ரவா கேசரி

Image
தேவையான பொருட்கள்:

ரவை – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
சர்க்கரை – 1 3/4 கப்
நெய் – 3/4 கப்
கேசரி கலர்- சிறிதளவு
ஏலப்பொடி- சிறிதளவு
முந்திரிப் பருப்பு- ஒரு கைப்பிடி
கிஸ்மிஸ்-1 தேக்கரண்டி

செய்முறை:

1. அடுப்பில் வாணலியில் 2 தேக்கரண்டி நெய் விட்டு கிஸ்மிஸ், முந்திரியை நன்கு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

2. மீண்டும் 2 தேக்கரண்டிநெய் விட்டு ரவை வாசனை போகும் வரை சிவக்க வறுக்கவும்.

3. இரண்டரை கப் தண்னீரைச் சேர்த்து அடுப்பை நிதானமாக வைத்து நன்கு வேகவைக்கவும்.

4. ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, கேசரி கலரைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரையால் கலவை மீண்டும் தளரும்.

5. ஒட்டாமல் சேர்ந்து வரும்வரை இடையில் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கொண்டே கிளறவும்.

6. கேசரியை இறக்கும் முன் மிச்சமுள்ள நெய், ஏலப்பொடி தூவி இறக்கவும்.

7.வறுத்து வைத்திருக்கும் கிஸ்மிஸ், முந்திரியைக் கலந்து கொள்ளவும்.

8. கேசரியை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, மேலே மீதி கிஸ்மிஸ்
முந்திரி தூவி, வில்லைகள் போடலாம்

பின்குறிப்புகள்:

1. ரவையைச் சிவக்க வறுத்து காற்றுப்புகாத பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொண்டால் உப்புமா, கேசரி போன்றவற்றை விரைவில் செய்து முடிக்க வசதியாக இருக்கும், வறுத்து வைப்பதால் பூச்சிகளும் ரவையை அண்டாது.

2. சர்க்கரை அளவைக் குறைக்க விரும்புவர்கள் ஒரு கப் ரவைக்கு ஒன்றரை கப் சர்க்கரை சேர்க்கலாம், சர்க்கரை குறைவாக இருப்பதால் அதிகம் உண்ணலாம்

3. ரவையைச் சிவக்க வறுப்பதிலும் கொதி நீரை ஊற்றும் போது கெட்டிப் பிடிக்காமல் கிளறுவதிலும் தான் சூட்சமம் உள்ளது.

4. கேசரி நிறமூட்டி மஞ்சள், சிவப்பு நிறங்களில் இருக்கும், சிறிதளவே பயன்படுத்த வேண்டும், அதிகம் போட்டால் கசந்து விடும், அதே போல் ரவையையும் பொன்னிறமாக வறுக்க வேண்டும், கருக விட்டால் கேசரி கசக்கும்.

5. திடீர் விருந்தினரை அசத்தும் பண்டிகை காலங்களில் செய்யக் கூடிய செய்வதற்கு எளிமையான, அருமையான இனிப்பு வகை. பெண் பார்க்கும் வைபவங்கள், திருமணங்களிலும் கேசரி சிறப்பிடம் வகிக்கிறது.

லட்டு – பூந்திலட்டு

Image

தேவையானவை:

கடலைமாவு- 2 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 3 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – சிறிதளவு
உடைத்த முந்திரி – சிறிதளவு
உலர்திராட்சை – சிறிதளவு
எண்ணை – பூந்தி செய்ய
ஜல்லி கரண்டி/பூந்தி கரண்டி

செய்முறை:

1.கடலைமாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்குக் கரைக்கவும்.
2. வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
3.எண்ணெய் நன்கு காய்ந்ததும் பூந்தி கரண்டியை எண்ணெய் மேலாகப் பிடித்து சிறிதளவு கடலைமாவு கலவையை அதில் ஊற்றி பூந்திகளைப் பொரித்தெடுக்கவும்.
4.மற்றொரு பாத்திரத்தில் 2 கப் சர்க்கரை, 3/4 கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். ( ஆள்காட்டி விரலில் எடுத்துப் பார்த்தால் கம்பி போல் வரவேண்டும்)
5.நெய்யில் முந்திரி, உலர்திராட்சை யைப்பொரித்து நெய்யுடன் ஏலக்காய் சேர்த்து பாகில் கலக்கவும்.
6.பூந்தியைப் பாகுடன்(சூடாக இருக்கும் போதே) ஒன்று சேர்க்கவும்.
7.கையில் நெய்யைத் தடவிக் கொண்டு கை பொறுக்கும் சூட்டிலேயே லட்டுகளாக உருண்டைகள் பிடித்துப் பரிமாறவும்.

பின்குறிப்புகள்:

1. புதிதாக இனிப்பு வகைகள் முயற்சிப்பவர்கள் சிறிதளவு செய்து பார்த்து பதம், பக்குவம் புரிந்து கொண்டு அடுத்த முறை அதிக அளவில் செய்து பார்க்கலாம்.
2. பூந்திக் கரண்டி கண்ணளவு சிறிதாக இருத்தல் நல்லது.
3. சில நேரங்களில் இவ்வகை இனிப்புகள் செய்யும் போது தோல்வியைச் சந்தித்தால் துவளக் கூடாது, மனம் தளராமல் மீண்டும் முயற்சிக்கவும்.
4. லட்டுகள் நன்றாக அமைந்து விட்டால் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ என்று குடும்பத்தினரைக் கூவி அழைத்து லட்டுகளை விளம்பரப்படுத்தலாம், லட்டு பிடிக்க வரவில்லையா? பூந்தி செய்தேன் என்று மழுப்பி விடலாம்.

 ——————————————————————–

பிஸ்தா பர்ஃபி

Image

தேவையானவை:

பிஸ்தா பருப்பு(உப்பில்லாதது)- 1 டம்ளர்
சர்க்கரை- 2 1/2 டம்ளர்
நெய்- 1/4 டம்ளர்
நீர்- 3/4 டம்ளர்
ஏலக்காய்த்தூள்- 1/2 தேக்கரண்டி

செய்முறை:

1. ஒரு வாணலியில் நெய்யை விட்டுப் பிஸ்தா பருப்புகளை ஓரிரு நிமிடங்களுக்கு வதக்கவும்.
2. ஆற வைத்துப் பிஸ்தாவை மின்னரைப்பானில் தண்ணீர் விட்டு அரைக்கவும்.
3. சர்க்கரையைக் கொடுக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவைப் பயன்படுத்திப் பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
4. பாகில் அரைத்தப் பிஸ்தாக் கலவையைக் கொட்டிக் கிளறவும்.
5. ஒட்டாமல் கெட்டியான பதம் வந்ததும் ஏலக்காய்த்தூளைக் கலந்து நெய்யை விட்டுக் கிளறி வேறு நெய் தடவிய தாம்பாளத்திற்கு மாற்றி ஆற விட்டு வில்லைகள் போடவும்.
6. சுவையான பிஸ்தா பர்பி தயார்.

பின்குறிப்பு:

சர்க்கரைப்பாகு வைக்க விரும்பாதவர்கள் பிஸ்தாப்பருப்பு, சர்க்கரை ஒன்றாகக் கலந்து குறைந்த தீயில் அடுப்பை ஏற்றிக் கூடுதல் நேரமெடுத்தாலும் கெட்டியாகும் வரைப் பொறுமையாகச் செய்து வில்லைகள் செய்து கொள்ளலாம்.
—————————————————————————————-

 

முந்திரிப்பருப்பு பர்பி

முந்திரிப்பருப்பு பர்பி அல்லது கேக் என்றழைக்கப்படும் இதுவும் பாதாம்பருப்பிற்குச் சொன்ன செய்முறையே தான்.

Image

தேவையானவை:

முந்திரிப்பருப்பு- 1 டம்ளர்
சர்க்கரை- 2 டம்ளர்
நெய்- 3/4 டம்ளர்

செய்முறை:

Image

1. முந்திரிப்பருப்புகளைச் சுடு தண்ணீரில் அரை மணி நேரத்திற்கு ஊற விடவும்.
2. மின்னரைப்பானில் முந்திரிப்பருப்புகளை விழுதாக அரைக்கவும்.
3. மிதமானல் தீயில் வாயகன்ற கனமான வாணலியில் நெய்யை விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.
4. இதனுடன் சர்க்கரையைச் சேர்க்கவும்.
5. மிதமான தீயில் கலவையைக் கிளறிக் கொண்டே வரவும்
6. கெட்டியான பதத்தின் போது நெய்யை விட்டுக் கிளறி நெய் தடவின தாம்பாளத்தில் மாற்றிக் கொட்டவும்,சமப்படுத்தி வில்லைகள் போடவும்.

Image
7. சுவையான முந்திரிப்பருப்பு கேக் தயார்.
8. தோல் நீக்கி ஊற வைத்தப் பாதாம்பருப்பு அரை கப், ஊற வைத்த முந்திரிப்பருப்பு அரை கப் சேர்த்துப் பாதாம்-முந்திரி பர்பி செய்யலாம். 

 

 

பாதாம் பர்பி

Image

தேவையானவை:

பாதாம்பருப்பு- 1 டம்ளர்
சர்க்கரை- 2 டம்ளர்
நெய்- 3/4 டம்ளர்

செய்முறை:

1. பாதாம்பருப்புகளைச் சுடு நீரில் ஊற வைத்துத் தோல் நீக்கிக் கொள்ளவும்.
2. மின்னரைப்பானில் பாதம்பருப்புகளை விழுதாக அரைக்கவும்.
3. மிதமானல் தீயில் வாயகன்ற கனமான வாணலியில் நெய்யை விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.
4. இதனுடன் சர்க்கரையைச் சேர்க்கவும்.
5. மிதமான தீயில் கலவையைக் கிளறிக் கொண்டே வரவும்
6. கெட்டியான பதத்தின் போது நெய்யை விட்டுக் கிளறி நெய் தடவின தாம்பாளத்தில் மாற்றிக் கொட்டவும்,சமப்படுத்தி வில்லைகள் போடவும்.
7. பாதாம் பர்பி அல்லது கேக் என்றழைக்கப்படும் ருசியான இனிப்பை மிகவும் எளிதாகச் செய்து விட முடியும்.
—————————————————————————-

 

ரவா லாடு

இதுவும் ஏற்கனவே நாம் சுவைத்த ‘மாலாடு’ போலத்தான். பொரிகடலைக்குப் பதில் ரவை சேர்க்க வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் தகவல்களையும் கவனத்தில் கொள்ளவும்.

Image

தேவையான பொருட்கள்:

ரவை – 1 டம்ளர்
சர்க்கரை – 2 1/4 டம்ளர்
நெய் – அரை டம்ளர்
முந்திரிப்பருப்பு – 10
ஏலக்காய் – 4 (பொடித்தது)

செய்முறை

1. ரவையைச் சிவக்க வறுக்கவும்.
2. வறுத்த ரவையை ஆற விட்டு, பின் மின்னரைப்பானில் மையாகத் திரித்துக் கொள்ளவும்.
3. ரவையுடன் சர்க்கரையையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.
4. நெய்யில் முந்திரிப்பருப்பைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
5. திரித்த ரவையுடன் பொடித்த ஏலக்காய், நெய்யில் வதக்கிய முந்திரிப் பருப்பைச் சேர்க்கவும்.
6. இந்த மாவை சிறிது சிறிதாக நெய் விட்டுப் பிசைந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
7. உருண்டைப் பிடிக்க வரவில்லையென்றால் சிறிது சூடான பாலைத் தெளித்தும் உருண்டைகள் செய்யலாம்.

கூடுதல் தகவல்கள்:

1. பாலைச் சிறிது சிறிதாகத் தெளித்தே மாவை உருண்டை பிடிக்க வேண்டும். அதிகம் பால் விட்டால் கொழகொழத்து உருண்டை பிடிக்க வராது.
2. ரவையை நன்கு சிவக்க வறுக்க வேண்டும். இல்லையென்றால் பச்சை வாடை அடித்து சுவையைக் கெடுத்து விடும்.
3. ரவையைச் சிவக்க வறுத்து வைத்துக் கொண்டால், தேவைப்பட்ட போது உடனடியாக ரவாலாடைத் தயார் செய்து கொள்ள முடியும்.

மாலாடு

Image

தேவையானவை:

பொட்டுக்கடலை- 1 டம்ளர்
சர்க்கரை(சீனி)- 2 டம்ளர்
நெய்- 3/4 டம்ளர்
ஏலக்காய்த் தூள்- 1/2 தேக்கரண்டி
உடைத்து வறுத்த முந்திரிப்பருப்பு- 2 தேக்கரண்டி

செய்முறை:

1. பொட்டுக்கடலையையும் சீனியையும் மையாகத் திரித்துக் கொள்ளவும்.
2. நெய்யில் வறுத்த உடைத்த முந்திரிப்பருப்பையும் ஏலக்காய்த்தூளையும் மாவில் சேர்க்கவும்.
3. நெய்யைச் சூடாக்கி மாவுடன் கலந்து உருண்டைகள் பிடிக்க சுவையான சத்தான மாலாடு தயார்.
4.பொடியைத் திரித்துத் தயாராக வைத்திருந்தால் விரைவில் மாலாடுகளைச் செய்ய முடியும்.

மைசூர் பாகு

Image

தேவையானவை:

கடலைமாவு- 1 கப்
சர்க்கரை(சீனி)- 2 1/2 கப்
நெய்- 2 கப்
பால் – 1/2 கப்

செய்முறை:

1. கனமான உருளியில் கடலைமாவைப் பச்சை வாசனை போகுமளவிற்குக் குறைந்த தீயில் வதக்கவும்(அதிகம் வதக்க வேண்டாம்).

2. மாவுடன், மிதமாகச் சூடாக்கிய பால், சர்க்கரையைக் கலந்து வதக்கவும்.

3. குறைந்த தீயில் இருக்குமாறு பார்க்கவும்.

4. இருபது நிமிடங்களில் ஓரங்கள் பூத்து வரும், அப்போது நெய்யை லேசாகச் சூடாக்கிக் கொட்டிக் கிளறி வரவும்.

5. கெட்டியாகும் பதத்தில் பூத்து வரும் வேளையில் நெய் தடவிய தட்டில் கொட்டி பரத்தி கரண்டியால் சமமாக்கவும்.

6. சிறிது ஆறின பிறகு வில்லைகளாக்கவும். அதனை உடனே எடுக்க முயற்சிக்க வேண்டாம், ஆறிய பிறகு பிரித்த வில்லைகளை எடுக்க அழகாக வரும்.

7. சீனிப்பாகு மூலம் செய்வது விரைவில் முடியும் என்றாலும் மேற்கூறிய முறை பாகுப் பதத்தில் செய்யத் தெரியாதவர்களுக்கு உதவும். இம்முறையில் மிருதுவான, கரையக் கூடிய அளவில் சுவையான மைசூர்பாகுகளைத் தயார் செய்யலாம்.

பாகு வைத்துச் செய்யும் முறை:

1. கடலைமாவை நெய்யில் தனியாக வறுத்து வைக்கவும்.

2. ஒரு வாணலியில் சர்க்கரையைப் போட்டு ஒரு கப் நீர் சேர்க்கவும். நன்கு கொதித்து ஒரு கம்பிப் பதம் வர வேண்டும். (இரண்டு விரல்களுக்கிடையில் பாகைத் தொட்டுப் பார்த்தால் கம்பி போல் நீளமாக வர வேண்டும்)

3.பாகு கம்பி பதம் வந்ததும், நெய்யில் கலந்து வைத்துள்ள கடலை மாவைக் கொட்டிக் கிளறவும்.

4. மற்றொரு அடுப்பில் நெய்யைக் குறைந்த தீயில் வைக்கவும். நெய் சூடு குறையாமல் இருக்க வேண்டும். கடலைமாவும், பாகும் சேர்ந்து சுருண்டு வரும் சமயம் நெய்யை சிறிது சிறிதாகக் கரண்டியால் விட்டுக் கொண்டே கை விடாமல் கிளற வேண்டும்.

5. கலவை கெட்டியாகிப் பூத்து வரும் போது நெய் தடவின தாம்பாளத்திற்கு மாற்றி ஆறினதும் சதுரமாக வில்லைகள் போட்டு காற்றுப் புகாப் பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.

பால் சர்க்கரைப்பொங்கல்

Image

தேவையான பொருட்கள்:

பச்சரிசி -1கப்
பால் -4 கப்
தண்ணீர் -4கப்
வெல்லம் -2 கப்
நெய் -2 தேக்கரண்டி
முந்திரி -10
திராட்சை -10

செய்முறை:

1. அகலமான அடிகனமான பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு கொதிவந்தவுடன், பச்சரிசியைக் களைந்து அலம்பி அதில் போடவும்.
2. அரிசியுடன் தண்ணீர் அதிகமாகவும் பாலைக் குறைவாகவும் சேர்க்கவும்.
3. அரிசி வேக ஆரம்பித்தவுடன் பாலைச் சிறிது சிறிதாக சேர்க்கவும்.
4. அரிசி வெந்து நன்கு குழைய ஆரம்பித்தவுடன், வெல்லத்தைச் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கரைந்ததும் வடிகட்டி, அரிசியில் ஊற்றவும்.
5. தீயைக் குறைத்து வைக்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து வெந்தவுடன், நெய்யில் முந்திரி திராட்சையை வறுத்துப் போடவும்.

வேறொரு முறை:

1. அரிசியுடன் ஒரு கைப்பிடி பாசிப்பருப்பு சேர்த்துத் தண்ணீர் மிகுதியாகவும் பால் குறைவாகவும் வைத்து மிதமான தீயில் 4, 5 விசில்களுக்கு வேக விடவும்.

2. வெந்த அரிசி, பருப்புக் கலவை ஆறினதும் மின் அரைப்பானில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

3. பிறகு மேலே குறிப்பிட்ட வெல்லக்கரைசலைச் சேர்த்து நெய்யில் வதக்கிய முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய்ப் பொடி போட்டுக் கலக்கவும்.

4. வெண்ணெயாய் இருக்கும் பால் பொங்கல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பத்தக்க வகையில் இருக்கும்.

சர்க்கரைப் பொங்கல்

Image

தேவையான பொருட்கள்:

பச்சரிசி -1 கப்
பாசிப்பருப்பு -1/2 கப்
தண்ணீர் -4 கப்
வெல்லம் -21/2 கப்
ஏலக்காய்பொடி -1/2 தேக்கரண்டி
நெய் -3 தேக்கரண்டி
முந்திரி -10
திராட்சை -10

செய்முறை:

1.பச்சரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் அலம்பி 10 முதல் 15 நிமிடம் ஊற வைக்கவும்.
2. ஒரு குக்கரில் ஊற வைத்த அரிசி, பருப்பு, தண்ணீர் சேர்த்து குழைய வேக வைக்கவும்.
3. வெல்லத்தைச் சிறிது தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
4. குக்கரைத் திறந்து அரிசி, பருப்பை நன்கு மசித்துக் கொண்டு, வடிகட்டி வைத்துள்ள வெல்லத் தண்ணீரை சேர்த்து சிறிய தீயில் வேக வைக்கவும்.
5. ஒன்று சேர்ந்து வெந்தவுடன் ஏலக்காய் பொடி போட்டுக் கிளறி, நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து பொங்கலில் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
6. விருப்பமுள்ளவர்கள் தேங்காய்த் துருவலோ கீறிப் போட்டோ சேர்க்கலாம்.