தேவையானவை:
வெள்ளை அவல் அல்லது சிவப்பு அவல்- 2 டம்ளர்
தேங்காய்த்துருவல்- 3 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
தண்ணீர்- சிறிதளவு
தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 2
காயம்- சிறிதளவு
கறிவேப்பிலை- 1/2 இணுக்கு
செய்முறை:
1. அவலைத் தண்ணீர் விட்டு 15 நிமிடங்கள் ஊற விடவும்.
2. ஊறிய அவலைக் கைகளால் நன்றாக மசித்துக் கொள்ளவும். உப்பு சேர்த்துப் பிசையவும்
3. அடுப்பை ஏற்றி வாணலியில் தாளிசப் பொருட்களைத் தாளித்துக் கொண்டு மசித்த அவலைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டவும்
4. தேங்காய்த்துருவலைப் போட்டு இறக்கி ஆற விட்டு உருண்டைகள் பிடித்து இட்லி குக்கரில் வேக விடவும்(மற்ற கொழுக்கட்டைகள், இட்லி போல அதிக நேரங்கள் வேக விடத் தேவையில்லை, ஐந்தே நிமிடங்கள் போதுமானது)
5. கொழுக்கட்டைகள் வெந்ததும் தக்காளிச்சட்னி அல்லது புதினாச்சட்னியுடன் பரிமாறவும். மிளகாய்ப்பொடி கூட அருமையான இணை.
6. வெங்காயம், கேரட் துருவிப் போட்டும் செய்யலாம்.
7. வெறும் தண்ணீரில் ஊற வைக்காமல் புளித்தண்ணீரில் ஊற வைத்தால் புளி அவல் கொழுக்கட்டை, புளி நீரில்லாமல் மோரில் ஊற வைத்துச் செய்தால் மோர் அவல் கொழுக்கட்டை.
கூடுதல் குறிப்புகள்:
1. செய்வதற்கு எளிமையான மற்ற கொழுக்கட்டைகள் போல அதிக மெனக்கெடல் இல்லாத வித்தியாசமான சிற்றுண்டி.
2. திடீர் விருந்தினரைச் சமாளிக்கவும் குழந்தைகளின் ரசனைக்குத் தீனி போடவும் ஏற்றது.
3. உருண்டைகளாகப் பிடிக்காமல் பிடி கொழுக்கட்டையாகவும் பிடித்து வைக்கலாம்.
4. வெள்ளை அவலில் ஒரு நாளும் சிவப்பு அவலில் ஒரு நாளும் செய்து பார்க்கலாம்.
5. நவராத்திரியின் போதோ பண்டிகை நாட்களிலோ நைவேத்தியத்திற்கு ஏற்றது, மடி சமையலின் போதும் செய்வதற்கு நல்லது,