தேவையானவை:
கோதுமை மாவு- 2 கிண்ண அளவு
வெள்ளை முள்ளங்கி- 2
கொத்தமல்லி- சிறிதளவு
பச்சைமிளகாய்- 2
பூண்டு- 2 பல்லு
சீரகம்- 1 தேக்கரண்டி
காரப்பொடி- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- 1 தேக்கரண்டி
செய்முறை:
1. முள்ளங்கியை அலம்பித் தோல் நீக்கி அரிப்பானில் துருவிக் கொள்ளவும்.
2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, பொடியாக நறுக்கின் பச்சைமிளகாய், துருவின முள்ளங்கி, துருவிய பூண்டு, சீரகம்,காரப்பொடி, உப்பு, மஞ்சள் தூள் அனைத்தையும் கலந்து சுடு நீர் விட்டு சப்பாத்தி மாவுக்குப் பிசைவது போல் பிசையவும். அரை மணி நேரம் ஊற விடவும்.
3. சப்பாத்திக்குச் செய்வது போல் பந்துகளாக உருட்டி, வட்டமாக சப்பாத்தி போல் இட்டு, அடுப்பை ஏற்றிக் கல்லில் போட்டுத் திருப்பி எடுக்கவும். எடுக்கும் வேளையில் எண்ணெயைத் தடவவும்.
இன்னொரு முறை (மூளி பரோத்தா):
1. இம்முறையில் செய்வதை மூளிப்பரோத்தா என்றழைப்பர்.
2. இதே முறையில் முள்ளங்கி, பச்சைமிளகாய், பூண்டு, கொத்தமல்லி அனைத்தையும் வதக்கி நீர் போகப் பிழிந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
3. சப்பாத்திக்குப் பிசைவது போல் பிசைந்து உருண்டைகளாக உருட்டி, இந்த முள்ளங்கி மசாலாவை உள்ளே பூரணமாக வைத்துப் பரோத்தா போல் இட்டு கல்லில் போட்டு எடுக்கலாம்.
4. இம்முறையில் முள்ளங்கி ஈரமில்லாமல் இருந்தால் தான் இட வரும், அதனால் கவனமாகச் செய்ய வேண்டும்.
5. இதற்குத் தால், பனீர் பட்டர் மசாலா, குருமா, கொத்ஸூ போன்றவை அருமையான இணை உணவுகள்.
கூடுதல் குறிப்பு:
மாவைச் சுவைத்துப் பார்க்கும் போது காரம் கூடி விட்டது போல் தோன்றினால் தயிரோ எலுமிச்சைச்சாறோ சிறிதளவு சேர்க்கலாம், சப்பாத்தி போல் செய்யும் வேளைகளின் எண்ணெய்க்குப் பதில் வெண்ணெய் தடவினாலும் ருசி அதிகம்.