அரிசி உப்புமா

Upma

தேவையானவை:

பச்சரிசி- ஒன்றரை கப்
உப்பு- தேவையான அளவு
தேங்காய்த்துருவல்- கால் மூடி
திரித்தத் துவரம்பருப்பு- ஒரு கைப்பிடி

தாளிக்க:

எண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 3 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2
பச்சைமிளகாய்- 1
முந்திரிப்பருப்பு- 10
இஞ்சி- 1 துண்டு
கறிவேப்பிலை- 2 இணுக்கு

செய்முறை:

1. அரிசியை 3 மணி நேரம் சுடுதண்ணீரில் ஊற விட வேண்டும்.
2. அரிசியை ஈரம் போக உலர்த்தி மின்னரைப்பானில் உப்பு சேர்த்து நற நற பதத்திற்கு(மையாக அரைக்காமல்) அரைத்து எடுக்கவும்.
3. துவரம்பருப்பைத் திரித்துக் கொள்ளவும்.
4. ஒன்னரை கப் அரிசிக்கு 4 கப் தண்ணீரைத் தனியே சுட வைக்கவும்.
5. ஒரு வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு அரைத்த அரிசிக்கலவையைச் சேர்த்து கை பொறுக்கும் சூட்டில் வதக்கவும்.
6. கொதிக்கும் சுடு நீரை அரிசிக்கலவையுடன் கொட்ட வேண்டும், பிறகு திரித்தத் துவரம்பருப்பு(இதுவும் நற நற பதம்), காயம், தேங்காய்த் தூள் சேர்த்துக் கிளற வேண்டும்.
7. 8 நிமிடங்களில் அரிசி உப்புமா வெந்து விடும்.
8. பிறகு கறிவேப்பிலை தூவி எண்ணெய் விட்டு இறக்கவும்.
9. அரிசி உப்புமாவிற்குக் காரச்சட்னி அருமையான இணையுணவு.
10. இதே உப்புமாவைக் கொழுக்கட்டையாகப் பிடித்து அரிசி உப்புமா கொழுக்கட்டையாக்கலாம்.

கோதுமை ரவா உப்புமா

wheat_rava_upma (1)

தேவையானவை:

கோதுமை ரவை- 1 கப்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் பொடி- சிறிதளவு
வெங்காயம்- 1
தக்காளி- 1
இஞ்சி- 1 துண்டு

தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1
பச்சை மிளகாய்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க

செய்முறை:

1. கோதுமை ரவையைச் சிவக்க வறுத்துத் தனியே தாம்பாளத்தில் ஆற விடவும்.
2. தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு அதிலேயே நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தைப் போட்டுச் சிவக்க வதக்கவும், அடுத்துத் தக்காளி போட்டு வதக்கவும்.
3. பிறகு 2 டம்ளர் தண்ணீர் விடு சுட வைக்கவும்.
4. தண்ணீர் கொதித்துக் காய்கறி வெந்து வரும் போது வறுத்து ஆற விட்ட கோதுமை ரவையை அடிப் பிடிக்காமல் கிளறி வரவும்.
5. தீயைக் குறைத்து வைத்து, 5 நிமிடங்கள் வேக விட சுவையான, சத்துள்ள கோதுமை ரவை தயார். கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவவும். சட்னியோடு பரிமாற ருசி அள்ளும்.

இட்லி உப்புமா

தேவையானவை:

DSC05623

இட்லிகள்- 10
இட்லி மிளகாய்ப்பொடி- 1 தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகைவற்றல்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு
பெரிய வெங்காயம்- 1

செய்முறை:

1. காலையில் செய்து மீந்த இட்லிகளையோ புதிதாகத் தயாரித்த இட்லிகளையோப் பயன்படுத்தலாம்.
2. தாளிசப்பொருட்களை ஒரு வாணலியில் தாளித்துக் கொண்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும்.
3. இட்லிகளை உதிர்த்துக் கொள்ளவும்
4. தாளிசப்பொருட்களோடு இட்லியைக் கலந்து இட்லி மிளகாய்ப்பொடியையும் சேர்த்துக் கிளறிச் சூடாகப் பரிமாறவும்.
5. மீந்த இட்லிகள் கனமாக ஆகி விடும், வீணடிப்பதற்குப் பதிலாக இவ்வகையில் சுடச்சுட உப்புமா செய்தால் உனக்கு, எனக்கு எனப் போட்டிப் போட்டு கிடுகிடுவென வியாபாரம் ஆகி விடும்.

சேமியா உப்புமா

தேவையானவை:

semiya upuma
சேமியா – 1 கப்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு
காய்கள்:
பெரிய வெங்காயம்- 1
தக்காளி- 1/2
குடமிளகாய்- 1/2
உருளைக்கிழங்கு-1
காரட்- 1
வேக வைத்தப் பட்டாணி- 1 கப்

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2
பச்சைமிளகாய்- 1
துருவிய இஞ்சி- 1 துண்டு
கறிவேப்பிலை- 1 இணுக்கு

செய்முறை:

1. சேமியாவைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
2. வேறொரு வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு காய்கறிகளையும்(வெங்காயம், பிற காய்கள், தக்காளி) வரிசையில் வதக்கவும்.
3. ஒரு கப் சேமியாவிற்கு 1 1/2 கப் தண்ணீர் விகிதம் காய்கறிகளுடன் சேர்த்து வேக விடவும்.
4. தண்ணீர் கொதித்துக் காய்களும் வெந்ததும் வறுத்த சேமியாவைச் சிறிது சிறிதாகக் கொட்டி அடிப்பிடிக்காமல் கிளறவும்.
5. ஒரு சில நிமிடங்களிலேயே வெந்த உப்புமாவை எண்ணெய் விட்டுக் கிளறிக் கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.
6. உப்புமாவில் மிளகாய்வற்றல் அல்லது பச்சைமிளகாய் மட்டும் சேர்த்துச் செய்யத் தனிச்சுவை கிட்டும்.
7. மிளகாய்வற்றல் அல்லது பச்சைமிளகாயைத் தவிர்த்து 1 தேக்கரண்டி சாம்பார் பொடி காய் வேகும் போது சேர்க்க அதுவும் தனிச்சுவை தரும்.
8.காய்கள் சேர்க்காமல் மஞ்சள் தூள் சேர்க்காமல் வெளீரென்று செய்யும் உப்புமாவிற்கும் ருசி அதிகம்.
9. காய்கறிகள் சேர்த்து உப்புமா செய்வதே எப்போதும் ஆரோக்கியத்திற்கு நல்லது. உப்புமாவைச் சுடச் சுடச் சாப்பிட இன்னும் ருசி அதிகம். உப்புமாவை மாலை வேளைகளில் செய்து வைத்துக் கொண்டால் பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அசத்தலாம்.
10.ரவா உப்புமாவிற்குச் சொன்னது போல சேமியாவையும் வறுத்து வைத்துக் கொண்டால் உப்புமா, சேமியா கேசரி, சேமியா பாயசத்தை விரைவில் செய்து விடலாம். ரவை, சேமியாவை வறுத்து வைப்பதால் பூச்சிகளும் அண்டாது.

ரவா உப்புமா

தேவையானவை:

DSC08726

ரவை- 2 கப்
உப்பு- தேவையான அளவு
மஞ்சள் தூள்- சிறிதளவு
காய்கள்:
பெரிய வெங்காயம்- 1
தக்காளி- 1
குடமிளகாய்- 1/2
உருளைக்கிழங்கு-1
காரட்- 1
வேக வைத்தப் பட்டாணி- 1 கப்

தாளிக்க:

நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2
பச்சைமிளகாய்- 1
துருவிய இஞ்சி- 1 துண்டு
முந்திரிப்பருப்பு- 1 கைப்பிடி(விரும்புவர்கள் போடலாம்)
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க

செய்முறை:

DSC08722

 

1. ரவையைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்
2. வாணலியைச் சூடாக்கி எண்ணெய் விட்டு தாளிசப்பொருட்களைத் தாளிக்கவும்.
3. தாளிப்பானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும், பிறகு குடமிளகாய், காரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, தக்காளி(இறுதியாகச் சேர்க்கவும்) சேர்க்கவும்.
4. ஒரு கப் ரவைக்கு ஒன்ரறை கப் தண்ணீர் காய்ச்சித் தனியே வைத்துக் கொள்ளவும்(குழைவாக விரும்புபவர்கள் ஒரு கப் ரவைக்கு 2 கப் தண்ணீர் சுட வைத்துக் கொள்ளலாம்)
5. காய்ச்சினத் தண்ணீரைக் காய்கறிக் கலவையுடன் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும்.
6. காயும் வெந்து தண்ணீரும் கொதிக்கும் போது தனியே வறுத்த ரவையை ஒரு புறம் விட்டுக் கொண்டே மறுபுறம் கெட்டிப் பிடிக்காமல் கிளறிக் கொண்டே வரவும், தீயைக் குறைத்து வைக்கவும், இல்லையேல் வென்னீர் கையில் பட்டு விடும்.
7. உப்புமா வெந்தவுடன் எண்ணெய் சேர்த்து அலங்கரிக்கக் கொத்தமல்லி தூவித் தேங்காய்ச்சட்னி, பீர்க்கங்காய்த் துவையல் போன்ற ஏதேனும் இணையுணவுடன் பரிமாறவும்.

கூடுதல் குறிப்புகள்:

1. உப்புமா ஆபத்பாந்தவன், அனாதரக்ஷகன் போல அவசரத் தேவைகளுக்கு, திடீர் விருந்தினரைச் சமாளிக்க உதவும்.
2. உப்புமாவிற்கு உப்பு மா என்று கேட்டு விடாமல் இருக்க முன் ஜாக்கிரதை முத்தழகி(முத்தண்ணாவிற்கு எதிர்ப்பதம்)யாய்க் கவனமாக உப்பு சரியான அளவில் போட்டு விட வேண்டும். முதலில் உப்பு போட்டுக் கொதிக்க விட வேண்டும், ரவையைக் கொட்டின பிறகு உப்பு ஒன்று சேராது.
3. காரம் அவரவர் குடும்பத்தினரின் வசதிக்கேற்பக் கூட்டியும் குறைத்தும் செய்யலாம்.
4. ஓய்வு நேரங்களில் ரவையை வறுத்துத் தனியே காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் உப்புமாவோ ரவா கேசரியோ செய்வது எளிது.
5. வெங்காயம், தக்காளி போட்டும் செய்யலாம்.
6. காய்கறிகளுடன் உப்புமா செய்வதால் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
7. உப்புமா செய்து முடித்ததும் தனியே ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி இந்த உப்புமாவைக் கொட்டிச் சமப்படுத்தவும், பிறகு வேறொரு தாம்பாளம் அல்லது பாத்திரத்தில் கொட்ட அழகான வடிவத்துடன் வரும். சமையல் செய்வதை விட அழகாகப் பார்வையாளர்களை(இங்க நம்ம வீட்டு ஆட்கள் தான் பார்வையாளர்கள், ரசிகர்கள் எல்லாமே) கவரலாம். 8. உப்புமாவா என்று அலறுபவர்களைக் கூட அசத்தலாம்.