காய்கறிப் பொங்கல்
தேவையானவை :
பச்சரிசி – 1 கப்
பாசிப் பருப்பு – அரை கப்
காய்கறி (பொடியாக நறுக்கியது) – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
கேரட்- 1
வேக வைத்தப் பச்சைப்பட்டாணி- 1 கப்
இஞ்சி – 1 துண்டு
கறிவேப்பிலை சிறிது
நெய் – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – அரை தேக்கரண்டி
உப்பு-தேவைக்கு ஏற்ப
தாளிக்க:
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
பட்டை – துண்டு
லவங்கம் – 2
ஏலக்காய் – 1
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 3 டீஸ்பூன்.
செய்முறை :
1. அரிசி, பருப்பை ஒன்றாக அலம்பி ஆறரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சேருங்கள்.
2. சிறு தீயில் நன்கு வேகவிடுங்கள். பாதியளவு வெந்ததும் நெய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வேகவிடுங்கள்.
3. வெங்காயம், தக்காளி, இஞ்சி போன்றவற்றைப் பொடியாக நறுக்குங்கள்.
4. நெய், எண்ணெயைக் காயவைத்து மிளகு, சீரகம், பட்டை, லவங்கம், ஏலக்காய், தாளித்து வெங்காயம், இஞ்சி சேர்த்து சிறிது வதக்கி காய்கறிக்கலவையைச் சேருங்கள்.
5. சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதங்கியதும் தக்காளி சேருங்கள். 2 நிமிடம் வதக்கி காய் வெந்ததும் பொங்கலில் சேர்த்து நன்கு கிளறுங்கள்.
6. கமகம காய்கறிப் பொங்கல் தயார்.
வெந்தயக்கீரைப் பொங்கல்:
மேற்கூறிய முறையிலே காய்கறிகளுக்குப் பதில் அலம்பி ஆய்ந்து வேக வைத்த வெந்தயக்கீரையைச் சேர்த்து வித்தியாசமான வெந்தயக்கீரை பொங்கலைப் பரிமாறலாம். புதுமை விரும்பிகளுக்கும் ஒரே மாதிரி செய்து அலுத்தவர்களுக்கும் மாற்று வழி.
இன்னொரு முறையில் கோதுமை ரவை, பாசிப்பருப்பு, பசலைக்கீரையைப் பயன்படுத்தி ரவாப் பொங்கல் செய்யும் முறையில் கோதுமை ரவை கீரைப் பொங்கலைச் செய்து அசத்தலாம்.