தேவையானவை:
முருங்கைக்கீரை- 4 டம்ளர்
பயத்தம்பருப்பு- 1 கப்
பெருங்காயம்- சிறிதளவு
தேங்காய்த்துருவல்- 4 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய்- 1 மேசைக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 1
செய்முறை:
1. முருங்கைக்கீரையை ஆய்ந்து மண் போக அலசி ஒரு நீர் உறிஞ்சும் காகிதத்தால் துடைத்து வைக்கவும்.
2. குக்கரில் பாசிப்பருப்பை விசில் வரும் முன்பே உதிரியாய் சுண்டலுக்கு வேக வைப்பது போல வேக வைத்து எடுத்து வைக்கவும்(பாசிப்பருப்பு விரைவில் குழைந்து வெந்தும் விடும், அளவாகத் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்களுக்குள் எடுத்து விட வேண்டும்)
3. மைக்ரோ வேவ் உள்ளவர்கள் பாசிப்பருப்பை ஒரு பாத்திரத்தில் குறைவான நீர் விட்டு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கலாம்.
4. தாளிசப்பொருட்களைத் தாளிசம் செய்து கொண்டு முருங்கைக்கீரையைப் போட்டு உப்பு சேர்த்து(தண்ணீர் விடத் தேவையில்லை) நன்றாக வதக்கவும்.கீரை வகைகள் செய்யும் போது கணிசமாகத் தோன்றும் கீரை வெந்ததும் குறைவாக இருக்கும், எனவே உப்பு மிகவும் குறைவாகப் போட வேண்டும்.
5. தனியே ஒரு வாணலியில் பாசிப்பருப்பை வதக்கி உதிராக்கவும். உப்பு சேர்க்கவும்.
6. முருங்கைக்கீரை வெந்த பிறகு பாசிப்பருப்பு சுண்டலை அதனுடன் சேர்த்து வதக்கி தேங்காய்த்துருவலைப் போட்டு இறக்கவும்.
7. சாம்பார், வத்தக்குழம்பும், மோர்க்குழம்பு, ரசம், தயிர் சாதம் போன்றவற்றிற்கு அசத்தலான பொரியலாக முருங்கைக்கீரை பொரியல் அமையும். முருங்கைக்கீரையைப் பொரியலாக மட்டுமில்லாமல் சாம்பார், கூட்டு, தால், வடை, அடை போன்ற பலவகைகளில் சமைத்துப் பயன்படுத்திப் பலன் பெறலாம், பலம் பெறலாம்.