அவியல் பிறந்த கதை
தமிழ் நாட்டுத் திருமண வைபவங்களிலும் பண்டிகை நாட்களிலும் வடை, பாயசம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், பச்சடி என்று பலவித உணவு வகைகள் பரிமாறப்படுகின்றது, கேரளாவில் கூட்டிற்குப் பதில் அவியல் சிறப்பிடம் வகிக்கிறது. தமிழ்நாட்டிலும் அவியலைப் பண்டிகை நாட்களின் போது பயன்படுத்தினாலும் அவியல் கேரளாவிலிருந்து வந்த உணவு முறையாகும்.
ஒரு முறை திருவிதாங்கூர் மன்னனுக்குச் சமையல் செய்ய சமைப்பவர் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார். எல்லாக் காய்கறிகளிலும் கொஞ்சம் கொஞ்சம் மீதமிருக்கிறது, இதை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று சிந்தித்தார். மேற்பார்வையாளரிடம் கேட்க, எல்லாக் காய்கறிகளையும் நீளவாக்கில் நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் போட்டு தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து அரத்து தயிரையும் விட்டு வெந்ததில் சேர்த்து அவி என்றார், அதில் தேங்காய் எண்ணெயையும் கறிவேப்பிலையையும் போடு என்றார், திருவிதாங்கூர் மன்னன் மதிய உணவு உண்டு விட்டு அவியலை பார்த்து புதுவிதமாக இருக்கிறதே? என்ன இது என்று விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். ‘ஆஹா ஓஹோ’ என்று உணவையும் சமையல் செய்தவரையும் அதற்கு யோசனை தந்தவரையும் பாராட்டினதோடு மட்டுமில்லாமல் இன்று முதல் கேரளாவில் எல்லாப் பண்டிகையின் போதும் அவியலும் ஒரு உணவாகச் சிறப்பிடம் பெறட்டும் என்று ‘தான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெற்றுக் கொள்ளட்டும்’ என்று ஆணையிட்டார். இதுவே அவியல் பிறந்த கதை. செவி வழிக் கேட்ட கதை.
அவியல்
தேவையானவை:
உருளைக்கிழங்கு- 1
வாழைக்காய்- 1
கத்திரிக்காய்- 2
செளசெள(பெங்களூர் கத்திரிக்காய்)- 1
முருங்கைக்காய்- 2
கேரட்- 1
பீன்ஸ்- 7
உலர் மாங்காய்த்துண்டுகள்- 4
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு
தேங்காய் எண்ணெய்- 1 தேக்கரண்டி
அரைக்க:
தேங்காய்- 1/2 மூடி
சீரகம்- 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்(சிறியது)- 4
தயிர்- 3 தேக்கரண்டி
செய்முறை:
1. காய்கறிகளை அலம்பி, தோல் சீவ வேண்டியவற்றைச் சீவி நீள நீளமாக நறுக்கவும்.
2. வாழைக்காயை முதலில் வேக வைக்க வேண்டும். அது பாதி வெந்தவுடன் பிற காய்கறிகளைப் போட வேண்டும். பாதி வெந்த பிறகே உப்பைச் சேர்க்க வேண்டும்(உப்பு சேர்த்தால் வேக நேரமெடுக்கும் என்பதால்) உப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து அதிக நீர் விடாமல் 1 டம்ளர் நீர் விட்டு வேக விடவும். உலர் மாங்காய்த்துண்டுகளையும் காய்கள் வேகும் போதே போடலாம்.
3. மின்னரைப்பானில் தேங்காய், சீரகம், பச்சைமிளகாயை அரைத்துக் கொண்டு 3 தேக்கரண்டி தயிரையும் சேர்த்து அரைக்கவும்.
4. தண்ணீர் குறைவாக விட்டதால் நீர் வற்றியிருக்கும்(அப்படி நீர் இருக்கும் பட்சத்தில் அதை இறுத்துத் தனியே வைத்துக் கொண்டு, காய்கள் வெந்த நீரில் சத்து அதிகம் என்பதால் வீணாக்காமல் குழம்பு செய்யும் போது இறுத்த நீரை விட்டுக் கொள்ளலாம்)
5. அரைத்ததைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் சேர்த்து இறக்கி வைக்கவும், தாளிக்கத் தேவையில்லை
6. அவியல் தயாரான பின்பு தண்ணியாக இருந்தால் 1 தேக்கரண்டி பச்சரிசிமாவைத் தூவி விட்டால் கெட்டியாக ஆகும்
7. கடலைப்பருப்பைச் சிவக்க வறுத்துப் பொடி செய்து கொதிக்கும் அவியலில் சேர்க்கக் கல்யாண அவியல் போல ருசி தரும்.
8.மோர் தவிர்த்த குழம்பு வகைகளான சாம்பார், வத்தக்குழம்பு, தீயல், புளிக்குழம்பு போன்ற குழம்பு வகைகளுக்கும் ரசம் வகையறாக்களுக்கும் அடைக்கும் அருமையான இணை உணவு.
பின் குறிப்புகள்:
1. என்னென்ன காய்கள் இருக்கிறதோ அதை வைத்தே அவியல் செய்யலாம்.
2. ஒரு சிலர் அரைக்கும் போது அவியல் ஒன்று சேர்ந்து வருவதற்காக 1 தேக்கரண்டி அரிசியையும் சேர்த்து அரைத்துக் கொட்டுவர்,
3.குக்கரில் வேக விடுபவர்கள் 2 விசிலிலேயே இறக்கி விடலாம், குக்கரில் நன்றாகக் குழைந்து விடுமென்பதால் நேரம் பிடித்தாலும் பாத்திரத்தில் நீரூற்றி வேக விடுவது சாலச் சிறந்தது.
4. குக்கரில் வேக வைக்க விரும்பினால் முருங்கைக்காயைத் தவிர அனைத்துக் காய்கறிகளையும் பெரிதாகவும் நீளமாகவும் நறுக்க வேண்டும், முருங்கைக்காயை உப்பு, மஞ்சள் பொடி போட்டுத் தனியொரு பாத்திரத்தில் வேக வைத்து வெந்ததுடன் சேர்க்க முருங்கைக்காய் உடைந்து போகாது.