக்க எடுக்கவும். கல்லிலிருந்து இறக்கும் முன் எண்ணெய் அல்லது நெய் தடவிப் பரிமாறவும்.

கூடுதல் தகவல்கள்:

1. வெந்தயக்கீரைச் சப்பாத்திக்குச் சிறந்த இணை பாசிப்பருப்பு தால்.
2. வெந்தயக்கீரைக்குச் சொன்ன முறையில் கீரையையும் கீரைச்சப்பாத்திகளாகச் செய்து பார்க்கலாம்.

காலிப்ளவர் சப்பாத்தி (கோபி பரோத்தா)

Image

தேவையான பொருட்கள்:

சிறிய காலிபிளவர்-1
கோதுமை மாவு-2 கப்
சீரகம்-1 டீஸ்பூன்
பச்சைமிளகாய்-5
உப்பு-தேவையான அளவு
மஞ்சள்தூள்-1/2 டீஸ்பூன்
எண்ணெய்-தேவையான அளவு
கொத்தமல்லி-ஒரு கப்
எலுமிச்சைச்சாறு-1 டீஸ்பூன்

செய்முறை:

1.காலிபிளவரை அலம்பிக் கொண்டு அரிப்பில் துருவிக் கொள்ளவும் அல்லது மிக்ஸியில் தண்ணீர் விடாமல் திரித்துக் கொள்ளவும்.
2.பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும். இல்லையென்றால் அதையும் துருவிக் கொள்ளலாம்.
3.துருவிய காலிபிளவர்,பச்சைமிளகாய்,சீரகம்,உப்பு,மஞ்சள்தூள் ஆகியனவற்றைக் கோதுமை மாவுடன் சேர்த்துக் கைகளால் கிளறி விடவும்.
4.சுடுதண்ணீரைச் சேர்த்து மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.
5.இதனுடன் நறுக்கிய கொத்தமல்லியையும் சிறிது எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து மீண்டும் பிசையவும்.
6.ஒரு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை பிசைந்த மாவை மூடி வைத்து விடவும்.
7.பிறகு உருண்டைகளாக்கி சப்பாத்தி வடிவில் வட்டமாக இட்டு சப்பாத்திக்கல்லில் போட்டு வேக விடவும். திருப்பிப் போட்டு வேக விடவும்.
8.அடிக்கடி திருப்பிப் போட வேண்டும். பிறகு எண்ணெய் விட்டு 2,3 முறை திருப்பிப் போட்டு விட்டுத் தட்டில் போடவும்.

இன்னொரு முறை:

காலிபிளவரைத் துருவிக் கொண்டு அதனை ஒரு வாணலியில் உப்பு, மஞ்சள் தூள்,கரம் மசாலா,காரப்பொடி சேர்த்து வதக்கி இந்த மசாலாவைச் சப்பாத்தி மாவை இடும் போது உள்ளே வைத்து இட்டாலும் சுவை நன்றாக இருக்கும். ஈரம் இருந்தால் பிழிந்து கொள்ள வேண்டும், இல்லையென்றால் சப்பாத்தி இட வராது.

இதை வதக்காமல் பச்சையாகவும் செய்யலாம், வட இந்தியர்களின் முறையும் அதுவே. காலிபிளவரைத் தண்ணீரின்றிப் பிழிந்து விட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சீரகம் சேர்ந்து சப்பாத்தி மாவினுள் வைத்துச் செய்வர்.

கூடுதல் தகவல்கள்:

1.காலிபிளவரை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உப்பு கலந்த சுடுதண்ணீரில் மூழ்க வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அதிலுள்ள கிருமிகள் அழிந்து விடும்.பிறகு ஈரம் போகத் துடைக்க வேண்டும்.
2.சத்து மிகுந்த காலிபிளவர் சப்பாத்தியை இணை உணவு இல்லாமலே வெறுமனே உண்ணலாம். மாவைப் பிசைந்து ஊற வைப்பதால் படு மென்மையாக வரும்.
3.சப்பாத்தி நிறைய பேருக்கு சரியாக வருவதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் இவ்வகை பரோத்தாக்களைச் செய்தால் நற்பெயர் பெறலாம்.(ஏனென்றால் சிலருக்கு வெறும் சப்பாத்தி நேரமாக ஆகக் கல் போல் ஆகி விடும். இந்த சப்பாத்திகள் அப்படியல்ல)
4. வட இந்தியர்கள் செய்யும் இவ்வகை உணவுகளைக் கவனமாகச் செய்தால் மட்டுமே வெற்றி கிட்டும் என்பது அனுபவ ரீதியான உண்மை.