அரிசி உப்புமா

Upma

தேவையானவை:

பச்சரிசி- ஒன்றரை கப்
உப்பு- தேவையான அளவு
தேங்காய்த்துருவல்- கால் மூடி
திரித்தத் துவரம்பருப்பு- ஒரு கைப்பிடி

தாளிக்க:

எண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 3 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2
பச்சைமிளகாய்- 1
முந்திரிப்பருப்பு- 10
இஞ்சி- 1 துண்டு
கறிவேப்பிலை- 2 இணுக்கு

செய்முறை:

1. அரிசியை 3 மணி நேரம் சுடுதண்ணீரில் ஊற விட வேண்டும்.
2. அரிசியை ஈரம் போக உலர்த்தி மின்னரைப்பானில் உப்பு சேர்த்து நற நற பதத்திற்கு(மையாக அரைக்காமல்) அரைத்து எடுக்கவும்.
3. துவரம்பருப்பைத் திரித்துக் கொள்ளவும்.
4. ஒன்னரை கப் அரிசிக்கு 4 கப் தண்ணீரைத் தனியே சுட வைக்கவும்.
5. ஒரு வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு அரைத்த அரிசிக்கலவையைச் சேர்த்து கை பொறுக்கும் சூட்டில் வதக்கவும்.
6. கொதிக்கும் சுடு நீரை அரிசிக்கலவையுடன் கொட்ட வேண்டும், பிறகு திரித்தத் துவரம்பருப்பு(இதுவும் நற நற பதம்), காயம், தேங்காய்த் தூள் சேர்த்துக் கிளற வேண்டும்.
7. 8 நிமிடங்களில் அரிசி உப்புமா வெந்து விடும்.
8. பிறகு கறிவேப்பிலை தூவி எண்ணெய் விட்டு இறக்கவும்.
9. அரிசி உப்புமாவிற்குக் காரச்சட்னி அருமையான இணையுணவு.
10. இதே உப்புமாவைக் கொழுக்கட்டையாகப் பிடித்து அரிசி உப்புமா கொழுக்கட்டையாக்கலாம்.

கோதுமை ரவா உப்புமா

wheat_rava_upma (1)

தேவையானவை:

கோதுமை ரவை- 1 கப்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் பொடி- சிறிதளவு
வெங்காயம்- 1
தக்காளி- 1
இஞ்சி- 1 துண்டு

தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1
பச்சை மிளகாய்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க

செய்முறை:

1. கோதுமை ரவையைச் சிவக்க வறுத்துத் தனியே தாம்பாளத்தில் ஆற விடவும்.
2. தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு அதிலேயே நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தைப் போட்டுச் சிவக்க வதக்கவும், அடுத்துத் தக்காளி போட்டு வதக்கவும்.
3. பிறகு 2 டம்ளர் தண்ணீர் விடு சுட வைக்கவும்.
4. தண்ணீர் கொதித்துக் காய்கறி வெந்து வரும் போது வறுத்து ஆற விட்ட கோதுமை ரவையை அடிப் பிடிக்காமல் கிளறி வரவும்.
5. தீயைக் குறைத்து வைத்து, 5 நிமிடங்கள் வேக விட சுவையான, சத்துள்ள கோதுமை ரவை தயார். கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவவும். சட்னியோடு பரிமாற ருசி அள்ளும்.

இட்லி உப்புமா

தேவையானவை:

DSC05623

இட்லிகள்- 10
இட்லி மிளகாய்ப்பொடி- 1 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகைவற்றல்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு
பெரிய வெங்காயம்- 1

செய்முறை:

1. காலையில் செய்து மீந்த இட்லிகளையோ புதிதாகத் தயாரித்த இட்லிகளையோப் பயன்படுத்தலாம்.
2. தாளிசப்பொருட்களை ஒரு வாணலியில் தாளித்துக் கொண்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும்.
3. இட்லிகளை உதிர்த்துக் கொள்ளவும்
4. தாளிசப்பொருட்களோடு இட்லியைக் கலந்து இட்லி மிளகாய்ப்பொடியையும் சேர்த்துக் கிளறிச் சூடாகப் பரிமாறவும்.
5. மீந்த இட்லிகள் கனமாக ஆகி விடும், வீணடிப்பதற்குப் பதிலாக இவ்வகையில் சுடச்சுட உப்புமா செய்தால் உனக்கு, எனக்கு எனப் போட்டிப் போட்டு கிடுகிடுவென வியாபாரம் ஆகி விடும்.

சேமியா உப்புமா

தேவையானவை:

semiya upuma
சேமியா – 1 கப்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு
காய்கள்:
பெரிய வெங்காயம்- 1
தக்காளி- 1/2
குடமிளகாய்- 1/2
உருளைக்கிழங்கு-1
காரட்- 1
வேக வைத்தப் பட்டாணி- 1 கப்

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2
பச்சைமிளகாய்- 1
துருவிய இஞ்சி- 1 துண்டு
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

1. சேமியாவைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
2. வேறொரு வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு காய்கறிகளையும்(வெங்காயம், பிற காய்கள், தக்காளி) வரிசையில் வதக்கவும்.
3. ஒரு கப் சேமியாவிற்கு 1 1/2 கப் தண்ணீர் விகிதம் காய்கறிகளுடன் சேர்த்து வேக விடவும்.
4. தண்ணீர் கொதித்துக் காய்களும் வெந்ததும் வறுத்த சேமியாவைச் சிறிது சிறிதாகக் கொட்டி அடிப்பிடிக்காமல் கிளறவும்.
5. ஒரு சில நிமிடங்களிலேயே வெந்த உப்புமாவை எண்ணெய் விட்டுக் கிளறிக் கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.
6. உப்புமாவில் மிளகாய்வற்றல் அல்லது பச்சைமிளகாய் மட்டும் சேர்த்துச் செய்யத் தனிச்சுவை கிட்டும்.
7. மிளகாய்வற்றல் அல்லது பச்சைமிளகாயைத் தவிர்த்து 1 தேக்கரண்டி சாம்பார் பொடி காய் வேகும் போது சேர்க்க அதுவும் தனிச்சுவை தரும்.
8.காய்கள் சேர்க்காமல் மஞ்சள் தூள் சேர்க்காமல் வெளீரென்று செய்யும் உப்புமாவிற்கும் ருசி அதிகம்.
9. காய்கறிகள் சேர்த்து உப்புமா செய்வதே எப்போதும் ஆரோக்கியத்திற்கு நல்லது. உப்புமாவைச் சுடச் சுடச் சாப்பிட இன்னும் ருசி அதிகம். உப்புமாவை மாலை வேளைகளில் செய்து வைத்துக் கொண்டால் பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அசத்தலாம்.
10.ரவா உப்புமாவிற்குச் சொன்னது போல சேமியாவையும் வறுத்து வைத்துக் கொண்டால் உப்புமா, சேமியா கேசரி, சேமியா பாயசத்தை விரைவில் செய்து விடலாம். ரவை, சேமியாவை வறுத்து வைப்பதால் பூச்சிகளும் அண்டாது.

ரவா உப்புமா

தேவையானவை:

DSC08726

ரவை- 2 கப்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு
காய்கள்:
பெரிய வெங்காயம்- 1
தக்காளி- 1
குடமிளகாய்- 1/2
உருளைக்கிழங்கு-1
காரட்- 1
வேக வைத்தப் பட்டாணி- 1 கப்

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2
பச்சைமிளகாய்- 1
துருவிய இஞ்சி- 1 துண்டு
முந்திரிப்பருப்பு- 1 கைப்பிடி(விரும்புவர்கள் போடலாம்)
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க

செய்முறை:

DSC08722

 

1. ரவையைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்
2. வாணலியைச் சூடாக்கி எண்ணெய் விட்டு தாளிசப்பொருட்களைத் தாளிக்கவும்.
3. தாளிப்பானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும், பிறகு குடமிளகாய், காரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, தக்காளி(இறுதியாகச் சேர்க்கவும்) சேர்க்கவும்.
4. ஒரு கப் ரவைக்கு ஒன்ரறை கப் தண்ணீர் காய்ச்சித் தனியே வைத்துக் கொள்ளவும்(குழைவாக விரும்புபவர்கள் ஒரு கப் ரவைக்கு 2 கப் தண்ணீர் சுட வைத்துக் கொள்ளலாம்)
5. காய்ச்சினத் தண்ணீரைக் காய்கறிக் கலவையுடன் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும்.
6. காயும் வெந்து தண்ணீரும் கொதிக்கும் போது தனியே வறுத்த ரவையை ஒரு புறம் விட்டுக் கொண்டே மறுபுறம் கெட்டிப் பிடிக்காமல் கிளறிக் கொண்டே வரவும், தீயைக் குறைத்து வைக்கவும், இல்லையேல் வென்னீர் கையில் பட்டு விடும்.
7. உப்புமா வெந்தவுடன் எண்ணெய் சேர்த்து அலங்கரிக்கக் கொத்தமல்லி தூவித் தேங்காய்ச்சட்னி, பீர்க்கங்காய்த் துவையல் போன்ற ஏதேனும் இணையுணவுடன் பரிமாறவும்.

கூடுதல் குறிப்புகள்:

1. உப்புமா ஆபத்பாந்தவன், அனாதரக்ஷகன் போல அவசரத் தேவைகளுக்கு, திடீர் விருந்தினரைச் சமாளிக்க உதவும்.
2. உப்புமாவிற்கு உப்பு மா என்று கேட்டு விடாமல் இருக்க முன் ஜாக்கிரதை முத்தழகி(முத்தண்ணாவிற்கு எதிர்ப்பதம்)யாய்க் கவனமாக உப்பு சரியான அளவில் போட்டு விட வேண்டும். முதலில் உப்பு போட்டுக் கொதிக்க விட வேண்டும், ரவையைக் கொட்டின பிறகு உப்பு ஒன்று சேராது.
3. காரம் அவரவர் குடும்பத்தினரின் வசதிக்கேற்பக் கூட்டியும் குறைத்தும் செய்யலாம்.
4. ஓய்வு நேரங்களில் ரவையை வறுத்துத் தனியே காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் உப்புமாவோ ரவா கேசரியோ செய்வது எளிது.
5. வெங்காயம், தக்காளி போட்டும் செய்யலாம்.
6. காய்கறிகளுடன் உப்புமா செய்வதால் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
7. உப்புமா செய்து முடித்ததும் தனியே ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி இந்த உப்புமாவைக் கொட்டிச் சமப்படுத்தவும், பிறகு வேறொரு தாம்பாளம் அல்லது பாத்திரத்தில் கொட்ட அழகான வடிவத்துடன் வரும். சமையல் செய்வதை விட அழகாகப் பார்வையாளர்களை(இங்க நம்ம வீட்டு ஆட்கள் தான் பார்வையாளர்கள், ரசிகர்கள் எல்லாமே) கவரலாம். 8. உப்புமாவா என்று அலறுபவர்களைக் கூட அசத்தலாம்.

 

ஓட்ஸ் இட்லி

Image

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – 2 கிண்ணம்
தயிர் – 1/2 கிண்ணம்
உப்பு- தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1/4 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1/4 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 2
துருவிய கேரட்- 1 கிண்ணம்
கொத்தமல்லி

செய்முறை:

1.முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஓட்ஸைப் போட்டு, பொன்னிறமாக வறுத்து, பின் மின்னரைப்பானில் பொடி செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

2. பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கேரட் சேர்த்து வதக்கி, 1 நிமிடம் கிளறி இறக்கி, அதனைப் பொடி செய்த ஓட்ஸுடன் சேர்க்க வேண்டும்.

3.பிறகு அதில் தயிர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்குக் கலந்து கொள்ள வேண்டும். முக்கியமாக இதில் தண்ணீரை சேர்க்கக்கூடாது. உடனடியாக இட்லிகளாக வார்க்காமல் ஒரு மணி நேரம் வெளியே வைக்கவும்.

4. பின்னர் அந்த மாவை இட்லித்தட்டுகளில் எண்ணெய் தடவி இட்லிகளாக ஊற்றி எடுத்தால், சுவையான ஆரோக்கியமான ஓட்ஸ் இட்லி தயார்.

தொட்டுக்கொள்ள சட்னி, துவையல், சாம்பார், மிளகாய்ப்பொடி அருமையாக இருக்கும்.

 

ஓட்ஸ் அம்மிணிக்கொழுக்கட்டை

3

செய்முறை:

ஓட்ஸ்- 1 கப்
பச்சரிசிமாவு- 1 கப்
தேங்காய்த்துருவல்- 1/4 கப்
உப்பு- தேவையான அளவு
காயம்- சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1/2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு

தூவ:

மிளகாய்த்தூள்- சிறிதளவு
மிளகுத்தூள்- சிறிதளவு
இட்லி மிளகாய்ப்பொடி- 1/2 தேக்கரண்டி

செய்முறை:

2

1. மின்னரைப்பானில் ஓட்ஸைத் திரித்துக் கொள்ளவும்.
2. திரித்த ஓட்ஸ், அரிசிமாவைப் பச்சை வாடைப் போக வதக்கிக் கொண்டு உப்பு, காயம் சேர்க்கவும்.
3. வழக்கமாகக் கொழுக்கட்டைக்குச் செய்வது போல சுடுதண்ணீரைச் சேர்த்துக் கொழுக்கட்டை மாவு பதத்திற்கு ஆக்கவும்.
4. தேங்காய்த்துருவலைச் சேர்க்கவும்.
5. அடுப்பை அணைத்து விட்டு சூடு லேசாக ஆறியதும் உருண்டைகள் ஆக்கவும்.
6. இட்லிப்பானையில் தட்டுக்களில் எண்ணெய் தடவிக் கொழுக்கட்டைகளை அடுக்கவும்.
7. ஆவியில் வேக விடவும்.
8. அவை வெந்து கொண்டிருக்கும் போது இன்னொரு வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொள்ளவும்.
9. கொழுக்கட்டை தயாரானதும் ஓரிரு நிமிடங்கள் வெளியே வைத்து சூடு ஆற விடவும்.
10. தாளித்தப் பொருட்களுடன் கொழுக்கட்டைகளைப் பிரட்டி எடுக்கவும்.
11. அப்போது முப்பொடிகளைத்(மிளகாய்த்தூள், மிளகுத்தூள், இட்லி மிளகாய்ப்பொடி) தூவிப் பிரட்டவும்.
12. மிகவும் ருசியாக இருக்கும் ஓட்ஸ் காரக்கொழுக்கட்டை. அம்மிணிக்கொழுக்கட்டையின் பாணியில் செய்வதால் ஓட்ஸ் அம்மிணிக்கொழுக்கட்டை என்ற நாமகரணம்.

1

ஓட்ஸை வைத்துக் கொண்டு என்னடா செய்வது என்று திருதிருவென விழித்துக் கொண்டிருக்க வேண்டாம். இனி ஓட்ஸில் விதவிதமான சமையலைச் செய்து அசத்தலாம். உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம்.

அம்மிணிக்கொழுக்கட்டை பாணியில் செய்யாமல் தாளித்ததை வதக்கிய கொழுக்கட்டைமாவுடன் சேர்த்தே ஆவியில் வேக வைக்கலாம்.

 

 

ஓட்ஸ் பணியாரம்

எளிய முறை:

0.oa

தேவையானவை:

ஓட்ஸ்- 1 டம்ளர்
பச்சரிசி மாவு- 1 டம்ளர்
ரவை- 1/4 கப்
தயிர்- 1/2 கப்
உப்பு- தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 2
இஞ்சி,பூண்டு விழுது- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1/2 இணுக்கு
காயம்- சிறிதளவு
வெங்காயம்- 1/2 கப்

செய்முறை:

Image

1. ஓட்ஸையும் ரவையையும் தனித்தனியே வறுக்கவும், பிறகு ஒன்றாகத் திரிக்கவும்.
2. அரைத்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி அரிசிமாவையும் சேர்க்கவும்.
2. இவற்றுடன் தயிர், உப்பு,தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.
3. எண்ணெயில் தாளிசப் பொருட்களைத் தாளித்துக் கொண்டு வெங்காயத்தையும் நன்றாக வதக்கவும்.
4. வதக்கின பொருட்களை ஓட்ஸ் கலவையுடன் சேர்த்து அடுப்பை ஏற்றி மிதமான தீயில் ஓரிரு நிமிடங்கள் பச்சை வாடப் போக வதக்கவும்.
5. குழிப்பணியாரச்சட்டியில் எண்ணெய் விட்டு ஓட்ஸ் மாவை ஒவ்வொரு குழியிலும் விடவும்.
6. வெந்த பிறகு திருப்பிப் போடவும்

சுவையான ஓட்ஸ் பணியாரம் தயார். மிளகாய்ப்பொடி, சட்னி சிறந்த இணையுணவுகள்.

***************************************************************************

ஓட்ஸ் பணியாரம்-இன்னொரு முறை

edit02511-300x198

ஓட்ஸ்- 1 டம்ளர்

ஊற வைத்து அரைக்க:

துவரம்பருப்பு- 1/4 கப்
கடலைப்பருப்பு- 1/4 கப்
பாசிப்பருப்பு- 1 தேக்கரன்டி

அரைக்க:

மிளகாய்வற்றல்- 3
காயம்- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு

தாளிக்க:
எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1/2 இணுக்கு

செய்முறை:

1. மூன்று மணி நேரம் ஊற வைத்தப் பருப்புகளைத் தண்ணீர் நீக்கி மின்னரைப்பானில் உப்பு, மிளகாய்வற்றல், காயம் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
2. ஓரளவு அரைபட்டவுடன் ஓட்ஸையும் சேர்த்து அரைக்கவும்
3. இதனுடன் தாளிசப்பொருட்கலவையையும் வெங்காயத்தையும் சேர்க்கவும்.
4. பணியாரச்சட்டியைச் சூடாக்கி எண்ணெய் விட்டு மாவை விடவும்.
5. அதிகமான தீயாகவும் இல்லாமல் மிகக் குறைவான தீயும் இல்லாமலும் மிதமான தீயில் வேக விட வேண்டும்.
6. வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு எடுக்க வேண்டும்.
7. சுவையான மொறுமொறு ஓட்ஸ் பணியாரம் தயார்.

பணியாரம் போன்ற சிற்றுண்டிகளைச் சூடாகச் சாப்பிட்டால் தான் ருசி அதிகம்.

 

 

 

அரிசிமாவு கொழுக்கட்டை

Image

தேவையானவை:

பச்சரிசி மாவு- 1 டம்ளர்
உப்பு- தேவையான அளவு
தேங்காய்- 1/4 மூடி
காயம்- சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1
பச்சை மிளகாய்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு
பாசிப்பருப்பு- ஒரு கைப்பிடி

செய்முறை:

1. அரிசி மாவைச் சிவக்க வறுக்கவும்.
2. தண்ணீரைச்(ஒன்றுக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் கணக்கு, ஆனால் கண்ணளவில் பார்த்து பார்த்தே சேர்க்க வேண்டும், தண்ணீர் அதிகமாகச் சுட வைத்துக் கொண்டாலும் சிறிது சிறிதாகவே ஊற்றி வர வேண்டும்) சுட வைத்து உப்பு சேர்த்து வதக்கிய மாவில் சேர்க்கவும்.
3. தாளிசப் பொருட்களைச் சேர்த்து(பாதியை இப்போதும் கொழுக்கட்டைகள் வெந்து வந்த பிறகு மீதியைச் சேர்க்க வேண்டும்)மாவில் கிளறவும்.
4. மாவை உருண்டைகள் பிடித்து இட்லித்தட்டுகளில் பரப்பி வேக விடவும்.
5. ஒரு கைப்பிடி பாசிப்பருப்பைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
6. கொழுக்கட்டைகள் வெந்து வந்ததும் தாளிசப்பொருட்களின் பாதியையும் வறுத்தப் பாசிப்பருப்பையும் தேங்காய்த்துருவலையும் போட்டுக் கலந்து கறிவேப்பிலை தூவி அலங்கரிக்கவும்.
7. சுவையான அரிசிமாவு கொழுக்கட்டைக்குத் தக்காளிச்சட்னி, சாம்பார், மிளகாய்ப்பொடி, தொக்கு வகைகள் சிறந்த இணைகள்.

 

அம்மிணிக் கொழுக்கட்டை

எளியமுறை:

Ammini kolukkattai

தேவையானவை:

பச்சரிசி மாவு- 1 டம்ளர்
உப்பு- தேவையான அளவு
தேங்காய்த்துருவல்- 3 தேக்கரண்டி
காரப்பொடி – சிறிதளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

1. அரிசிமாவைச் சிவக்க வறுக்கவும்.
2. தனியொரு பாத்திரத்தில் தண்ணீரைச் சூடுபடுத்தவும். உப்பும் சேர்க்கவும்.
3. அரிசி மாவு கெட்டியாகும் வரைச் சிறிது சிறிதாகத் தண்ணீரை ஊற்றிக் கிளறவும்
4. மாவு கெட்டியானதும் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து இட்லி குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.
5. கொழுக்கட்டைகள் வேகுவதற்குள் வாணலியில் எண்ணெயிட்டுத் தாளிசப் பொருட்களைத் தாளித்துக் கொள்ளவும்.
6. வெந்த கொழுக்கட்டைகளைத் தாளிசப் பொருட்களுடன் சேர்க்கவும்.
7. காரப் பொடியைச் சிறிதளவு சேர்த்து பிரட்டவும்(பச்சைமிளகாயும் சேர்ப்பதால் காரப்பொடியைச் சிறிதளவே சேர்க்க வேண்டும்)
8. காரக்கொழுக்கட்டையில் வேக வைக்கும் முன்பு வதக்கும் போது காரப்பொடி சேர்ப்போம், அது ஒரு சுவை, இது வெந்து கொழுக்கட்டைகளை வதக்கி அப்போது சேர்ப்போம், இது ஒரு சுவை.

சற்றுப் பொறுமையுடன் செய்ய வேண்டிய முறை:

1. பச்சரிசி இரண்டு கப் எடுத்து கழுவி தண்ணீர் விட்டு ஒரு 15 நிமிடங்கள் ஊறவிடவும்.
2. நீரை வடிகட்டி அப்படியே பிசிறி வைக்கவும்.
3. அரை மணி நேரத்திற்குப் பிறகு எடுத்து ஒரு வெள்ளைத் துண்டில் பரப்பி ஆற விடவும். பத்து நிமிடங்கள் கழித்து மின்னரைப்பானில் நன்றாகப் பொடிக்கவும். மாவு மிகப் பொடியாக இருக்க வேண்டியது அவசியம்.
4.வாணலியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் 4 கப் நீர் விட்டு உப்பு போட்டு கொதிக்க விடவும்.
5. கொதி வந்ததும் பொடித்த மாவைத் தூவி கட்டி இல்லாமல் கிளறவும்.
6. மாவு நன்றாக சுருண்டு ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.
7. சிறிய உருண்டைகளாக்கி மேற்கூறிய முறையில் வேக வைத்துத் தாளித்துப் பரிமாறவும்.
8. நேரமும் பொறுமையும் இருப்பவர்கள் இம்முறையில் செய்யலாம், இல்லாதவர்கள் பச்சரிசி மாவிலேயே செய்து கொள்ளலாம், அதுவும் நன்றாக வரும்.